அவர்களுக்கு முன்பே அங்கே வந்திருந்தார்... தடபுடலான வரவேற்புகளுடன் வீட்டின் உள்ளே அழைத்து சென்றவர்கள், விக்ராந்தை அமர சொல்லி விட்டு கேள்வி கணைகளை தொடங்கினார்கள்...
ஏன் அவனின் பெற்றோர் வரவில்லை? ஏன் அவன் இப்போது அமெரிக்காவில் இருந்து திரும்பினான்? மீண்டும் வெளிநாடு செல்வானா? அவனின் பெற்றோர் எப்போதும் மதுரையில் இருப்பார்களா இல்லை அவனின் திருமணத்திற்கு பின் சென்னை வந்து விடுவார்களா? தங்கைக்கு வயது என்ன? அவளுக்கு திருமணம் எப்போது?
விடாமல் கேள்விகள் தொடர்ந்துக் கொண்டே போனது...!!!
பெண்ணின் அப்பா, அண்ணா, மாமா, சித்தப்பா என ஒவ்வொருவராக கேள்வி கேட்க, பெண் குடும்பத்தினர் பொறுப்பானவர்களாக தான் இருக்க வேண்டும் என்று மனதினுள் சொல்லிக் கொண்டு, பொறுமையுடன் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்ன விக்ராந்த்...! இறுதியில் அவன் பார்க்க வந்திருந்த பெண்ணை ஒரு இரண்டு வினாடிகள் கண்ணில் காட்டி விட்டு உள்ளே அழைத்து சென்று விடவும், விக்கிராந்த் பொறுமையை இழந்தான்...!
“நான் உங்க பொண்ணோட கொஞ்சம் தனியா பேசனும்...”
விக்கிராந்த் அதை சொன்னானோ இல்லையோ, ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு விதமான மாற்றத்தை காட்டியது. பெண் வீட்டினர் தன்னைப் பார்த்து முறைப்பதை உணர்ந்துக் கொண்ட பரமசிவம், விக்கிராந்திடம் நெருங்கி ரகசியக் குரலில் பேசினார்!
“கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி பேசுற பழக்கம் எல்லாம் இவங்க குடும்பத்தில் இல்லை தம்பி... கல்யாணத்துக்கு அப்புறம் காலம் முழுக்க பேச தானே போறீங்க...”
அவர் முழுவதுமாக சொல்லி முடிக்கவில்லை, விக்ராந்தின் அனல் கக்கும் பார்வையில், பாதியிலேயே வாயை மூடிக் கொண்டார்!
🌼🌸❀✿🌷