”உண்மையை பேசினா அதுக்கு உங்க ஊர்ல நக்கல் பேச்சுன்னு அர்த்தமா எனக்குத் தெரியாது, நான் சூதுவாது அறியாத பிள்ளை”
”யாரு நீயா ஏதோ உன் அதிர்ஷ்டம் பெரிய ஐயா உன்னை போனா போகட்டும்னு விட்டுட்டுப் போயிட்டாரு, இல்லைன்னா நீ பேசின பேச்சுக்கு உனக்கு பெரிய தண்டனை கிடைச்சிருக்கும், இப்படியா அவரோட பகையை சம்பாதிச்சிக்கிட்டியே பாவம் நீ” என சொல்ல அவளோ இளப்பமாக சிரித்துவிட்டு சைக்கிள் ஓட்டியபடி தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.
சங்கமேஸ்வரனோ காரை ஓட்டும் போதே பல வித அதிர்வலைகள் அவரின் நெஞ்சை பதம்பார்த்தது. ஏதேதோ யோசனைகள், தேவையில்லாத கவலைகள் என அவரை வாட்டி வதைத்தது. அதில் எப்படியோ தன் வீட்டை அடைந்தார்.
மறுபக்கம் கார்மெண்ட்ஸில் இருந்து தாமதமாகவே அகத்தியன் வீட்டிற்குச் செல்ல கிளம்பினான் அப்போதே மணி 10 என இருக்க அதிர்ந்தான்
”அடடா இன்னிக்கு நேரம் போனதே தெரியலையே, மணி 10 ஆயிடுச்சி, வீட்ல என்னை தேடுவாங்களே” என சொல்லிக் கொண்டே மறக்காமல் அந்த ஒண்ணே முக்கால் கோடி கணக்குவழக்கு இருந்த ஃபைலை எடுத்துக் கொண்டு வெளியே வர அங்கு வீரனோ பயத்துடன் இருந்தான்
”வீரா என்னாச்சி உனக்கு”
”சின்னய்யா இன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சி, நான் வேற இங்கயே இருக்கேன் என் வீட்ல என்ன பிரச்சனையாகும்னு தெரியலை அதான் பயமாயிருக்கு“
”இதுல பயப்பட என்ன இருக்கு”
”இல்லைங்கய்யா பழைய டிரைவர் சரியான வாய்ப்புக்காக காத்திருந்தான், இப்ப வேற நான் இன்னும் வீடு போய் சேரலை, அவன் என் வீட்டை என்ன செய்வானோன்னு தெரியலைங்கய்யா”