மேலே கண்மணி சொன்னதை கேட்க விடாமல் முருகனின் குரல் அவனின் பக்கத்தில் கேட்டது!
"சத்யா, இங்கே இருக்கீங்களா? என்ன சார் நீங்க? தண்ணி வேணும்னு சொல்லி இருந்தா நானே எடுத்துட்டு வந்து தர சொல்லி இருப்பேனே? நீங்க வி.ஐ.பி சார்!!! சரி, வாங்க லஞ்ச்க்கு போகலாம்..."
மறுக்க முடியாமல் முருகனுடன் சென்றான் சத்யா. அவர்களுக்கு என்று தனியறையில் பரிமாற பட்ட உணவை முடித்தவன், சிகரெட் பிடிக்க சென்ற முருகனை அனுப்பி விட்டு, அந்த கம்பெனியின் கேன்டீன் பக்கம் சென்றான்.
அங்கே காஃபி விற்கப் படுவதை பார்த்து அதிர்ந்துப் போனவன், கண்மணியை மனதில் திட்டினான், "நல்ல ஃப்ரெண்ட்ம்மா நீ"!!!
✽✽✽
காஃபியும் கையுமாக சத்யா தேன்மொழியின் அறையை அடைந்தப் போது, கண்மணி இன்னமும் அங்கேயே தான் இருந்தாள். யோசிக்க ஒரு நொடியும் எடுத்துக் கொள்ளாது, கோபத்துடன் உள்ளே சென்றான் சத்யா!
"என்ன ஃப்ரெண்ட்ங்க நீங்க? தலைவலின்னு ஒரு ஃப்ரெண்ட் காஃபி கேட்டால் இப்படி பொய் சொல்றீங்க? வாங்க முடியாதுன்னா, வாங்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?"
சத்யா திடீரென்று அறைக்குள் வந்ததுமே பெண்கள் இருவரும் என்ன என்ற கேள்வியுடனே மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்கள்!
அவன் தொடர்ந்து மூச்சு விடாமல் பொரிந்து தள்ளவும்... கண்மணி ஒரு வித ஆர்வத்துடன் அவனை பார்த்தப் படி நிற்க, தேன்மொழி அவசர அவசரமாக அவனின் பேச்சில் குறுக்கிட்டுப் பேசினாள்.