தள்ளாடியபடியே எழுந்த ராமனை, அவரின் அருகிலிருந்தவர் கைக் கொடுத்து உதவி தூக்கி நிறுத்தினார். “இவங்க சொல்றதை எல்லாம் நம்ப முடியாது சார். இவங்க எப்போ அந்த ஆளைப் பிடிச்சு அப்பறம் வழக்கு நடத்தி நமக்கு பணம் வந்து சேர்றது. அதுக்குள்ள நாமளேப் போய் சேர்ந்துடுவோம்.”
“ஹ்ம்ம் நீங்க சொல்றது கரெக்ட்தான். இருந்தாலும் நாம கொடுக்கற கம்ப்ளைன்ட் கொடுத்துடலாம். அப்பறம் பகவான் விட்ட வழி. இங்கப் பக்கத்துல ஏதானும் ஜெராக்ஸ் கடை இருந்தா இது எல்லாத்தையும் ஒரு காப்பி எடுத்துட்டு அப்படியே போலீஸ் ஸ்டேஷன் போய்டலாம்”, என்று அந்த நபரை அழைத்தார் ராமன்.
“சரி சார். அப்படியே பண்ணிடலாம். இந்த வளாகத்துலேயே ரெண்டாவது மாடில ஒரு ஜெராக்ஸ் கடை இருக்கு. அங்க போய் எடுக்கலாம். என்னோட பேரு ஆனந்தன். என் போன் நம்பர் தரேன். குறிச்சு வச்சுக்கோங்க. உங்களுக்கு போலீஸ்கிட்ட இருந்து தகவல் வந்தாலோ, இல்லை எனக்குத் தகவல் வந்தாலோ அதைப் பகிர்ந்துக்க சுலபமா இருக்கும்.”
“என்னோட பேரு ராமன். நீங்க சொல்றது சரிதான். என் நம்பர் குறிச்சுக்கோங்க.”, என்று தன் போன் நம்பரை அவரிடம் ராமன் கொடுத்தார். அதன் பின் இருவரும் சென்று போலீஸ் ஸ்டேஷனில் புகாரைப் பதிவு செய்து அவரவர் வீடு செல்லக் கிளம்பினர்.
“சார் ஜாக்கிரதையா போய்டுவீங்க இல்லை. பணம் போனாப் போகட்டும் சார். அதுக்காக எந்தத் தவறான முடிவுக்கும் போய்டாதீங்க. ஏன் சொல்றேனா, நான் போட்டது உங்க பணத்தை பார்க்கும்போது கம்மிதான். ஆனால் என்னாலையே பணம் போனதை ஜீரணிக்க முடியலை. உங்களோடது அதிகத் தொகை. அதுதான்.”
“கவலைப்படாதீங்க சார். என்னை நம்பி மூணு ஜீவன்கள் இருக்கு. அவங்களுக்காகவானும் நான் தைரியமா இருப்பேன். இங்க இருந்து ஆட்டோலதான் போகப் போறேன். உங்க கவலைலயும் என்னைப் பத்தி நினைக்கறீங்களே. நீங்க கிரேட். நான் வரேன். அப்பறம் ரெண்டு நாள் கழிச்சு உங்களுக்கு போன் பண்றேன்.”, என்று ஆனந்தனிடம் விடை பெற்று ஆட்டோ பிடிக்க சென்றார் ராமன்.
வழியெல்லாம் இந்த விஷயத்தை ஜானகியிடம் எப்படி சொல்வது. அவரால் இதைத் தாங்க முடியுமா? நாலு லட்ச ரூபாய் சாதாரணம் இல்லையே. கல்யாணத்தை இரண்டு மாதத்தில் வைத்துக் கொண்டு எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையிலேயே கண்ணீருடன் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தார் ராமன்.
தொடரும்
{kunena_discuss:780}