கொடுக்குறேன். எதுக்கும் இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி வைங்க. முடிஞ்சா டிபார்ட்மென்ட்ல இருந்து யாரையாவது உடனே அங்கே அனுப்ப சொல்லுங்க!”
“சக்தி மேடம்,“ அபினவ் பேசுவது தெரிந்தாலும் அழைப்பை துண்டித்து வைத்தாள் சக்தி. தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நல்லதிற்கு இல்லை என்று அவளுக்கு தோன்றியது. ஃபோனை சைலன்ட் மோடிற்கு மாற்றி வைத்தாள். வேக வேகமாக ஜீப்பை ஒட்டி ட்வென்டி ஃபோர்த் க்ராஸ் ஸ்ட்ரீட் வந்து சேர்ந்தாள். அங்கே சாலை வெறிச்சென்று இருந்தது. எல்லா வீட்டிலும் இருந்து டிவி சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. வித்தியாசமாக எதுவும் இல்லை!!!
வீட்டின் முன் ஜீப்பை நிறுத்தி விட்டு திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே சென்றாள். இரும்பு க்ரில் கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது. கதவை தட்டப் போன சக்தி கடைசி வினாடியில் கையை எடுத்துக் கொண்டாள். க்ரில் கதவை பாதுகாப்பிற்கு பூட்டியவர்கள், கேட்டை திறந்து வைப்பார்களா என்ன? சந்தேகம் மின்ன உள்ளே எட்டிப் பார்த்தாள். சின்ன விளக்கு ஒன்றை தவிர வேறு வெளிச்சம் இல்லை. அரவமும் இல்லை!
இருந்தாலும் என்ன என்று பார்த்து விடுவது என்று முடிவுடன் அந்த வீட்டின் வலதுப் பக்கம் இருந்த குறுகலான சின்ன பாதையில் நடந்தாள்.
இந்நேரம் சவீதா வந்திருக்க வேண்டுமே? கேள்வியும் சந்தேகமுமாக எதிர் வீடை பார்த்தாள். அங்கே ஒருவரும் இல்லை!
என்ன யாரையுமே காணோம்?? சக்தியின் முன் ஜாக்கிரதை உணர்வு கண் விழித்துக் கொண்டது.
கவனத்துடன் சத்தம் எழுப்பாமல் மெதுவாக நடந்தாள். வீட்டின் பின் வாசல் மரக் கதவும் உள்ளே தாழ் போட்டு மூடி இருந்தது.
உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று எப்படி கண்டுப்பிடிப்பது? சக்தி மனதில் வந்த கேள்வியுடன் சுற்றிக் கொண்டு வீட்டின் அடுத்த பக்கத்தில் இருந்த நடைப்பாதையில் நடந்தாள்.
எதுவோ தெள்வில்லாத சத்தம் கேட்டது.