“ஆமாம்... அப்படி தான் எனக்கு ஒரு பட்சி சொல்லுது...”
“உன் ஜோக் மாதிரி இல்லாமல் இந்த பட்சியாவது நல்லதா இருக்கட்டும்! அப்படி ஒரு ஹீரோ வந்தா நல்லா தான் இருக்கும்...” என்றாள் கோகிலா!
🌼🌸❀✿🌷
கணபதியின் குடும்பம், குமாரின் குடும்பம், சரவணன், ஜான்வி, அவளின் கணவன் வைபவ், மூன்று வயது குழந்தை அமலா, ப்ரியா மற்றும் வைஜெயந்தி என காஞ்சிபுரத்திற்கு பெரும் கும்பலாக அனைவரும் ஒன்றாக கிளம்பினார்கள்.
ஆர்த்தியை ரகசியமாக சுட்டிக் காண்பித்து,
“அவ தான் விக்கிராந்துக்கு பார்த்திருக்க பொண்ணு... சீக்கிரமே கல்யாணம் நிச்சயம் செய்ய போறாங்க...” என்று ப்ரியாவின் காதில் சொன்னாள் வைஜெயந்தி.
விக்கிராந்தின் திருமணம் பற்றிய பேச்சு அவ்வப்போது ராஜமின் பேச்சில் இடம் பெறுவதால் அதைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தப் போதும், ஆர்த்தியை பார்த்து சட்டென்று ஒரு கணம் பொறாமைப் படுவதை ப்ரியாவால் தடுக்க முடியவில்லை! தோற்றத்தில் ஆர்த்தி விக்கிராந்திற்கு ஏற்ற ஜோடி தான் என மனதினுள் நினைத்துக் கொண்டாள் அவள்...
ஜான்வி, வர்ஷா அரட்டை அடித்துக் கொண்டே வர, அவர்களுக்கு இணையாக எந்த வித பாகுபாடுமில்லாமல் ராஜமும் பேசுவதை ஆச்சர்யத்தோடு பார்த்தப்படி அமைதியாக பயண நேரத்தை செலவிட்டாள் ப்ரியா.
காஞ்சிபுரத்தில் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு முதலில் சென்றார்கள்... பெண்கள் ஒருபக்கம் ஆண்கள் ஒருபக்கம் என கோவிலினுள் சென்றவர்கள், சன்னிதானத்தை அடைந்த போது, எப்போதும் இருக்கும் பழக்கத்தில் ராஜமின் ஒருபுறம் வர்ஷாவும் மறுபுறம் விக்கிராந்தும் நிற்க, விக்கிராந்தின் அருகே கணபதி நின்று அம்மனை தரிசித்தார்கள்.