அப்படீன்னு உங்களுக்கு யார் சொன்னா? என்றாள் சாந்தினி. நீங்க சேர்த்து வைக்காம அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டங்க.
எனக்கும் ஒரு அப்பா இருக்கார். எனக்கு ஒரு அப்பாவோட மனசும் தெரியும், பொண்ணோட மனசும் தெரியும்.
மெல்ல நிமிர்ந்து அந்த சின்ன பெண்ணை வியப்புடன் பார்த்தார் அவர்.
நானும் எங்கப்பாவோட நிறைய சண்டை போட்டிருக்கேன். போன வருஷம் இப்படித்தான் ஒரு பெரிய சண்டை. ஒரு வாரம் நாங்க ரெண்டு பெரும் பேசலை. அப்போ திடீர்ன்னு அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, உயிருக்கு போராடிட்டிருந்தார். அப்போ நான் எவ்வளவு துடிச்சு போயிட்டேன் தெரியுமா. எங்கப்பா எனக்கு இல்லாம போயிடுவாரோன்னு ரொம்ப பயந்துட்டேன். அப்புறம் அவர் பிழைச்சு வந்திட்டார். அதிலேருந்து நான் அவரோட சண்டை போடறதே இல்லை.
இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா
ப்ளீஸ் அங்கிள். இந்த உலகத்திலே யாருக்கு எப்போ என்ன வரும்னு தெரியாது. இருக்கும் போது நம்மாலே முடிஞ்ச வரை எல்லாரையும் சந்தோஷமா வெச்சுப்போம் அங்கிள். ப்ளீஸ் அங்கிள் அவங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா ஆக்கிடுங்க அங்கிள். நீங்களும் சந்தோஷமா ஆகிடுவீங்க.
அந்த சின்ன பெண்ணிடம் ஏதோ ஒரு பாடம் படித்து போலே இருந்தது அவருக்கு. எப்படிப்பட்ட மனம் இவளுக்கு. தனக்கு சம்மந்தமே இல்லாத இரண்டு பேருக்காக இவ்வளவு தவிக்கிறாளே. நான் எல்லாரிடமும் எவ்வளவு சுயநலமாக நடந்து கொள்கிறேன். இந்த நிமிடத்தில் கூட என்னால் இங்கே இருக்க முடியாது என்று சுயநலமாக யோசிக்கிறேனே?
சட்டென அவளிடம் கேட்டார் 'உன்கிட்டே வசந்த் நம்பர் இருக்காமா?
அடுத்த சில நிமிடங்களில் அவர் முன்னால் வந்து அமர்ந்தான் வசந்த். அங்கே நின்றிருந்தாள் சாந்தினி.
அவனிடம் எப்படி துவங்குவது என்று தெரியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தவரை பார்த்துக்கேட்டான். 'சொல்லுங்க நான் என்ன செய்யணும்'
ஏனோ அந்த வார்த்தை அவரை உலுக்கியது 'என் மீது கொஞ்சமும் வெறுப்பு இல்லாமல் நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறானே?
எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டார் அப்பா 'என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோபா அது போதும். உன் கூட இருந்தா தான் என் பொண்ணு சந்தோஷமா இருப்பா. அது எனக்கு எப்பவுமே தெரியும். ஆனால் என் சுயநலம் என்னை யோசிக்க விடலை.
மெல்ல எழுந்தான் வசந்த் 'என்னை மன்னிச்சிடுன்னு நான் கேட்க முடியாது. நீ மன்னிக்க கூடிய தப்பை நான் பண்ணலை. சும்மா வார்த்தையிலே மன்னிச்சிடுன்னு சொல்றதிலே அர்த்தமில்லை உனக்கு மட்டுமில்லை என் பொண்ணுக்கும் நான் துரோகம் பண்ணி இருக்கேன். அவ என்னை மன்னிக்க போறதே இல்லை.
நீ என் பொண்ணை நல்லபடியா பார்த்துக்கோ எனக்கு அது போதும். அதுக்கு மேலே நீ எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்.' வேணும்னா உங்க கண்ணிலே படாம நான் எங்கேயாவது போயிடறேன். மனதில் உள்ளதை படபடவென கொட்டி தீர்த்து விட்டிருந்தார் அவர்.
எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வு அவருக்கு.
வசந்திடம் ஒரு பெருமூச்சு எழுந்தது.' போதும் சார் என்றான். எல்லாரும் நிறைய தண்டனை அனுபவிச்சாச்சு. போதும். இனிமேல் யாருக்கும் எந்த தண்டனையும் வேண்டாம். உங்களுக்காக உங்க பொண்ணு நிறைய அழுதிட்டா முதல்லே அவளை சிரிக்க வைங்க. என்றான் நிதானமாக..
அவன் சொல்வதையெல்லாம் கேட்ட படி வசந்தின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ச்சனா மெல்லக் கேட்டாள் 'ஏன் வசந்த் உனக்கு அவர் மேலே கோபமே வரலியா?
'கோபம் தான் அர்ச்சனா. ஒரு மகனா எனக்கு அவர் மேலே நிறைய கோபம் தான் .ஆனா அவர் மனசாட்சியே அவருக்கு தண்டனை கொடுத்திட்டிருக்கும் போது, நாமும் சேர்ந்து அவரை தண்டிச்சா அதை அவர் தாங்க மாட்டார். போதும் எங்கப்பாவை நான் இழந்தது போதும். அவரையும் நாம இழக்கறதை நான் விரும்பலை.'
பேச வார்த்தைகள் இல்லாமல் அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.
அடுத்த ஒரு வாரத்திலேயே திருமணதிற்கு தேதி குறித்து விட்டிருந்தார் அப்பா.
அந்த திருமணத்தில் அப்படி ஒரு ஆனந்தம் மனோவிற்கு. மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தான் அவன். ஒவ்வொன்றையும் ஓடி ஓடி செய்துக்கொண்டிருந்தான்.
அவன் வேலைகளை பகிர்ந்து கொள்ள விரும்பிய வசந்தையும் தடுத்து விட்டான் ' நீ தான்டா இப்போ ஹீரோ. வேலையெல்லாம் செய்யக்கூடாது. நல்லா என்ஜாய் பண்ணு'
மனம் கேட்காமல் சொன்னான் வசந்த். 'ஏண்டா இப்படி அலையறே. அப்படியே ஏதாவது ஒண்ணு ரெண்டு விட்டு போச்சுன்னா என்னடா? யார் என்ன சொல்லப்போறாங்க?'
'டே என்னடா பேசறே.' பாய்ந்தே விட்டான் 'என் தங்கச்சிக்கும் என் வசந்துக்கும் கல்யாணம். எத்தனை நாள் கனவு. எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு சந்தோஷமா திரும்பணும். அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் எந்த குறையும் வரக்கூடாது. 'அவன் பேச்சில் இருந்த அன்பிலும், அக்கறையிலும் நெகிழ்ந்துதான் போனான் வசந்த்.
திருமணதிற்கு முன்தினமே எல்லாரும் மண்டபத்துக்கு வந்துவிட்டிருந்தனர்.
அன்று இரவு வசந்த் நல்ல உறக்கத்தில் இருந்த போது, அவனை கைப்பேசியில் அழைத்தாள் அர்ச்சனா.
'என்னை பைக்கிலே ஒரு ரைடு கூட்டிட்டு போறியா?
இப்பவா?
ஆமாம். இப்பவே. ஒரு முக்கியமான வேலை இருக்கு. உன் பைக் இங்கே தான் இருக்கு நான் பார்த்தேன்.
இரவு மணி பதினொன்றரை. பைக்கில் பறந்தனர். சிறிது நேர பயணத்திற்கு பிறகு ' இங்கே தான் நிறுத்து, நிறுத்து' என்றாள்.
சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தியவுடன் அதில் ஏறி அமர்ந்து எதிரில் நின்றவனின் தோளில் தனது கைகளை மாலையாக்கி சொன்னாள் அர்ச்சனா. 'லவ் யூ வசந்த்'
அதை எதிர் பார்க்காதவனாய் சட்டென கண்கள் விரிய, சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் சின்னதான புன்னகையுடன் சொன்னான்
நாளை எங்கள் திருமணமாம். நடக்கட்டும் அது நடக்கும் போது நடக்கட்டும்.
இந்த நொடியிலேயே நான் அவளுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்டேன்.
அவன் எதை மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறான் என புரிந்து இதழ்களில் புன்னகை மலர, அடுத்த நொடி சட்டென சொன்னாள்
அப்படியா? வாழ்ந்து முடிச்சிட்டியா? சரி நல்லதா போச்சு. நான் இப்படியே எங்கேயாவது ஓடி போயிடறேன். உன்கிட்டேர்ந்து எஸ்கேப்.
'போடி. என்றான் இதழ்களில் இருந்த புன்னகை மாறாமல் 'போறதா இருந்தா போ.'.
சில நொடிகள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளிடம் ஒரு புன்னகையுடன் கலந்த பெருமூச்சு எழுந்தது. அவன் நெற்றியை தன் நெற்றியால் முட்டி சொன்னாள் 'முடியாதேடா. உன்னை விட்டுட்டு என்னாலே போக முடியாதே. அதுதான் பிரச்சனை.'
அவளை அப்படியே அள்ளிக்கொள்ள துடித்த மனதை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றவனை கலைத்தது மழைத்துளி.
'ஹேய் மழை வருது வா கிளம்பலாம்' என்று அவன் வண்டியை கிளப்பினான். மழை வலுக்க துவங்கியது..