”என்னது இல்லை அப்படியிருக்காது என்னை பிடிக்காம எதுக்காக இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்யனும்”
“அது யாருக்குத் தெரியும், இந்நேரம் பெரியவாளை பார்த்து சொல்லிட்டு போலாம்னு பார்த்தா யாருமே இங்க இல்லை, அதனால உன்னாண்ட சொல்லிண்டுப் போறேன்மா இந்தா மாங்கல்யம் கையில வைச்சிக்கோ, இங்கிருக்கற பிரச்சனை முடிஞ்சி கல்யாணம்னு சொன்னதும் மறக்காம என்னை கூப்பிடுங்கோ நானே வந்து முறையா கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் அது வரைக்கும் இது உன்கிட்டயே இருக்கட்டும், அப்ப நான் கிளம்பறேன்மா” என சொல்லிவிட்டு அவர் தன் அசிஸ்டென்டை அழைத்துக் கொண்டுச் சென்றார்.
அவள் தன் வாழ்நாளில் என்றும் இல்லாமல் இன்று கலங்கினாள். பிறந்த போது அழுததுதான் அதன் பிறகு எதற்குமே கவலையடைந்து அழுததில்லை, அழும் அளவு எதுவும் நடக்கவில்லை மகிழ்ச்சியாக ஆனந்தக்கண்ணீர் விட்டிருக்கிறாள் அதுவும் எப்போதோதான் அதனால் அவளுக்கு அழுகை என்றால் என்னவென கேட்டுச் சிரிப்பாள் ஆனால், இன்று அவளைப் பார்த்தே அவளின் சொந்தங்கள் இளப்பமாக சிரித்தது. அவள் கண்கள் கலங்கிவிட்டது. அமைதியாக மேடையைவிட்டு விலகி தன் தந்தையைக் காணச் சென்றாள்.
கூட்டத்திற்கு நடுவில் அவள் தந்தையை தேட அவளை பார்த்த அனைவரும் வேண்டுமென்றே உண்மை என்னவென தெரியாமல் அவளின் மனம் நோகும்படியே பேசி வைத்தார்கள்
”இவளுக்கு என்ன குறைன்னே தெரியலை, டாக்டர் பையனே இவளை வேணாம்னு சொல்லிட்டான் சென்னையில இருந்தப்ப என்ன காரியம் செஞ்சாளோ என்னவோ” என ஒருவர் பேச அவளுக்கு அவமானமாகிப் போனது
”சென்னையில இருந்து மதுரையில வரனைப் பார்க்கறப்பவே எனக்கு சந்தேகம் வந்துடுச்சி ஆனா, இப்ப அது கன்பார்ம் ஆயிடுச்சி, பொண்ணு ஏதாவது தப்பு செஞ்சிருக்கனும் இல்லைன்னா இவ்ளோ தூரத்தில பையனை தேடுவாங்களா என்ன“
”ஏதாவது காதல் கீதல் பிரச்சனையோ“