தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 15 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“நான் இங்கே தங்குறதா? வேண்டாமே அத்தை...” வைஜெயந்தியிடம் மென்மையாக மறுப்பை பகிர்ந்தாள் ப்ரியா.
அவள் பொதுவாக மற்றவர்களுடன் அதிகமாக பேசுவதில்லை... அவளுக்குள் இருக்கும் கனவுகள், ஆசைகள், விருப்பு, வெறுப்புகள் அனைத்தையுமே அவளின் டைரி மட்டுமே அறியும்...! சரியோ, தவறோ, அவளுக்கு மற்ற சக மனிதர்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை... ஒட்டுதலும் இல்லை...!
ஆனால் இந்த ஃப்ளாட்டிற்கு வந்து தங்கிய சில நாட்களிலேயே ப்ரியாவின் மனதில் என்ன என்று சொல்ல முடியாத குழப்பம் ஏற்பட்டிருந்தது!
ஏன் என்று புரியாமலே, அவளின் நினைவில், தேவையே இல்லாமல், எதிர்பாராத நேரங்களில் அன்று பார்க்கிங்கில் பார்த்த விக்கிராந்தின் அன்பு நிறைந்த முகம் வந்து போய் கொண்டிருந்தது...!!!!
அது மட்டுமில்லாமல், தன் பிள்ளைகளுக்கு சமமாக மல்லுக்கட்டுவதில் தொடங்கி, குடும்பத்திற்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வது வரை, அந்த குடும்பத்தின் ‘ஆல்-இன்-ஆல்’ ஆக இருந்த ராஜமையும் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது...! ராஜம் அளவிற்கு வைஜெயந்தி கூட உரிமையாக ப்ரியாவிற்கு கேட்டு கேட்டு அனைத்தையும் செய்ததில்லை...!
மேலும், நட்புடன் பழகும் வர்ஷா, அன்புடன் பேசும் கணபதி என எல்லா பக்கத்திலும் பாசம் வேரோடி இருந்த அந்த குடும்பத்தை பார்த்து ப்ரியாவிற்கு தான் இழந்துப் போன வாழ்க்கையைப் பற்றிய ஏக்கம் வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டிருந்தது...!
அத்தையுடன் தங்கி இருக்கும் போதே இவ்வளவு மனக் குழப்பம் எனும் போது, இன்னும் சில நாட்கள் கணபதி குடும்பத்தினருடன் தனியாக தங்கி இருந்து மேலும் மனதை வருத்திக் கொள்ள வேண்டுமா என்ற கவலை ப்ரியாவிற்கு இருந்தது...
“என்ன வேண்டாம்? ராஜம் ஆசையா கேட்குறா, நீயே வேணும்னா போய் அவளோட மூஞ்சியில அடிக்குற மாதிரி அதெல்லாம் நான் இருக்க முடியாதுன்னு சொல்லிடு...”