உருவமற்ற அந்த புகை மண்டலம், கோவிலை விட்டு சில அடி தூரத்திலேயே சுழன்றுக்கொண்டிருந்தது. எத்தனை முயன்றும் கோவிலின் தெய்வீக சக்தியை தாண்டி அவளை நெருங்க முடியவில்லை அதனால்.
அவன் கார் கோவிலின் வாசலில் வந்து நின்றது. இறங்கி உள்ளே ஓடினான் முகுந்தன்.
அவளை பார்த்த மாத்திரத்தில் அவள் முகத்தை அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டான்.
என்னடா? எங்கேடா போயிட்ட? உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே? ரொம்ப பயந்துட்டேன்டா நான்.
நான்... அது..... உ.....உ....ங்களை.... மாதிரியே..... அந்த பேய் என்னை கூட்டிட்டு வந்தது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உடைந்து அழ துவங்கினாள் மாதங்கி.
நம்ப முடியவில்லை அவனால். ஆனாலும் அவளது அந்த நிலை அவனை மொத்தமாக குலுக்கியது.
அவள் கண்ணீரை துடைத்த படியே சொன்னான் அவன் 'இல்லைடா. இல்லைடா. என் தப்புதான். உன்னை விட்டு போயிருக்ககூடாது. இனி இந்த பிரச்னை எல்லாம் தீரும் வரைக்கும் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். வா நீ வா கிளம்பலாம்.
அவளை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் முகுந்தன். கார் அந்த கோவிலை தாண்டி நகர்ந்தது. காரை தொடர்ந்து நகர்ந்த அந்த புகை மண்டலம். கண் இமைக்கும் நேரத்தில் காருக்குள் நுழைந்து அந்த பூனையின் உடலுக்குள் புகுந்துகொண்டது.
எழுந்து நின்றது அந்த பூனை. அதன் கண்கள் சிவந்து இங்கும் அங்கும் அலைந்துக்கொண்டே இருந்தன
முகுந்தனின் மனம் எங்கும் ஒரு வித அழுத்தம் பரவியிருந்தது. அவளை எப்படியாவது பத்திரமாக கொண்டு சேர்த்து விட வேண்டுமென்ற தவிப்பு அவனை செலுத்திக்கொண்டிருந்தது.
கண்களை திருப்பி அவளை பார்ப்பதும், சாலையை பார்ப்பதுமாகவே வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தான் அவன்.
நிமிடத்துக்கு மூன்று மூறை 'ஒண்ணுமில்லைடா. சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம் எல்லாம் சரியாயிடும்' அவளுக்கு நம்பிக்கை கொடுத்து அவள் நடுக்கத்தை குறைத்தபடியே பயணத்தை தொடர்ந்தான் அவன்.
பூஜையறையை விட்டு வெளியே வரவில்லை தாத்தா. அவர் உதடுகள் மந்திரத்தை உச்சரித்த படியே இருக்க அவர் உடல் ஏனோ தளர துவங்கியது.
காலையிலிருந்தே அவர் எதுவும் சரியாக சாப்பிடவில்லை. வயதும் சோர்வும் அவரை சேர்ந்து வாட்ட, ரத்தத்தில் சர்க்காரையின் அளவு குறையத்துவங்க, கண்கள் இருட்டியது அவருக்கு.
எங்கே இருக்கிறார்கள் அவர்கள் இருவரும்? அந்த நிலையிலும் பதற்றம் அவரை ஆட்க்கொண்டது. அவர்களை தொடர்ந்திருக்கும் பிரச்னையை அவரால் உணர முடிந்தது.
தெய்வ சக்தி ஒன்றே அவர்கள் இருவரையும் காக்க முடியும் என்று புரிந்தது அவருக்கு. அதற்கு அவர்கள் தெய்வத்தை நோக்கி திரும்ப வேண்டுமே. எண்ணத்தை தெய்வ சக்தியில் நிறுத்த வேண்டுமே? செய்வானா முகுந்தன்?
அவரது வயதும் உடல் நிலையும் அந்த நேரத்தில் எதற்குமே ஒத்துழைக்க மறுக்க, முகுந்தனை தொலைப்பேசியில் அழைப்பதற்காக எழுந்தவர் அப்படியே மயங்கி சரிந்தார்.
பதறிக்கொண்டு ஓடி வந்தான் முகுந்தனின் அண்ணன். அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையை நோக்கி மயங்கிய நிலையில் பயணித்துக்கொண்டிருந்தார் தாத்தா.
சரியான நேரம் பார்த்து காத்திருந்தது அந்த பூனை.
கார் வேகமாக நகர்ந்துக்கொண்டிருந்தது.
காரின் வெளியே இருட்டு. சாலையின் இருபுறமும் மரங்கள். ஒரு சின்ன காட்டுப்பகுதியை போன்ற தோற்றம். அந்த பூனையின் கண்களில் கோபம் பரவியது. தான் நினைத்ததை செயல் படுத்த துணிந்தது அது.
அப்போது எதிர்ப்பட்டது ஒரு சின்ன பாலம். அந்த பூனையின் பார்வை தீவிரம் அடைய அந்த பாலத்தில் ஏற முயன்ற நேரத்தில் கார் முகுந்தனின் கட்டுப்பாட்டை மீறியது,
பிரேக்கை அழுத்த அவன் செய்த முயற்சி பலிக்காமல் போக, கார் சாலையை விட்டு விலகி, பாலத்தின் சுவற்றில் மோத, அதன் சுவர் உடைய, கார் உருண்டு, சரிந்து, கீழே இருந்த அந்த நீர் நிலைக்குள் விழுந்து கவிழ்ந்தது.
சத்தமாக கேட்டது மாதங்கியின் அலறல். அவர்கள் அணிந்திருந்த சீட் பெல்ட்டுகள் அவர்களை இருக்கையோடு சேர்த்து பிடித்திருந்தது. எங்கே காயம் பட்டிருக்கிறது என்று கூட அறிய முடியாத வகையில் உடலின் பாகங்களில் எல்லாம் வலி பிறந்தது.
தலை கீழாக இருந்த நிலையில் இருட்டில் எதுவுமே கண்களுக்கு புலப்படாமல் போக, திறந்திருந்த ஜன்னலின் வழியே காருக்குள் நீர் வரத்துவங்க மாதங்கி, மாதங்கி என்னாச்சுடா? பேசுடா. தவிப்புடன் ஒலித்தது முகுந்தனின் குரல்.
இருக்கேன். இங்கதான் இருக்கேன் மெலிதாக ஒலித்தது அவள் குரல்., தண்ணீருக்குள் கார் இறங்க துவங்க மூச்சு முட்ட துவங்கியது இருவருக்கும்.
இது தான் நேரமென எழுந்தது அந்த புகை வடிவம்.
மாதங்கியை அப்படியே நீருக்குள் அழுத்தி விடுகிறேன் அவளை என்னுடன் சேர்த்துக்கொண்டு விடுகிறேன் விழைந்தது அது.
தனது சீட் பெல்டை கழற்றியவன், மாதங்கியையும் விடுவித்து, கொஞ்சமாக திரும்பி நிமிர்ந்து அவளை ஒருகையால் அணைத்தபடியே கதவை உடைத்து திறக்க முயன்றான்.
அவனது உதடுகள் திரும்ப திரும்ப அவள் பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தது. மாதங்கி, தைரியமா இருடா. நான் இருக்கேன்டா. மாதங்கி நாம வெளியே போயிடலாம் இருடா. மாதங்கி பயப்படாதே டா.
அவனது கை அவளை இறுக்கமாக பிடித்திருந்து. தனது முழு பலத்தையும் பிரயோகித்து கதவை உடைத்து திறந்து விட்டிருந்தான் முகுந்தன். அவளையும் அணைத்து பிடித்தபடியே நீருக்குள் இறங்கினான் அவன்.
நீருக்குள் கலந்தது அந்த புகை வடிவம். தனது சக்தியெல்லாம் பிரயோகித்து, மாதங்கியை இழுத்து நீருக்குள் தள்ள முயன்றது அது.
முடியவில்லை அதனால். எது தடுக்கிறது என்னை? புரியவில்லை அதற்கு.
அவள் மீதிருந்த பிடியை விடாமல், சற்றே நீந்தி அந்த நீரை கடக்க முயன்றுக்கொண்டிருந்தான் முகுந்தன். அந்த நேரத்திலும் சொல்லிக்கொண்டே இருந்தான் அவன் 'நான் இருக்கேன்டா மாதங்கி பயப்பாடதே. அரை மயக்க நிலையிலும் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்தபடி அவனுடன் ஒட்டிக்கொண்டாள் அவள்.
ஏதோ ஒன்று அவர்கள் இருவரையும் சேர்த்து நீருக்குள் இழுப்பதை அவனால் உணர முடிந்தது.
தான் மூழ்கிவிடக்கூடாது என்பதை விட ,அவள் பத்திரமாக நீரை விட்டு வெளியே வர வேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது. அவனது மொத்த கவனமும் அவள் மீதே இருந்தது. அவளை எப்படியும் காப்பாற்றி விட வேண்டுமன்ற மன உறுதி அவனை செலுத்திக்கொண்டிருந்தது
மாதங்கியை அவனிடமிருந்து பிரித்து விடும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தது அந்த அமானுஷ்ய சக்தி.
எது தடுக்கிறது என்னை? அது கோபத்துடன் முயல, அதன் அத்தனை முயற்சிகளும் பயனற்று போய்கொண்டிருந்தன.
அங்கே ஜெயித்துக்கொண்டிருந்தது அவன் நேசம். அவன் அவள் மீது கொண்டிருக்கும் நேசம். அவளை எப்படியும் காப்பாற்றியே தீருவேன் என்ற அவனது மன உறுதி அங்கே வென்று கொண்டிருந்தது. அவன் காதலின் சக்தியை அந்த புகை வடிவத்தால் ஜெயிக்க முடியவில்லை.
நீரை விட்டு வெளியே வந்திருந்தனர் இருவரும். அவன் தோளிலேயே மயங்கி இருந்தாள் அவள்.
தொடரும்...
{kunena_discuss:781}