“மணி ஆச்சு! ஏங்க நீங்க ரெடியா??? மணி ஒன்பதே முக்கால் ஆச்சு... நிலா நீ ரெடியா?”
மிருதுளா வெற்றிக்கும், கிருத்திகாவிற்கும் சேர்த்து குரல் கொடுத்தாள்!
“நான் எப்போவோ ரெடி,” என்று சொன்னபடி அவள் முன் வந்து நின்றாள் கிருத்திகா!
அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் மிருதுளா.
பச்சை கலரில் மஞ்சள் நிற பூக்கள் நிறைந்த சிந்தடிக் சேலையில் கிருத்திகா அழகிய ஓவியமாக நின்றாள்.
இவ்வளவு அழகாக கிருத்திகா கடந்த சில மாதங்களில் எப்போதும் தெரிந்ததில்லை...
இப்போதும் முகத்தில் பெரியதாக ஒப்பனை எதுவுமில்லை... கழுத்திலும் சின்ன முத்துமாலை மட்டுமே! ஆனால் அவள் மனதில் இருக்கும் சந்தோஷம் முகத்திலும் தெரிந்தது போலும்...
மிருதுளாவின் பார்வையை கவனித்த கிருத்திகா, “என்ன அப்படி பார்க்குறீங்க????” என வினவினாள்.
“ஒரு நாள்ல நிலா கிருத்திகாவா மாறினது ஓகே! ஆனால், ஒரு நைட்ல இப்படி நீ அழகா மாறின ரகசியம் எனக்கு புரியலையே! அதான் யோசிக்குறேன்!”
“போதும், போதும் உங்க கிண்டல்! உங்க கண்ணுல தான் ஏதோ கோளாறு வேற ஒண்ணுமில்லை!”
“நேத்து உன்னை பார்த்துட்டு கல்லு மாதிரி ஒருத்தர் இருந்தாரே, அவர் இன்னைக்கு வாயை ஆ'ன்னு திறக்கலைனா நீ சொல்றது சரின்னு நான் ஒத்துக்குறேன்!”
அதே நேரம் வாசலில் கார்கள் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது.