நரேந்திரனின் குடும்பம் அன்று ரமேஷின் வீட்டிலேயே தங்குவதாக முடிவு செய்தார்கள். ரமேஷ் தயக்கத்துடன்,
“உங்க வீடு அளவுக்கு வசதி எல்லாம் இருக்காது, ஆனால் மற்றபடி...” என்று சொல்ல தொடங்கவும், அவன் பேச்சில் குறுக்கிட்டு,
“உனக்கு ரொம்பவே தன்னடக்கம் ரமேஷ்... உன்னோட வயசுல நான் எப்படி இருந்தேன்னு சொன்னா நீ நம்ப கூட மாட்ட... நான் வளர்ந்த வீடு இந்த வீட்டோட அளவுல பத்துல ஒரு பங்கு கூட இருக்காது... கற்பகமும் நானும் இப்போவும் கூட நேரம் கிடைக்கும் போது அங்கே போவோம்... எங்களுக்கு இதெல்லாம் பழக்கம் தான்... இந்த வயசிலேயே நீ சொந்த வீடெல்லாம் வச்சிருக்கதே உன்னுடைய பொறுப்புணர்ச்சியை காட்டுது... அது மட்டும் இல்லாம பாரதியை உங்க வீட்டு பொண்ணா நினைச்சு நீங்க எல்லோரும் சீராட்டுவதை பார்க்கும் போது தான் இந்த உலகத்தில் நல்லவங்க இன்றும் இருக்காங்கன்னு தெரியுது,” என்றார் நரேந்திரன்!
அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த பாரதி பவித்ராவை யோசனையோடு பார்த்தாள். உமாவுடன் பேசிக் கொண்டே சமையலில் கவனத்தை வைத்திருந்த பவித்ரா அவளின் பார்வையை கவனிக்கவில்லை.
🌼🌸❀✿🌷
அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசியபடி சாப்பிட்டனர். உணவு உண்ணும் போது, மற்றவரின் கவனத்தை கவராமல் தன் அருகில் இருந்த விவேக்கிடம் ஒரு காகிதத்தை ரகசியமாக கொடுத்தாள் பாரதி. அதை வாங்கி கொண்ட விவேக், என்ன என்பது போல் பார்க்கவும், மற்றவர்களுக்கு தெரியாமல் அதை படிக்க சொல்லி கிசுகிசுத்தாள் பாரதி.
அவர்கள் இருவரும் ரகசியமாக பேசிக் கொள்வதை கவனித்த ரமேஷ், விவேக்கிடம், “என்ன மச்சான், ஹனிமூன் போகலையா? எப்போ தான் ஃப்ரீயாக போறீங்க?” எனக் கேட்டான்.
“போகனும், புதன் ஒரு ஃப்ரென்ட் வீட்டுல லஞ்சுக்கு கூப்பிட்டு இருக்காங்க... அதை முடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தான்,” என்றான் விவேக்!