ஹேய்! இன்னைக்கு உனக்கு வெட்டிங் டேவா? எனக்கு வெட்டிங் டேவா?
ஏன் உங்களுக்கு தான்னு வெச்சுக்கோங்களேன் என்று ஸ்வேதா சொல்ல, அந்த நேரத்தில் எல்லார் இதழ்களிலும் தவழ்ந்த புன்னகையின் காரணம் அவளுக்கு .புரியவேயில்லை
அவளுடைய அப்பாவையும் அழைத்து செல்லலாமா? மனோவின் மனம் சற்று அலைப்பாயந்தது. அவர் இனிமேல் எதற்கும் தடையாக இருக்க மாட்டார் என்றே தோன்றியது. ஆனால் சில நிமிடங்களில் வேண்டாமென்ற முடிவுக்கு வந்திருந்தான். அவரை பார்த்தால் அர்ச்சனாவின் மனநிலை மாறிவிடக்கூடும்.
கிளம்பும் நேரத்தில் ஏதோ யோசித்தவளாய் தயங்கி நின்றாள் சாந்தினி. 'நான் அப்புறம் வரேன் நீங்க போங்க.'
'நீ எப்படி தனியா வருவே?
'ப்ளீஸ்ண்ணா நீங்க கிளம்புங்க நான் வந்திடுவேன்' என்றவளை ஏற இறங்க பார்த்துவிட்டு நகர்ந்தான் மனோ.
ஸ்வேதாவின் அப்பா, அம்மா, விவேக் உட்பட அனைவரும் கிளம்பியிருந்தனர்.
கார் அந்த ஹோடேலின் வாசலில் சென்று நின்றது. கீழே இறங்கிய அர்ச்சனா ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று விட்டிருந்தாள் 'இங்கே எதற்கு அழைத்து வந்திருக்கிறான் இவன்?'
அது மனோ நிச்சியதார்த்தம் நடந்த அதே ஹோட்டல்.
காரை விட்டு இறங்கிய எல்லார் குறுகுறு பார்வையும் அவள் மீதே நிலைத்தது.
கீழே இறங்கிய மனோ அவள் அருகில் வந்து 'எதுக்கு எல்லாரும் என் தங்கச்சியை அப்படி பார்க்கறீங்க? போங்க எல்லாரும். நான் அவளை கூட்டிட்டு வரேன்' என்றபடியே அவள் தோளை அணைத்துக்கொண்டான்.
என்ன மனோ? என்றவளை பார்த்து புன்னைகைத்த படியே 'அட ஒண்ணுமில்லை வாடா என்று அழைத்து சென்றான். ஏதோ ஒன்று லேசாய் புரிய துவங்கியது.
நடந்தவர்கள் எல்லாரும் அந்த ஹோடேலின் தோட்டத்தில் இருந்த மேஜையில் சென்று அமர்ந்தனர். சில்லென்ற பனிக்காற்று எல்லாரையும் தழுவி விளையாடிக்கொண்டிருந்தது. அவளை தன் அருகே அமர்த்திக்கொண்டு அமர்ந்தான் மனோ. அவளுக்கு மற்றொரு பக்கத்தில் அமர்ந்தாள் ஸ்வேதா.
எல்லாருடைய கவனமும் அவள் மீதே இருந்த போதிலும் மெனு கார்டில் கவனத்தை செலுத்துவதை போலே பாவனை செய்துக்கொண்டிருந்தார்கள்.
அருகில் வந்த சர்வரை பத்து நிமிடங்கள் கழித்து வர சொல்லி அனுப்பினான் மனோ.
சில நிமிடங்கள் பார்வையை கூட நிமிர்த்தாமல் அமர்ந்திருந்தவள், அதற்கு மேல் தவிர்க்கவே முடியாத தவிப்பில் கண்களை மெல்ல மெல்ல நிமிர்த்தி தோட்டத்தை சுற்றி பார்வையை சுழல விட்டாள்.........
'ப்ளீஸ்.......வழிவிடுங்களேன்......
'ம்.........' விடறேன்........ விடறேன்'
'ப்ளீஸ்.......வசந்த்.....எனக்கு.....'
இரு.., இ....ரு ,ஒரு நி....மிஷம்.....ஒண்ணும் பண்ணிட மாட்டேன் உன்னை
எதற்கும் கட்டுப்படாத கண்கள் தேடின. இங்கே எங்கேயாவது அமர்ந்திருக்கிறானா அவன்?
அந்த நேரத்தில் தன் கைப்பேசியை அழுத்தினான் மனோ 'டேய் ஹீரோ எங்கேடா இருக்கே? கார் பார்க் பண்ணிட்டிருக்கியா? சரி. சீக்கிரம் வாடா. உனக்காகத்தான் எல்........லாரும் வெய்டிங். என்றான் அவளை பாத்தபடியே.
குலுங்கி நிமிர்ந்தாள் அர்ச்சனா. வருகிறானா அவன்? நிஜமாகவே வருகிறானா?
சட்டென கண்களை தாழ்த்திக்கொண்டாள். எப்படி நிமிர்ந்து பார்ப்பேன் அவனை? அந்த தகுதி இருக்கிறதா எனக்கு? இங்கிருந்து போய் விடலாமா? அதற்கும் மனம் வரவில்லை அவளுக்கு.
அவள் சுவாசத்தை பிடித்து அழுத்திக்கொண்டு நகர்ந்த அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு அவளுக்குள்ளே இருந்து ஏதோ ஒன்று அவன் வருகிறான் என்று உணர்த்தியது
நடந்து வந்தான் வசந்த். கம்பீரமாக நடந்து வந்து அமர்ந்தான் வசந்த். அந்த நிமிடத்தில் எல்லாரும் அப்படியே வியந்துதான் போனார்கள்
அவளுக்கு எதிரில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தான் வசந்த். .வந்து அமர்ந்தவனின் கண்கள் நேராக அவளிடம் தான் சென்றன.' கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்'
சில நிமிடங்கள் அங்கே அப்படி ஒரு மௌனம் நிலவியது . யார் முதலில் பேச துவங்குவது என்று தெரியாத அதிர்ச்சி கலந்த மௌனம்.
நிமிரவில்லை அர்ச்சனா. ஸ்வேதாவின் கையில் இருந்த மெனு கார்டை வாங்கிக்கொண்டு அதில் கண்களை புதைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
மௌனத்தை உடைத்து எல்லாரையும் நலம் விசாரிக்கும் அவள் பெரியப்பாவின் குரல் மட்டும் கேட்டது அவளுக்கு.
தன் எதிரே அமர்ந்திருப்பவனின் பார்வை அவள் மீது பதிந்து, பதிந்து விலகுவதை மட்டும் அவளால் நன்றாய் உணர முடிந்தது .உள்ளுக்குளே படபடத்தது. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்
'ரொம்ப தவிக்கிறார். கொஞ்சம் நிமிர்ந்துதான் பாருங்களேன்' காதுக்குள் கிசுகிசுத்தாள் ஸ்வேதா. உள்ளுக்குள் பொங்கிய தவிப்பை அப்படியே அழுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
அவள் மனதை உணர்ந்தவனாய் மெல்ல துவங்கினான் விவேக். 'ஆமாம் மனோ, இந்த ஹோட்டலுக்கு இதுக்கு முன்னாடி நாம எப்பவாவது வந்திருக்கோமா?' பார்த்தா மாதிரியே இருக்கே? எதுவுமே தெரியாதவனாய் கேட்டான் .
மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்தோமே விவேக் ஞாபகம் இல்லையா உங்களுக்கு.? அவளை பார்த்தபடியே கேட்டான் மனோ.
தன்னை எதுவுமே பாதிக்காதது போல் மெனு கார்டை மனப்பாடம் செய்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அப்போ அழகா ஒரு பொண்ணு, 'எனக்கு வசந்தை ரொம்ப பிடிச்சிருக்கு பெரியப்பான்னு சொல்லிச்சே?
அப்படியா? யாருப்பா அது? என்ற விவேக்கின் கண்கள் அவளை ஊடுருவின. அவள் கண்கள் நிமிரவில்லை.
'வேற யாரு என் தங்கச்சிதான்' என்று மனோ சொன்ன நொடியில்,
'அது உன் தங்கச்சி இல்லை மனோ. என் பொண்டாட்டிடா, என் உயிர்டா அவ' என்று அந்த குரல் ஒலிக்க அதற்கு மேல் தாங்க முடியாமல் அப்படியே சிலிர்த்து தவித்து நிமிர்ந்தாள் அர்ச்சனா.
அவள் நிமிர்ந்து தவிப்புடன் அவன் கண்களை சந்தித்த மறு நொடி அவள் கண்கள் சரேலென விரிந்தன.
ஒரு நொடி தன் அருகில் அமர்ந்திருந்தவரை திரும்பி பார்த்து விட்டு, அவளை பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தான் வசந்த்.
அவன் அருகில் அமர்ந்திருந்தார் அவள் அப்பா!
கண்களில் மெல்ல மெல்ல நீர் சேர வியப்புடன் சில நொடிகள் வசந்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. 'இவனை என்னவென்று சொல்வது?.
அத்தனை பெரிய துரோகத்தை சந்தித்த பின்னரும், அத்தனை பெரிய வலியை அனுபவித்த பின்னரும் இவரை தன்னுடன் அழைத்து வந்திருக்கிறானே இவனை என்னவென்று சொல்வது.
பின்னர் அவள் கண்கள் மெல்ல நகர்ந்து அப்பாவின் மீது பதிந்தன. 'பார்த்தீங்களாப்பா? என் வசந்தை பார்த்தீங்களா? அவள் கண்கள் அவரை கேட்டன.