மூன்றுப் பெண்களும் திகிலுடன் பார்த்துக் கொண்டார்கள்.
“சத்யா, வாங்க போயிடலாம். எனக்கு என்னவோ பயமா இருக்கு,” என்றாள் அஹல்யா.
“இருங்க அஹல்யா. இவ்வளவு தூரம் வந்தாச்சு நாம எடுக்க வந்ததை எடுத்துட்டு போயிடலாம்,” என்றாள் சத்யா.
“அப்படி என்ன இருட்டுல தேடுறீங்க?” சவீதா அவர்கள் இருவரின் பேச்சு புரியாமல் கேட்டாள்.
“இப்போ தான் இந்த ரூமுக்கு வந்தோம் சவீதா. லைட் போடுறதுக்கு முன்னாடி நீ க்ரில் திறந்த சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அஹல்யா சில டாகுமென்ட்ஸ் இங்கே வச்சிருக்காங்க. சக்தி அதை எடுத்துட்டு வர சொன்னா.” சத்யா சவீதாவிற்கு விளக்கம் கொடுத்தாள்.
🌼🌸❀✿🌷
அருணின் அறையை ஒட்டி இருந்த பக்கத்து அறை கதவுக்கு பின்னால் மறைந்து நின்றுக் கொண்டிருந்த உருவத்தின் காதிலும் சத்யா சொன்னது கேட்டது. ஏற்கனவே அணிந்திருந்த முகமூடியை கையால் சரி செய்துக் கொண்டது அந்த உருவம். ஷூவில் செருகி வைத்திருந்த கத்தியை கையில் எடுத்துப் பார்த்தது. இருட்டில் வைரம் போல கூர்மையான அந்த கத்தி ஜொலித்தது. திருப்தியுடன் பூனை நடை நடந்து க்ரில் அருகே சென்றது உருவம்.
அஹல்யாவும் சத்யாவும் க்ரில்லிலேயே வைத்து வந்திருந்த பூட்டு சாவியை எடுத்து உள் பக்கமாக பூட்டியது. மீண்டும் பூனை நடை நடந்து வந்தது.
இங்கே பெண்கள் மூன்றுப் பேரும் இப்போது லைட்டை ஆன் செய்திருந்தார்கள். அதனால் எல்ஈடி விளக்கு வெளிச்சம் அங்கே பரவி இருந்தது!
“இது தான் சத்யா நான் சொன்ன கவர். என்ன இருக்குன்னு நான் பார்க்கவே இல்லை!” அஹல்யா சத்யாவிடம் கையில் இருந்த பிளாஸ்டிக் கவரை நீட்டினாள்.