அழகாக கடல் நிற வண்ணம் பூசப்பட்டு இருந்தது. சுற்றும் முற்றும் தோட்டம் இருந்தும் எந்த ஒரு செடியும் இல்லாமல் சாதாரண புற்செடிகள் வளர்ந்திருந்தன. போர்டிகோ வரை வந்தவள் வீட்டுக்குள் செல்லலாமா வேணாமா என யோசித்துவிட்டு தயங்கி நின்றாள்.
அவளை பார்த்துக்கொண்டே ஷெட்டிலிருந்து வந்த ரிஷி அவளின் இந்த பயம் பதட்டம் தடுமாற்றம் கூச்சம் என அனைத்தையும் பார்த்துவிட்டு முதல் முறையாக ரசித்து சிரித்தான். அவன் சிரிப்பதை பார்த்த அர்ஜூனோ
”என்னடா நடக்குது இங்க என்னதான் நடக்குதுன்னு தெரியலயே இது என்னன்னா அத்தான்ங்குது அவர் என்னடான்னா பொண்ணுங்களை பார்த்தாலே சுறா மாதிரி குதறுவாரு இப்ப என்னடான்னா வாளை மீனு மாதிரி குழையறாரு சரியில்லையே” என மனதில் நினைத்துக்கொண்டு ரிஷியிடம் பேச ஆரம்பித்தான்.
”அண்ணா வாங்க உள்ளே இந்தாம்மா நீயும் தான் உள்ளே வா” என அவன் கூறவும் ரிஷியும் நந்தினியும் ஒன்றாக உள்ளே சென்றார்கள்.
வீட்டின் உள்அமைப்பு பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. தரையில் கிரானைட் கற்களை பதிக்கப்பட்டு அழகு படுத்தியிருந்தனர். நந்தினி நடக்கும் போது அந்த கருப்பு கிரானைட் கல்லில் அவள் உருவம் மங்கலாக தெரியுமளவு சுத்தமாக இருந்தது. அவள் அதை பார்த்துக்கொண்டே நடந்தாள் அவனும் அந்த கல்லில் தெரிந்த உருவத்தை பார்த்துக்கொண்டே அவள் கூடவே நடந்து வந்தான்.
அவள் நிதானமாக அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தாள். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பர்னிச்சர்கள் வீடு முழுக்க இருந்தது. ரிஷியின் குணமே இதுதான் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்கிருந்து ஏதாவது ஒரு பொருளை வாங்கி வந்து வீட்டில் வைத்துவிடுவான். வீட்டை அலங்கரிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஹாலில் இருந்த சோபாவின் முன் வந்து நின்றுவிட்டாள். ரிஷியும் அவள் நிற்பதை கண்டு நின்றதும் கூடவே வந்த அர்ஜூன் அவனிடம் சென்று அவனை அழைத்துக்கொண்டு வந்து சோபாவில் அமரவைத்தான். கூடவே தானும் அமர்ந்து கொண்டான்.