கௌரி கல்யாண வைபோகமே – 09 - ஜெய்
“வாம்மா கல்யாணப் பொண்ணு. என்ன கனால டூயட் எல்லாம் பாடி முடிச்சாச்சா?”, தன் காபினுள் நுழைந்த கௌரியை அவள் தோழி கீதா அமோகமாக வரவேற்றாள்.
“நீ வேற ஏண்டி, காலங்கார்த்தால எழுந்து அவரே அவரேன்னு ஆபீஸ் வந்து வேலை முடிச்சு திரும்ப வீட்டுக்குப் போய் US Call, UK கால் எல்லாம் முடிச்சுட்டு படுத்தா சுகமா கொறட்டைதான் வரும், எங்க இருந்து கனாலாம் வரது. கனா டூயட்டும் சேர்ந்து கண்ணாலத்துக்கு அப்பறமே வச்சுக்கலாம்ன்னு விட்டுட்டேன்”
“ஏண்டி கௌஷிக் கேட்டாலும் இப்படிதான் சொல்றியா, இல்லை அட்லீஸ்ட் வாய் வார்த்தையாவானும் அவரை மிஸ் பண்றேன்னு சொல்றியா?”
“அவரை மிஸ் பண்றேனா? ஏய் நான் இன்னும் அவரை நேர்ல ஒரு தரம் கூடப் பார்க்கலை, போன்ல பேசறதுதான். இதுக்கெல்லாம் சங்ககாலப் பொண்ணு மாதிரி பசலை பூக்கறது எல்லாம் ரொம்ப ஜாஸ்தி. இப்படி எல்லாம் லவ் டயலாக் பேசினா என் இமேஜ் என்ன ஆகறது”
“அது சொன்னியே correct. நீ எல்லாம் கோவை சரளா காரக்டர் பண்ணதான் லாயக்கு. உன்னை நான் தெரியாத்தனமா சமந்தா போஸ்டிங்ல போட்டுட்டேன். அதுவும் இல்லாம இந்த பீலிங்க்ஸ் எல்லாம் ஆறறிவு உள்ள மனுஷங்களுக்குதான் வரும். ஐந்தறிவு உள்ள வாலுள்ள பிராணிகளுக்கு எல்லாம் கிடையாதாம்”
“நீயுமாடி என்னை குரங்குன்னு சொல்ற. ஏற்கனவே என் குடும்பமே சொல்லி, எனக்கே லைட்டா பின்னாடி வால் வளர்ற மாதிரியே இருக்கு. இதுல கௌஷிக் வேற அழகா கௌரிங்கற என் பேரை கொளவி கொளவின்னு கூப்பிட்டு கொடுமைப் படுத்தறார்.”
“ஹா ஹா ஹா, கொளவி சூப்பர் பேர் கௌரி இது. கௌஷிக் இந்தப் பேரை உனக்கு வச்சதுக்காகவே அவரை நான் என்னோட உடன் பிறவா சகோதரனா ஏத்துக்கறேன்.”
“அடிப்பாவி, இப்படி ஒரு பேருக்காகவெல்லாம் கட்சி மாறர பாரு, நீயெல்லாம் நல்லா வருவ.”
“சரி சரி ஓவர் feelings உடம்புக்கு ஆகாது கௌரி. இந்த மாதிரி எல்லாம் நீ அசிங்கப்படறது இதுதான் முதல் வாட்டியா சொல்லு. நீ வந்த உடனே நம்ம டீம் ஹெட் மணி வந்து உன்னைப் பார்க்க சொன்னார்.”
“என்ன விஷயம், ஏதானும் சொன்னாரா? நேத்து module முடிச்சு சாயங்காலமே அவர்க்கு forward பண்ணிட்டேனே.”
“நீதான் சின்சியர் சிகாமணி ஆச்சே. அதுக்காக இருக்காது. வேற புது module உன் தலைலக் கட்டப் போறாரா இருக்கும். சரி நீ போய் அவரைப் பாரு. எனக்கு FB பார்க்க time ஆகுது.”
“ஆபீஸ்க்கு வர்றதே, FB பார்க்கவும், சாட் பண்ணவும்தானா. அப்போ அப்போ வேலையும் பண்ணு கீத்ஸ். சரி நான் போய் மணியைப் பார்த்துட்டு வரேன்.”
“May I come in Mani?”
“Please come கௌரி. உக்காரு. கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?”
“Thanks மணி. கல்யாண வேலைல என்னைத்தவிர எல்லாரும் செம்ம பிஸியா சுத்திக்கிட்டு இருக்காங்க. கல்யாணத்தேதி குறிச்சு மண்டபமும் பிக்ஸ் பண்ணியாச்சு. நீங்க ஏதோ என்னைப் பார்க்கணும்ன்னு கீதாக் கிட்ட சொல்லி இருந்தீங்களாம்.”
“ஹ்ம்ம் ஆமாம் கௌரி. நீ நம்ம ஆபீஸ்லேர்ந்தே கன்சல்ட்டன்ட் மாதிரி சிங்கப்பூர் போய் வேலை பண்ண முடியுமான்னு கேட்டு இருந்த இல்லை.”
“ஆமாம், நீங்க அங்க இருக்கற ப்ராஜெக்ட் கோ-ஆர்டினேட்டர் கூடப் பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தீங்களே. அவங்ககிட்ட இருந்து ரிப்ளை வந்துடுத்தா.”, வேலையே கிடைத்தா மாதிரி ஆர்வத்துடன் கேட்டாள் கௌரி.
“ஹ்ம்ம் நேத்துதான் ரிப்ளை பண்ணினாங்க. அவங்களோட புது module ஜனவரிலதான் ஆரம்பிக்குது. சோ நீ அப்போலேர்ந்து அங்க ஜாயின் பண்றதுன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்றாங்க. அதுவும் தவிர நீ கேட்டா மாதிரி உனக்கு அக்டோபர் கடைசில ரிலீவிங் தர்றதும் கஷ்டம் கௌரி. கடைசியா handover பண்ணின ப்ராஜெக்ட் maintenance டீம்ல நீ இருக்கணும்ன்னு அந்தக் கம்பெனிலேர்ந்து கேட்டு இருக்காங்க. அதனால அட்லீஸ்ட் டிசெம்பர் 15 வரையானும் நீ ஆபீஸ் வரா மாதிரிதான் இருக்கும். இது எல்லாமே நீ நம்ம ஆபீஸ் வழியா சிங்கப்பூர் போறதா இருந்தாதான். அங்க இருக்கற கன்சல்ட்டன்சி வழியா தேடப் போறேன்னா ஒன்னும் ப்ரோப்லம் இல்லை. நான் உன்னை எத்தனை சீக்கிரம் ரிலீவ் பண்ண முடியுமோ, அத்தனை சீக்கிரம் பண்றேன்.”
“ஓ, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலையே, மணி. இது என்ன உடனே முடிவு சொல்லணுமா அவங்களுக்கு?”
“இல்லை கௌரி, நான் திங்கள்க்கிழமை வரை time கேட்டிருக்கேன். ஒரு வாரம் time இருக்கு, நல்லா யோசிச்சு உன் வீட்டுலயும் கேட்டுட்டு அப்புறம் சொல்லு. நீ confirm பண்ணினதுக்கு அப்பறமா நாம pay details பத்தி பேசலாம்.”
“சரி மணி, ஒரு ரெண்டு நாள் time கொடுங்க. நான் வீட்டுல பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்.”
மணியின் காபினிலிருந்து வாடிய முகத்துடன் வந்த கௌரியைப் பார்த்த கீதா, “என்னடி முகமே சரி இல்லை, சொன்னா மாதிரியே புது ப்ராஜெக்ட் உந்தலைல கட்டிட்டாரா மணி.”
“இல்லடி கீத்ஸ். நான் சிங்கப்பூர் வேலை கேட்டிருந்தேன் இல்லை. அது ஜனவரின்னா ஓகேன்னு சொல்றார். இங்கயும் என்னை ரிலீவ் பண்ண டிசெம்பர் மிட் ஆகிடுமாம். அதுதான் என்ன பண்றதுன்னு தெரியலை”
“ஓ கஷ்டம்தான். நீ உன் வீட்டுல, முக்கியமா கௌஷிக்கோட சேர்ந்து பேசி முடிவெடு. ஏன்னா, கல்யாணம் முடிஞ்சு உடனே போக முடியாதில்லை. அவங்க விருப்பமும் இதுல நீ தெரிஞ்சுக்கணும். ”
“நீ சொல்றதும் கரெக்ட்தான் கீத்ஸ். அப்பாகிட்ட பேசினாலே ஏதானும் ஒரு solution கரெக்ட்டா சொல்லிடுவார். அவர்கிட்டையும் கேட்டுட்டு கௌஷிக்கிட்டையும் பேசிட்டு என் முடிவை சொல்றேன். எப்படியும் அடுத்த மண்டே வரை time இருக்கு.”
“அப்புறம் என்ன, இன்னும் நிறைய time இருக்கே. எதுக்கு இப்போலேர்ந்து கவலையா சீன் போடணும். எல்லா கவலையையும் மூட்டைக் கட்டி வச்சுட்டு சிரிச்சுட்டே வேலையைப் பாரு பார்ப்போம்.”
வீட்டிற்குள் நுழையும் மகள், தான் அமர்ந்திருப்பதுக் கூடத் தெரியாமல் ஏதோ யோசனையாகவே செல்வதைப் பார்த்து ராமன், “என்னமா, ஏதானும் பிரச்சனையா, யோசனையாவே வர?”, என்று கேட்டார்.
“இல்லப்பா, அப்படி ஒண்ணும் இல்ல. இன்னைக்கு என் டீம் ஹெட் என்னைக் கூப்பிட்டு நான் சிங்கப்பூர் வேலைக்கு கேட்டிருந்தேனே அதைப் பத்தி பேசினார்.”
கௌரியிடம் காபியை நீட்டியபடியே ஜானகி, “என்னடி சொன்னா, வேலை மாத்தல் கிடைச்சுடும் இல்ல. எப்போலேர்ந்து சேரறா மாதிரி இருக்கும்.”, என்று கேட்டாள்.
“இல்லமா, அதுல சின்ன சிக்கல். அங்க ஜனவரிலதான் வேலை ஆரம்பிக்கறா. சோ அப்போ சேர்ந்தா போறும்ன்னு சொல்லிட்டா. ஆனால் இங்கதான் எனக்கு நான் கல்யாணத்துக்கு முன்னாடி கேட்ட ரிலீவிங் கிடைக்காது போல இருக்கு.”
“கிடைக்காதுன்னா? லீவ் தர மாட்டேன்னு சொல்லிட்டாளா. பேசாம வேலையை விட்டுட்டு ஆத்தோட இரு. இருக்கற ரெண்டு மாசத்துல சமைக்க கத்துக்கோ. உனக்கும் அங்க போனா ஈஸியா இருக்கும்.”
“அம்மா உடனே வேலையை விட சொல்லாதம்மா, இப்போலாம் நல்ல வேலை கிடைக்கறதே கஷ்டமா இருக்கு. அப்படியே இருந்தாலும் என்னைக்கு வீட்டுக்குத் தொறத்துவான்னு தெரியாத நிலைமை. அதனால இருக்கறதை விடறது புத்திசாலித்தனமே இல்லை.”, மகள் மறுத்துப் பேச, ஜானகி கோவம் கொள்ள இடையில் புகுந்தார் ராமன்.
“ஜானு, முழு விவரமும் கேக்காம எதுக்கு ஒரு முடிவுக்கு வர. கௌரி மணி சார் என்ன சொன்னார்ன்னு தெளிவா சொல்லுமா.”