தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 25 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தங்களுக்குள் பேசியப்படி அனைவரும் காலை உணவை உண்ண, ப்ரியாவும் அமைதியாக சாப்பிடுவதை தொடர்ந்தாள்.
ராஜம், கணபதிக்கு கொடுத்த புதினா சட்னி, அங்கே அவர் பக்கத்திலேயே இருந்தது!
பேச்சு சுவாரசியத்தில் ராஜம் அதை கவனிக்கவில்லை. வர்ஷாவிற்கும், விக்கிராந்திற்கும் அந்த சட்னி மேல் தனி ஈடுபாடில்லை என்பதால் அவர்களும் அதை கண்டுக் கொள்ளவில்லை.
ப்ரியாவிற்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும் என்ற போதும், அதை கேட்க தயக்கமாக இருந்தது... அந்த குடும்பத்தினர் அனைவருமே அவளை அந்நிய மனுஷியாக பாவிக்கவில்லை என்றாலும், அது போல கேட்டு வாங்கி சாப்பிட அவளுக்கு மனம் வரவில்லை...
அதனால், அமைதியாக அவளின் அருகில் இருந்த தேங்காய் சட்னியை எடுத்துக் கொண்டு சாப்பிடுவதை தொடர்ந்தாள்...
தொடர்ந்து பேசிய படி சாப்பிட்டுக் கொண்டிருந்த விக்கிராந்த், ப்ரியா அமைதியாக இருப்பதை உணர்ந்தான். அவளையும் பேச்சில் இணைத்துக் கொள்ளும் எண்ணத்துடன் அவள் பக்கம் பார்த்தவன்,
“ஹேய் ப்ரியா, புதினா சட்னி பிடிக்கும்னு சொல்லிட்டு ஏன் தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டுட்டு இருக்கீங்க?” என்றான்.
“அது... இல்லை...” ப்ரியா தடுமாற்றத்துடன் என்ன சொல்வது என்று யோசிக்க,
“அடடா, நான் தான் பேச்சு சுவாரசியத்தில் மறந்துட்டேன்... என்ன பொண்ணும்மா நீ, கொஞ்சம் கேட்க கூடாதா,” என்று சொல்லிக் கொண்டே புதினா சட்னியை ஸ்பூனில் எடுத்து ப்ரியாவின் தட்டில் வைத்தாள் ராஜம்!
“பரவாயில்லை ஆண்ட்டி, அதெல்லாம் ஒண்ணுமில்லை,” என சங்கோஜத்துடன் சொன்னாள் ப்ரியா!