”வெளிய என்னை அடிக்க ஆளுங்க வந்தாங்க, தப்பிக்க உள்ளே வந்தேன்“
”அது இருக்கட்டும் பூட்டின வீட்டுக்குள்ள என்ன செய்றீங்க”
”வீடு பூட்டலையே கதவு திறந்துதானே இருந்தது” என சொல்ல அதிர்ந்தாள் நாச்சியா
அதே நேரம் வாசலை நோக்கி ஒரு உருவம் தலைதெறிக்க ஓடுவதை இவ்விருவரும் கண்டு அதிர்ந்தார்கள்
”ஏய் யார் நீ” என நாச்சியா கத்தியபடியே வெளியே சென்று பார்க்க அந்த வீதியே அமைதியாக இருந்தது, ஆள் நடமாட்டமும் இல்லை. அதில் அவள் குழம்பியபடியே வீட்டிற்குள் நுழைய அங்கு அகத்தியனோ தனக்கு ஏற்பட்ட காயத்தினால் மயங்கி தரையில் சரிந்திருந்தான். அதைக்கண்டு நாச்சியா பதறி உடனே அவனுக்கு தன்னால் முடிந்த வைத்தியத்தை செய்தாள் காயங்களுக்கு மருந்திட்டு கட்டுகட்டி விட்டாள், அவனுக்கும் மெல்ல சுயநினைவு வந்தது
”நாச்சியா” என முனக அவளோ மென்மையாகச் சிரித்து
”என் முழு பேரு ஆண்டாள் நாச்சியா என்னை அடையாளம் தெரியலையா” என மென்மையாக சொல்ல அவனோ குழம்பி அவளின் முகத்தையே பார்த்தான், அவளோ மென்மையாக சிரிக்க அந்த முகம் அந்த சிரிப்பு அந்த பெயர் அவனுக்கு ஏதோ ஒன்றை நினைவூட்ட வந்தது அதற்குள் அவனுக்கு தூக்கம் வர உறங்கிப் போனான். அவன் உறங்குவதைக் கண்ட நாச்சியாவும் அவனுக்காக தலையனை போர்வை என தந்துவிட்டு வீட்டுக் கதவை சாத்திவிட்டு உள் அறையில் உறங்கச் சென்றாள்.
நடுநிசியாகியும் அகத்தியன் வராமல் போகவே சங்கமேஸ்வரனுக்கு கவலை ஆட்கொண்டது வீடே விழித்துக் கொண்டது. அங்கமுத்துவிற்கு கொண்டாட்டமாக இருந்தது காரணம் அவரின் கையில் அந்த ஃபைல் இருந்தது தப்பித்தோம் என்ற நினைப்பில் நிம்மதியாக இருந்தார் மற்றவர்களுக்குதான் அகத்தியன் இன்னும் வரவில்லையே என்ற கவலையில் புலம்பினார்கள். சங்கமேஸ்வரனும் பொறுத்து பொறுத்து பார்த்து அகத்தியனை தேட ஆட்களை அனுப்பினார்.