அவர்கள் இருவரையும் வாழ்த்துவதை போல் பொழிந்து சில்லென்று அணைத்து தாலாட்டிய அந்த மழையை ரசிக்கவே செய்தாள் அர்ச்சனா.
மண்டபம் வந்து சேர்வதற்குள் மழை வலுத்துவிட மொத்தமாய் நனைந்து விட்டிருந்தனர் இருவரும் வாசலில் நின்றிருந்தனர் மனோ ஸ்வேதா உட்பட அனைவரும்.
'என்னடா? சின்ன குழந்தைங்க மாதிரி இப்படி மழையிலே.... உங்க ரெண்டு பேரையும் எல்லாரும் தேடிட்டிருக்கோம். என்றான் மனோ.
ஏன்டா போன் பண்ண வேண்டியது தானே? என்றான் வசந்த்
போனை இங்கேயே வெச்சிட்டு போயிட்டு என்னை கேள்வி கேட்கிறான் பார். அவ நம்பரும் கிடைக்கலை. அப்படி எங்கேடா போனீங்க? கேட்டான் மனோ.
எனக்கு தெரியாது பா. உன் தங்கச்சிதான் என்னை எங்கேயோ கூட்டிட்டு போய் என்னென்னமோ பண்ணா' எனக்கு ஒண்ணும் தெரியாது' முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவன் சொல்ல, சிவந்து போனாள் அர்ச்சனா.
'நான் நினைச்சேன்' அவனுடன் சேர்ந்துக்கொண்டான் மனோ.' எங்க வசந்த் அப்பாவி எல்லாம் இவ வேலையாதான் இருக்கும். என்ன பண்ணே எங்க வசந்தை? என்று அவளை குறுகுறுப்பாக பார்க்க
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் ,உள்ளே ஓடியே விட்டிருந்தாள் அர்ச்சனா. சிரித்தபடியே தனக்குள் வேண்டிக்கொண்டான் மனோ. இவர்கள் சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.
திருமண நாள் வந்தது அன்று காலை சில்லென்று விடிந்திருக்க பறவைகளின் சத்தத்தில் கண் விழித்தாள் அர்ச்சனா. 'குட் மார்னிங். பெஸ்ட் விஷஸ் ஆன் அவர் கிரேட் டே' அவனுடைய குறுஞ்செய்தியை படித்தபடியே புன்னகையுடன் எழுந்தாள் அர்ச்சனா.
மண்டபம் முழுக்க மலர்களாலே அலங்கரிக்கபட்டிருந்தது. சரசரக்கும், புடவைகளும், கலகலக்கும் வளையல்களும் மலர்ந்து போயிருந்த முகங்களுமாய் மண்டபம் ஜொலித்துக்கொண்டிருந்தது
தயாராகிக்கொண்டிருந்த வசந்தின் அருகே வந்தான் மனோ. ' டே மாப்பிள்ளை... என்று அவனை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் ஆசைடா உன்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடணும்ன்னு
அர்ச்சனாவை பார்த்து பார்த்து அலங்கரித்துக்கொண்டிருந்தனர் எல்லாரும். ஜொலி ஜொலித்த மெரூன் நிற சேலையும், அதற்கேற்றார் போல் நகைகளும், தலை நிறைய மல்லிகையுமாய்.
ஆனால் அவள் மனதில் இருந்த மகிழ்ச்சியிலும் நிறைவிலும் அவள் கண்களில் ஏறியிருந்த ஒளியிலும், முகத்தில் இருந்த பளபளப்பிலும், அனைத்து நகைகளின் ஜொலிப்பும் தோற்று போயிருந்தன.
காலையிலிருந்து அவர்கள் இருவரையும் துரத்தி துரத்தி படம் பிடித்துக்கொண்டிருந்தார் அந்த புகைப்படக்காரர். இப்படி நில்லுங்கள், அப்படி சிரியுங்கள் என்று அவர் படுத்திய படுத்தலில் நொந்து போயிருந்தான் வசந்த்.
மங்கல வாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருக்க ,மண்டபமே நிறைந்திருக்க, எங்கும் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பி இருக்க, மணக்கும் மலர் மாலைகளுடன் மேடையில் வந்து அமர்ந்தாள் அர்ச்சனா.
மணமேடையில் இருந்தான் வசந்த், எத்தனை கட்டுப்படுத்த முயன்றும் அவன் பார்வை திரும்ப திரும்ப அவன் பார்வை அருகில் வந்தமர்ந்தவளின் மீதே சென்று பதிந்தது.
மனோ ,ஸ்வேதா, விவேக், அனு, சாந்தினி, மனோவின் அப்பா, வசந்தின் அப்பா என அனைவருமே மேடையில் அணி வகுத்திருந்தனர். அந்த நேரத்தில் எல்லார் மனமும் அவர்கள் இருவர் சந்தோஷதிற்காகவே வாழ்த்திக்கொண்டிருந்தன.
மேடையில் அமர்ந்திருந்தார் அவள் அப்பா. அங்கே வந்தமர்ந்த மகளை விட்டு அகலவில்லை அவர் பார்வை. மெல்ல கண்களை. நிமிர்த்தி அவரைப்பார்த்தாள் அர்ச்சனா.
அவர் மனம் எதற்காகவோ ஏங்கிக்கொண்டிருந்தது. அதை புரிந்துக்கொண்டவளாய் அவரை பார்த்து மெல்ல புன்னகைத்தாள் அர்ச்சனா.
நிறைந்து விட்டது. அந்த ஒரு நொடியில் நிறைந்தே விட்டது அவர் மனமும் கண்களும். அர்ச்சனாவின் கண்களுமே நிரம்பித்தான் விட்டிருந்தது.
கண்ணிமைகள் கூட பாராமாகி, இரவும் பகலும் நீளமாகி, என்றாவது வந்தே விடாதா என்று இருவரும் காத்திருந்த அந்த நிமிடம் வந்தே விட்டிருந்தது.
மங்கள வாத்தியங்கள் முழங்க மாங்கல்யத்தை கையில் எடுத்தான் வசந்த்.
இத்தனை நாள் தவத்திற்கு பிறகு கிடைத்த வரமாய், மனம் முழுவதிலும் பரவிக்கிடக்கும் நேசத்திற்கு ஒரு அர்த்தமாய், உதடுகளில் சிரிப்பும், முகம் நிறைய மகிழ்ச்சியும்,மனம் முழுவதும் பரவசமாய் அவன் கட்டிய மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் அர்ச்சனா.
ஏதோ ஒன்றை சாதித்து விட்ட திருப்தியில் எல்லார் மனமுமே நிறைந்து போயிருந்தது. கண் இமைக்க கூட மறந்து போய் இருவரையும் மனதார வாழ்த்தியபடி அமர்ந்திருந்தார் அர்ச்சனாவின் அப்பா.
மாலையில் திருமண வரவேற்பு நடந்துக்கொண்டிருந்தது, எல்லார் மனமும் சற்று லேசாகி போயிருந்தது..
வசந்தும் ,அர்ச்சனாவும் மேடையில் இருந்தனர்
மறுபடியும் வந்தார் அந்த புகைப்படக்காரர். 'இவர் இன்னும் போகலியா? என்ற வசந்த்.' ஆமாம் சார், போட்டோ செஷன் இதோட முடிஞ்சுதா இல்லை இன்னும் தொடருமா? என்றான் அவரிடம்.
இல்லை சார் இதோட முடிஞ்சுது. என்று அவர் சொல்ல
அப்பாடா. நல்ல வேளை என்றான் வசந்த்.
அவனது 'நல்ல வேளையில்' இருந்த அர்த்தத்தை புரிந்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
மெல்ல மேடையேறினான் விவேக்.
வசந்தின் கையைப்பற்றி குலுக்கினான் 'ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் வசந்த்' ஆல் பெஸ்ட் அர்ச்சனா என்று புன்னகைத்தவன் தான் வாங்கியிருந்த மோதிரத்தை இருவருக்கும் பரிசளித்தான். இருவரும் மோதிரத்தை ஒருவருக்கு ஒருவர் புன்னகையுடன் அணிவித்த பின்னர் மெல்லகேட்டான் விவேக்,
எனக்கு உங்ககிட்டே இருந்து ஒரு பீட் பேக் வேணும் மிஸ்டர் வசந்த் .நான் வசந்தா மாறிடுவேன்னு உங்ககிட்டே சொன்னேன். ஒரு பாதி வசந்தாகவாவது மாறி இருக்கேனா?
மலர்ந்து சிரித்தபடி விவேக்கை தன்னோடு அணைத்துக்கொண்டான் வசந்த்' நீங்க வேற நீங்க வசந்தோட ஒரு படி மேலே போயிட்டீங்க. என்றவன் சீக்கிரமா நீங்களும் கல்யாணம் பண்ணிக்கணும் விவேக் என்றான் வசந்த்.
எல்லாருடைய எண்ணமும் அதுதான். ஆனால் உடனே கொஞ்சம் கஷ்டம் வசந்த். புன்னகைதான் விவேக். கண்டிப்பா முயற்சி பண்றேன் என்று அவர்களை மறுபடியும் வாழ்த்திவிட்டு இறங்கிய விவேக்கையே இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கீழே இறங்கியவன் மோதிக்கொண்டது ஒரு பெண்ணின் மேல் அவள் ' டாக்டர் அருந்ததி.' அவள் டாக்டர் சிதம்பரத்தின் ஒரே மகள்.
பின் நாட்களில் அம்மி மிதித்து அவன் பார்க்க போவது இந்த அருந்ததியை தான் என்று அறியாமல் ஒரு ஸாரியுடன் அவளை விட்டு விலகி சென்ற விவேக்கை ஒரு முறை திரும்பி பார்த்தாள் அருந்ததி.