எப்படி இருந்தாலும் அவனுக்கு அவள் இல்லை!
✽✽✽
ஜன்னல் பக்கம் இருந்து பார்வையைத் திருப்பி, பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் சத்யா...
அந்த நாளை பற்றி இப்போது நினைத்தாலும் அவனுக்கு வலித்தது!
முன்பு பட்டு புடவையில் பார்த்த தேன்மொழிக்கும், இன்று சுரிதாரில் பார்த்த தேன்மொழிக்கும் பெரிதாக வேறுப்பாடு எதுவும் அவனுக்கு தெரியவில்லை.
தேவதை புடவையில் இருந்தால் என்ன, சுரிதாரில் இருந்தால் என்ன?
ஆனால் அவளுக்கு திருமணமாகி இருக்குமோ?
"என்ன சத்யா ரொம்ப யோசிக்குற???"
அருகில் ஒலித்த சங்கீதாவின் குரலில் திரும்பியவன்,
"ஏன் சங்கீ, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையான்னு பார்த்தே கண்டுப் பிடிக்க முடியுமா?" என்றுக் கேட்டான்.
அவனை ஒரு பார்வை பார்த்த சங்கீதா,
"யாரைப் பத்தி கேட்குற?? இன்னைக்கு காலையிலே லிஃப்ட்ல பார்த்தோமே அவளையா?" என்றாள்.
“சங்கீ! உனக்கு எப்படி தெரியும்???”