இதுக்கெல்லாம் காரணம் அந்த தில்லைதான் ஆனா, அவனால நாமதான் கஷ்டப்படறோம், அவனை சும்மா விடக்கூடாது ரஞ்சனி“
”அண்ணா வேணாம்ணா அவனால என்ன செய்ய முடியும்னுதான் காட்டிட்டானே, நாங்களே உடைஞ்சிப் போயிருக்கோம், அவருக்கு வேற ஆப்ரேஷன் நடக்குது இந்தச் சமயம் அந்த தில்லையை பகைச்சிக்க வேணாம்ணா”
”அதுக்குன்னு நியாயம் அநியாயம் இல்லையா, அவனால நம்ம குடும்பம்தான் கஷ்டப்படுது, அதுக்கு நியாயம் கேட்க வேணாமா, நான் அவனைத் தேடிப் போறேன், சிதம்பரத்தில யார்கிட்ட தில்லையை பத்தி கேட்டாலும் சொல்லிடுவாங்களாம், அவ்ளோ பேமஸா இருக்கான், ரௌடின்னு பேரெடுத்தவன், அவனுக்கும் சங்கரனுக்கும் என்ன சம்பந்தம், எதுக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தினான்னு கேட்கனும், அதுக்கப்புறம் அவனை நாக்கு புடுங்கற மாதிரி கேள்வி கேட்டு நியாயம் கேட்கனும், அவனால நமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அவன் மன்னிப்பு கேட்கனும், எந்த ஊர் முன்னாடி நாம அவமானப்பட்டு இந்த நிலைமைக்கு ஆளானோமோ அதே ஊர் முன்னாடி அவன் வந்து மன்னிப்பு கேட்டு நம்ம பொண்ணு சம்யுக்தா நல்லவள்னு நிரூபிக்கனும் அதுவரைக்கும் அவனை நான் விடறதாயில்லை” என பொங்க அதற்கு சிவரஞ்சனியோ
”அண்ணா வேணாம்ணா, இப்ப நாம இருக்கற நிலைமைக்கு இது தேவையா, அவர் கண் விழிக்கட்டும்ணா அப்புறமா என்ன செய்யலாம்னு யோசிக்கலாம், எங்களுக்கு துணையா நீ இருண்ணா அது போதும்” என கெஞ்ச அதில் அவரும் சற்று மனம் இரங்கி தங்கைக்கு சமாதானம்படுத்திக் கொண்டிருந்தார்.
திருமணம் நின்றதும் சிவரஞ்சினியின் குடும்பமே அங்குதான் இருந்தது, அதிலும் அவரின் தாய் தந்தைக்கும் வேதனையாக இருந்தது, இதில் ஆஸ்பிட்டல் வரை எதற்கு அழைத்து வரவேண்டும் என்று சம்யுக்தாவின் தாத்தா பாட்டியை ஓட்டலில் தங்க வைத்துவிட்டார் கைலாசம், அவரும் அவரின் குடும்பம் மட்டுமே இங்கு ஆஸ்பிட்டலில் தங்கைக்கு துணையாக இருந்தது.
இதில் கைலாசம் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் சம்யுக்தாவின் காதில் நுழைந்து மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது.