****திருப்பூர்****
“அஹல் எழுந்திரி, என்ன இவ்ளோ நேரம் தூங்குற” என்று அடித்து எழுப்பிக்கொண்டு இருந்தாள் அர்ச்சனா.
கண் விழிக்க முடியாமல் லேசாக கண் சிப்பியை திறந்து பார்த்தாள் அஹல்யா. ஓரிரு முறை பார்த்தப் போதினும் அர்ஜுனின் முகம் அவள் மனதில் படிந்து போக அவனை கனவிலாவது பார்க்கலாம் என்றுதான் இப்போதெல்லாம் தூங்குகிறாள் அதையும் அர்ச்சனா கெடுக்க சிறு கோபத்துடனே எழுந்தாள்.
“என்னடி இப்போ என்ன அவசரம்னு என்னை எழுப்புற?” என்று சிறிது கடிந்துக் கொண்டாள்.
“அது சரி என்ன அவசரமா? ஹலோ மேடம் இன்னும் ஒரு வாரத்துல செமஸ்டர் எக்ஸாம் தெரியும்ல லைப்ரரி போய் புக்ஸ் எடுக்கணும் எழுந்திரி கிளம்பு” என்று அவசர படுத்திக்கொண்டிருந்தாள். அர்ச்சனா கூறியும் எந்த அசைவும் இல்லாமல் அஹல்யா ஏதோ யோசனையில் அமர்ந்து இருக்க அவள் மனம் அர்ச்சனாவிற்கு புரிந்துப்போனது. அவளது கைகளில் தன் கை வைத்து, “நீ தேவை இல்லாமல் கற்பனை பண்ணிக்கிற அஹல் உன்னை மாத்திக்கோ” என்று பொறுமையாக கூறினாள்.
இது முதல் முறை அல்ல இதே போல் அர்ச்சனா பல முறை பலவிதமாக கூறி பார்த்தும் பயனில்லை ஆனாலும் அவள் விடுவதாக இல்லை தன் தோழி ஏமாற்றம் அடைந்து விட கூடாது என்ற அக்கரையில் விடாமல் முயற்சி செய்து பார்க்கிறாள். அர்ச்சனாவின் மனம் புரிந்தும் மெல்லிய புன்னகையுடன் “நான் ஏமாற மாட்டேன் அர்ச்சு கவலை படாத” என்று எப்போதும் போல் அவள் அதே பதிலை தந்தாள்.
பொறுமை இழந்த அர்ச்சனா “என்ன ஏமாற மாட்ட நம்பிக்கை வர மாதிரி என்ன நடந்துச்சு உன்னை அவர் லவ் பண்றேன்னு சொன்னாரா இல்லையே? பின்ன என்ன நம்பிக்கை உனக்கு?” என்று அவள் கோவமாக கேட்டாள்.
இருக்குடி நம்பிக்கை தர விஷயம் ஒன்னு இருக்கு அன்னைக்கு அவன் பார்த்த பார்வையை நீ பார்க்கலை எனக்கு அது நான் உன்னை காதலிக்குறேன்னு சொன்னுச்சு, வெறும் ஈர்க்கும் பார்வை இல்லை அது என்று அவள் மனம் அரற்றியது. அஹல்யா பேசாமல் இருக்க மேலும் கோவத்துடன் தொடர்ந்தாள் அர்ச்சனா
“எந்த காலத்தில இருக்க அஹல் நீ, இந்த காலத்துல பார்த்து பழகினாலே ஏமாத்துறாங்க பார்க்காம காதல் எல்லாம் முட்டாள் தனமா தெரியலை?!” என்று தன் மனத்தாங்கலை கொட்டினாள்.
“இல்லை அர்ச்சனா எல்லா காதலையும் அப்படி சொல்லாத இது எனக்கு சரின்னு படுது” என்று தீர்க்கமாக கூற அவளை புரியாமல் பார்த்தாள்.
“எனக்கு இது முட்டாள் தனமாய் தோணுது அஹல், எல்லா விஷயத்துலயும் தெளிவாய் இருக்குற நீ, ஏன் இப்படி முட்டாள் மாதிரி நடந்துக்குற இந்த விஷயத்துல?” என்று நொந்துக்கொண்டாள்.
காதல் மீண்டும் அவள் கண்ணை மறைக்க மீண்டும் அர்ச்சனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அர்ச்சனாவின் கைகளை அழுத்தி “என்னை நம்பு அர்ச்சு, அவரை திரும்பியும் பார்ப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, அப்படி பார்க்கும் போது நான் அவர் என்ன காதலிக்குரார்னு நிருபிக்குறேன் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு” என்று வேண்டினாள்.
அவளது தோழியின் காதல் புரியாமல் இல்லை ஆனால் இவள் உருகும் அளவிற்கு அர்ஜுன் இவளை காதலிப்பானா என்று சந்தேகமாக இருந்தது அர்ச்சனாவிற்கு.
“இன்னும் எத்தனை நாள் அஹல் இந்த செமஸ்டர் முடிஞ்சதுனா பி.காம் முடுச்சுடுவ வீட்ல கல்யாணம் பண்ண முடிவு பண்ணால் என்னனு சொல்ல போற?” கவலையாக கேட்டாள் அவளது தோழி.
“இப்போதைக்கு அந்த பேச்சே வேண்டாம் அர்ச்சு, நான் அப்பா கூட கடைய பார்த்துகிட்டே எம்.பி.எ படிக்கலாம்னு இருக்கேன்” என்று அர்ஜுனுக்காக காத்திருக்கும் முயற்ச்சியில் எடுத்த தன் புது யோசனையை கூறினாள். அதை புரிந்து கொண்ட அர்ச்சனா இந்த காதல் எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றுகிறது என்று தன் தோழிக்காக நொந்துக்கொண்டு இதழோரம் வெறுமையான முறுவலை அளித்தாள்.
முக்காதல் மூன்று விதமான காதல் இதன் பயணம் நீடிக்குமா?!
பயணம் தொடரும்...
{kunena_discuss:676}