“உங்க மொபைல்ல ஸ்க்ரீன் சேவர் ஸ்பானிஷ்ல பார்த்தேன்...” மிதமான புன்னகை அவன் முகத்தில் பரவி இருந்தது.
“அது இல்ல வியன்....அவங்க தப்பு தப்பா பேசுவாங்க...வேண்டாம்.....என்னால ஏற்கனவே உங்க வீட்ல பல குழப்பம்..”
“பட் அ வெரி ஸ்வீட் கன்ப்யூஷன்... எப்படியும் அண்ணி வர நீங்கதான ஒருவகையில காரணம்...” இவளிடம் ஸ்பானிஷில் பேசியவன் டிரைவரிடம்
“ரைட்ல டர்ன் பண்ணுங்க...”ஒரு கிளைச்சாலையை காண்பித்தான்.
“இங்க தான் எங்க நேட்டிவ்...இப்படி ஒரு இடம் இருக்கிறதே நிறையபேருக்கு தெரியாது.... எங்க வீட்ல எல்லாரும் வெளிய இருந்து வேலை பார்த்தாலும்....பூர்வீகம்னா இதுதான்...எங்களுக்கு இங்க ஒரு வீடு இருக்குது...வருஷம் ஒரு தடவை அம்மா அப்பா கூட வந்து தங்கிட்டு போவோம்...வீட்ல இதுக்குன்னு ஆள் கிடையாது... ஊர்காரங்களே யாராவது வந்து சுத்தம் செய்து வச்சிருப்பாங்க...அத்தனை பேரும் சொந்தகாரங்க....குடும்ப பாசம் ரொம்ப அதிகம் இங்க...யார்வீட்ல பிரச்சனைனாலும் எல்லாரும் சேர்ந்தே தீர்த்து வைப்பாங்க...யாரும் ஊர் சட்டத்தை மீற மாட்டாங்க...மீறவும் முடியாது.... “
“ஆன்....இந்த ரைட்ல திரும்புங்க” டிரைவரிடம் சொன்னவன் மீண்டுமாக இவளிடம் தொடர்ந்தான்.
“ இங்க ஃப்ரெஷ் அப் செய்துட்டு... டிரஸ் மாத்திட்டு கிளம்பலாம்....இந்த இடம் நிச்சயமா உங்க வீட்ல யாருக்கும் தெரியாது...”
வீடு இதற்குள் இவள் பார்வைக்கு தெரிய ஆரம்பித்து இருந்தது. வீடா அது...? ப்ரமாண்டம்.
“இங்க தான் நிறுத்துங்க.....”
டிரைவர் நிறுத்த கதவை திறந்து இறங்கினாள் மிர்னா.
எதிரில் வீடு படு கம்பீரமாக நின்றிருந்தது. அழகு.
முற்றம் தாண்டி உள்ளே சென்றவன் கதவின் மேல்புறத்தில் கைவைத்து தள்ள அது திறந்தது..
“பூட்டலையா...?”
இவள் ஆச்சர்யப்பட
“அதான் சொன்னேனே எல்லாரும் சொந்தம்...அதோட ஊர் கட்டுபாடு....திருட்டே கிடையாது...ஆனா நான் இல்லாம நீங்க இந்த வீட்ல கால் வைக்க முடியாது...அந்நியர்களுக்கு தடை...” சிரித்தபடி சொன்னவன்
மென்மையாய் அவள் முகம் பார்க்க, வார்த்தையற்ற அம் மென் வரவேற்பு அறிவை தாண்டி எதற்கோ புரிய.....மெதுவாய் வாசல்தாண்டி நுழைந்தாள் அவள். மனதிற்குள் அவளை மீறிய இனம் புரியாத கிளர்வு.
அவளோடு இணையாக கால்வைத்து உள்ளே நுழைந்தான் அவன். இப்படி ஒரு வீட்டை அவள் கற்பனையில் கூட கண்டது கிடையாது.
வீடு பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையாய்....சொர்க்கம்.
இவ்வுணர்வு பரவசம் அவ் வீடாலா...? அது அவனுடையது என்பதாலா....?அவனோடு அவள் அங்கு என்பதாலா? அது அவள் இடம் என்ற உள்ளுணர்வாலா?
பார்வையை சுழற்ற விடாமல், முதல் பார்வையையே சிறை பிடித்தது அங்கிருந்த அவ்வூஞ்சல்.
மனம் மொத்தமாய் சென்று சேர்ந்தது அந்த அறை உயர ஆடும் ஊஞ்சலில்.
விஸ்தாரமான வரவேற்பறையில் கம்பீரமாய் அது
“வாவ்...எவ்ளளளளளவு பெரிசு....” முழு கண்ணை திறந்து இவள் வியக்க
“ம்..நாலு தலமுறைக்கு முன்னாலயே இது இங்க இருக்காம்....” ஒரு நொடி இவள் முகம் ரசனையாய் பார்த்தவன், பார்வை விலக்கி ஊஞ்சலை பார்த்தான்.
இரண்டு தூண்களை இணைத்தபடி குறுக்காக ஒரு மர உருளை கம்பம். அதிலிருந்து தொங்கிய நான்கு கம்பிகளில் தொங்கியது அந்த ராட்சச ஊஞ்சல்.
“சூப்பரா இருக்குது...நான் ஆடப் போறேனே....” குழந்தையின் குதுகலம் அவளுள்.
அதைப் பார்த்து வேகமாக ஓடியவளின் கை பற்றி அவசரமாக இழுத்தான். முன்னால் போன வேகத்தில் பின்னால் வந்தவள் கண்ணில்பட்டது அவன் கண்கள்.
ஆள்முழுங்கி... மனதிற்குள் முனங்கிக் கொண்டவள் வாயால் பழிப்பம் காட்டினாள். பிடித்திருந்த அவன் கையை காட்டினாள் கண்களால்.
“மேலே மரம் விலகி இருக்குது.” அவன் காண்பித்த பின்புதான் அதை அவள் கவனித்தாள். கையை விட்டிருந்தான் அவன்.
முன்பு நல்ல நிலையில் இருந்திருக்கும் போலும். இப்பொழுது மேலிருந்த குறுக்கு மரம் அதாவது ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்த மரகம்பம் பக்கவாட்டு தூண் ஒன்றில் சரியாக பொருந்தி இருக்க அடுத்த தூணில் சரிந்து பெயரளவிற்கு அமர்ந்திருந்தது.
என்நேரமும் கீழே விழும்.
சுற்று முற்றும் பார்த்தவன் பின் புறமிருந்து அந்த 8 அடி உயர மர நாற்காலியை எடுத்து வந்தான்.
“ஹே...என்ன பண்றீங்க நீங்க...பார்த்து...மேல போட்டுகிடாதீங்க....இப்படி ...இந்த பக்கம்...” அவள் சொல்ல சொல்ல அதை அந்த ஊஞ்சல் அருகில் கொண்டு வாகாக வைத்தவன்
“மேடம்ஜி ஆக்சிடெண்ட் செய்ததுக்கு பழி வாங்குற எண்ணம் இருந்தா நான் மேல ஏறுனதும் இதை விட்டுடுங்க...ஆக்ஸிடெண்ட்டை விட அதிகமா அடிபடும்....அதுக்கு நான் கியாரண்டி..” சொல்லிக் கொண்டே அந்த பழைய நாற்காலியின் மேல் ஏறி நின்றான்.
படு பத்திரமாக அதை பிடித்தபடி நின்றாள் மிர்னா. ஆனாலும் வயதான அந்த நாற்காலி ஆட்டம் காண்பித்துக் கொண்டே இருந்தது. சில நிமிடங்களில் டம்..டி...டொம் ஒரு கால் உடைந்து நாற்காலி சரிய
“ஹேய்....மிர்னு...” என்றபடி விழத்தொடங்கிய வியன் அவள் மேல் அந்த ராட்சச மர உருவம் விழுந்து விடக்கூடாதே என அவள் இருந்த பக்கமாகவே அவளுக்கும் அந்த நாற்காலிக்கும் இடையிலுமாக குதிக்க முயன்றவன் பிடி விலகி குறி தவறி அவள் மீதே சென்று விழ, அவன் மீது விழ வேண்டிய நாற்காலி அருகிலிருந்த ஊஞ்சல் தட்டி சற்று சரிந்த நிலையில் பைசா கோபுரம் போல் நின்றிருந்தது.
முதலில் தரையை தொட்ட மிர்னா மனித இயல்பின் படி தன்னை நோக்கி திடப்பொருள் விழப்பார்த்து கண்மூட அவள் மீதாக விழ வேண்டிய வியன் கடைசி நொடியில் சுதாரித்ததன் விளைவாக அவள் அருகில் விழுந்தவன், அவசரமாக அவளை தனக்குள் இழுத்து மறைத்தான். சரியும் நாற்காலி அவள் மீது விழுந்துவிடக் கூடாதே என்ற தவிப்புதான் காரணம். .
ஒரு நொடி இருவரிடமும் எந்த அசைவும் இல்லை. காரணம் இருவரும் சரிந்து வந்த நாற்காலி தங்கள் மீது விழும் தருணத்தை எதிர்பார்க்க அப்படி எதுவும் நிகழவே இல்லை.
இப்பொழுது எந்த பக்கம் உருண்டால் காயம் படாமல் தப்பிக்கலாம்?.
மெல்ல தலை தூக்கி பார்த்தவன் கண்களின் இட ஓரம் ஷூக்கால்கள். இவர்கள் இருக்கும் கோலம்...? அவசர அவசரமாய் எழுந்தான்.
அங்கு நின்றிருந்தது அவனது அப்பா. அருகில் அம்மா.
நிச்சயமாக அவர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை அவன்.
“அப்பா.. நீங்க..” அவன் வார்த்தை வெளிப்பட்ட அதே நொடி
“என்னடா நடக்குது இங்க...?” அவனது அப்பா மனோகரின் கர்ஜனை வீடு முழுவதும் எதிரொலித்தது.
நாற்காலி சரியும் என நினைத்து கண்மூடி இருந்தவள் மீது மொத்த பூமியும் வந்து விழுந்தது. கண்விழித்து துள்ளி எழுந்தவளுக்குள் உணர்ச்சி ப்ரளயம். அவமானம். ரோஷம். உடல் சூழ்நிலையின் கடுமை கண்டு கிடுகிடுவென உணர்ச்சி வேகத்தில் நடுங்க, தன்மானம் அக்கினியாய் அபிஷேகம் அவள் மேல்.
“ஒரு தப்பும் இங்க நடக்கல....” உறுமினாள் மிர்னா....
அதே நேரம் “நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை...” கண்டனமாய் வெளிப்பட்டது அவன் குரல்.