தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
46. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பின் மாலை பொழுதாகி இருந்தது... கீதா இப்போதும் சஞ்சீவ் வழியாக 'அப்டேட்' அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் அவனின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்...!
இந்துவிடம் மனதில் இருக்கும் கோபங்களை முதலில் நேரடியாக பேசி சரி செய்து விடுவது என்று முடிவு செய்திருந்ததால், அவளிடம் கீதாவால் விபரம் கேட்க முடியவில்லை!
எனவே வேறு வழி இல்லாமல் சஞ்சீவ் வழியாக விஷயம் தெரிந்துக் கொள்ள காத்திருந்தாள்!
நேரம் போய் கொண்டிருந்ததே தவிர சஞ்சீவ் வரும் வழியைக் காணோம்...!
இந்து அப்படி என்ன அவனிடம் சொன்னாள் என தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு அதிகமாகி கொண்டே இருந்தது...
அவளும் வீணாவும் நினைப்பது மட்டும் சரியாக இருந்தால்... இந்துவும் இதே வீட்டிற்கு வந்து விடுவாள்... நினைக்கும் போதே கீதாவிற்குள் உற்சாகம் குமிழிட்டது...!
வேலை முடிந்து வீடு திரும்பிய ராஜீவ் சில நிமிடங்களிலேயே மனைவியிடம் இருந்த பரபரப்பை கண்டுக்கொண்டான்... அவன் என்ன என்று கேட்கவும், கீதாவும் தயங்காமல் அன்றைய இந்து – சஞ்சீவ் மீட்டிங் பற்றி அவனிடம் சொன்னாள்... அப்படியே இந்து மேல் அவளுக்கு இருக்கும் கோபத்தையும் சொன்னாள்!
ராஜீவிற்கு கீதாவின் பரபரப்பு + கோபம் சிரிப்பை வரவழைத்தது.... ஆனால் அவளை எந்த விதத்திலும் வருத்தப் படுத்தி விடக் கூடாது என்ற எண்ணத்தில் கிண்டலாக எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்!
கீதா காத்திருப்பது பற்றி தெரியாதவனாக அன்று சஞ்சீவ் ரொம்பவும் தாமதமாக தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்... கிட்டத்தட்ட இரவு பத்து மணிக்கு வந்தவனிடம், வழக்கமாக இருக்கும் துருதுரு நடையும், விளையாட்டு புன்னகையும் காணாமல் போயிருந்தது. முகத்தில் சோர்வு மின்ன வந்தவனை பார்த்து கீதாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது!