ரிங் ஆகும் சத்தமே வரவில்லை. சக்தி திரும்பவும் ஃபோனை பார்த்தாள். அதில் சிக்னலே இல்லை!
கடுப்புடன் அதை கீழே வைத்து விட்டு ஜீப்பின் வேகத்தை அதிகமாக்கினாள்.
🌼🌸❀✿🌷
சத்யா காதை தீட்டிக் கொண்டு கவனித்தாள். மெல்லிய காலடி சத்தம் கேட்டது. சத்யா அஹல்யாவை அமைதியாக இருக்க சொல்லி விட்டு எட்டிப் பார்த்தாள்.
அதே நேரம் அரை இருட்டில் சவீதா கையில் இருந்த தடிமனான மரக் கொம்பை கிரிக்கெட் பேட் போல தூக்கிப் பிடித்துக் கொண்டு சத்யா இருந்த பக்கம் பார்த்தாள்.
“சவீதா?” சத்யாவின் குரலில் அதிர்ச்சியை விட குழப்பம் அதிகமாக இருந்தது.
“சத்யா???” சவீதாவும் நம்ப முடியாமல் சத்யா பக்கத்தில் வந்தாள். அவள் பக்கத்தில் அஹல்யா வேறு இருக்கவும் சவீதாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“நீங்க இரண்டுப் பேரும் இங்கே என்ன செய்றீங்க?” சவீதா அவர்களிடமே கேட்டாள்!
“நாங்க செய்றது இருக்கட்டும். நீ என்ன கொம்போட வந்து நிக்குற?” சத்யா சவீதா கையிலிருந்த கொம்பை காண்பித்து வினவினாள்!
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த வீட்டு பக்கம் என்னமோ சத்தம் கேட்டுச்சு சத்யா. லைட் இல்லாம நிழல் மாதிரி யாரோ நடக்குறது தெரிஞ்சது. யாருன்னு பார்த்திடுறதுன்னு நானே வந்தேன். நீங்க இரண்டுப் பேரும் தானா அது?”
“நாங்க இப்போ தான் வந்தோம் சவீதா. நீ பார்த்து எவ்வளவு நேரம் இருக்கும்?”
“பத்து நிமிஷம் மேல இருக்கும்!”