என்ன தவம் செய்து விட்டேன் – 05 - புவனேஸ்வரி கலைச்செல்வி
ரயில் நிலையம் ...
கூட்டம் கூட்டமாய், நெரிசலாய் இருந்தது இரயில் நிலையம் மட்டுமல்ல.. கிரிதரனின் எண்ணங்களும் கவிமதுராவின் வியப்பும் தான் .. கண்ணில் இருந்து அவர்கள் மறையும்வரை புன்னகையுடன் நின்றிருந்தான் கிரிதரன் . எத்தனை மாதங்களுக்கு பிறகு அவளை பார்க்கிறான் அவன்.
கண்ணீரின் சாயலே தெரியாமல் வளர்க்கப்பட்டவள் அல்லவா இவள் ? புன்னகையும் மிடுக்கும் இணைந்த பார்வையும், நேசம் மட்டுமே நிறைந்த பாவமுமாய் இருப்பவள் இப்படி நடமாடும் சிலையாகிவிட்டாளே ... கண்களை இறுக மூடி அவன் பெருமூச்சு நேரம் , " அண்ணா " என்றபடி தன் தமயனை கட்டிக்கொண்டான் சந்தோஷ் ..
" ஹே சந்தோஷ் ... எப்படிடா இருக்க ?"
" ஹா ஹா எனகென்ன அண்ணா ஸ்மார்ட்டா பார்க்குறதுக்கு கௌதம் மேனன் படத்துல வர்ற ஹீரோ மாதிரியே இருக்கேன் .. கையில கிட்டார் மட்டும்தான் மிஸ்ஸிங் " என்றான் இயல்பாய். சந்தோஷின் துடுக்கான பதிலில் கவலை மறந்து சிரித்தான் கிரிதரன் .. அவன் கன்னத்து குழி அவனது அழகிய தோற்றத்தை இன்னும் அழகாக்கியது ..
" அண்ணா ப்ளீஸ் இப்படி என்னை மாதிரி சுமார் மூஞ்சி குமார் எல்லாம் பக்கத்துல வெச்சுகிட்டு இப்படி சிரிச்சு வைக்காதிங்க "
" ஹா ஹா ஏன்டா ?"
" பின்ன , நான் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரா தெரியுறேன்ல ... "
" போடா அரட்டை "
" அடடே நிஜம்மாதான் சொல்லுறேன் அண்ணா .. நீங்க சிரிச்சா எவ்ளோ அழகு தெரியுமா ? ஆனா எங்க , மது அண்ணி போன பிறகு தான் நீங்க சிரிக்கிறதே இல்லையே " என்று ஏதோ ஞாபகத்தில் சொல்லிவிட்டு அவசரமாய் கிரியின் முகத்தை பதட்டமாய் பார்த்தான் சந்தோஷ் .. அவன் பேசியதில் இருந்த உண்மையை அறியாதவன் இல்லை கிரிதரன் .. ஒருவேளை இன்று வானதியை அவன் பார்க்காமல் இருந்திருந்தால் கூட இந்நேரம் சந்தோஷ் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக ஒரு சோக புன்னகையை வீசி இருப்பான் .. ஆனால், வானதியை பார்த்த பிறகு அவன் தொலைத்திருந்த இன்பங்களை எல்லாம் கண்டுவிட்ட ஆனந்தத்தில் இருந்தான் ..
" என்னடா இப்படி பார்க்குற ?"
" சாரி அண்ணா ... ஏதோ வேகத்துல மது அண்ணியை பத்தி பேசிட்டேன் .. "
" ஹா ஹா .. உங்க அண்ணியை பத்தி நீ பேசாமல் வேற யாரு பேசப்போறாங்க சந்தோஷ் "
" அண்ணா ?"
" ஹா ஹா .. ஏன்டா அடிக்கடி சடன் ப்ரேக் போட்டு நிக்கிற ? என்னை நீ பத்திரமா வீட்டில் சேர்க்கணும் தம்பி .. உன் வேகத்துக்கு நடந்தா நான் நாளைக்கு கூட அப்பா அம்மாவை பார்க்க மாட்டேன் போல "
" அவ்ளோதானே ... இப்போ பாருங்க .. முடிஞ்சா கேட்ச் பண்ணுங்க பார்ப்போம் " என்று சொல்லி கார் சாவியை விரல் மாட்டிக் கொண்டு ஸ்டைலாய் ஓட, அவனை பின்தொடர்ந்து சிரித்து கொண்டே ஓடினான் கிரிதரன் ..
இங்கு கொஞ்சம் மகிழ்ச்சியான மனநிலையில்தான் இருந்தாள் கவிமதுரா .. அடிக்கடி வானதியை பார்ப்பதும் புன்னகைப்பதுமாய் இருந்தாள் அவள் . வானதியும் அவ்வப்போது அவளை பார்த்து பதிலுக்கு புன்னகைத்தாள் .. இனி தான் தனக்கு நிறைய கடமைகள் உள்ளது என்று மனதில் குறித்து கொண்டாள் ... கவிமதுராவோ சற்றுமுன்பு வானதியுடன் பேசியதை அசைப்போட்டாள் ..
சற்றுமுன்பு, கீழே விழப்போனவளை தாங்கி பிடித்த வானதி
" பார்த்து அண்ணி " என்றாள் .. அவள் முதன்முதலாய் அண்ணி என்று அழைக்கவும் சந்தோஷத்திலும் வியப்பிலும் இருந்தாள் கவிமதுரா.
" என்னாச்சு ?"
" நீங்க முதல் முறை என்னை அண்ணின்னு கூப்பிடுறிங்க வானதி "
" ம்ம்ம்ம் ஆமா .. அண்ணாவுடைய மனைவியை அண்ணின்னு தானே சொல்லணும் ?"
" ஆனா இவ்வளவு நாள் சொல்லலையே " என்று சட்டென கேட்டவளை விழிவிரிய பார்த்தாள் வானதி ...
" நீங்க கூடத்தான் இதுக்கு முன்னாடி என்னை இப்படி எல்லாம் கேள்வி கேட்டது இல்லை ... "
" அது ..... அது " என்று தயங்கியவள் மீண்டும் தனது மௌன கூட்டுக்குள் நுழைந்து கொண்டாள் ..
" நான் ஒன்னு கேட்கவா கவி ??"
" சொல்லுங்க "
" நீங்க இயல்பாகவே அமைதியா ?"
" என்னது ?"
" இல்ல நீங்க எப்பவுமே இப்படி வாய் பேசாத ஆளா ? உங்களை பார்த்தா எனக்கு ரொம்ப அடங்கி போகிற கேரக்டர் மாதிரியே தெரியலையே ... "
" ஹ்ம்ம் .. நாம எப்படி இருக்கணும் என்பதை நாம்தான் முடிவு பண்ணனும்னு நினைச்சவ தான் நானும் வானதி .. ஆனா என் வாழ்க்கை என் எண்ணத்தை தப்புன்னு உணர்த்திருச்சு "
" ஆனா அதே வாழ்க்கை உங்களை பழைய எண்ணங்களுக்கும் கொண்டு செல்லும்னு நம்பலாமே அண்ணி "
" நம்பலாம் .. நம்பணும் .. நம்பிக்கை தான் வாழ்க்கை .. ஆனா எனக்கு தான் வாழ்க்கை முடிஞ்சிருச்சே .. தேடல் உள்ள மனுஷனுக்கு தான் நம்பிக்கை, ஆசை , எல்லாம் தேவை படும் .. எனக்கு எதுக்கு வானதி இதெல்லாம் ? "
அவள் கேட்ட கேள்வி என்னவோ சிறிதாகத்தான் இருந்தது ..ஆனால் அதன் பின்னே பெரும் துயரம் இருப்பதை உணர்ந்தாள் வானதி .. இருந்தாலும் இவளை இப்படியே விட்டுவிட கூடாது என்ற வேட்கையும் அவளிடம் .குறையவில்லை ...
" அண்ணி நான் ஒன்னு சொல்லவா ?"
" ம்ம்ம்ம் சொல்லுங்க "
" ம்ம்ம்ஹ்ம்ம் ஒன்னு இல்ல .. ரெண்டு விஷயம் .. "
" எவ்வளவு வேணும்னாலும் பேசுங்க வானதி "
" ஓகே .. என்னை நீ வா போன்னு கூப்பிடுங்க ... இரண்டாவது விஷயம், இப்போ நாம மனசு விட்டு பேசுற மாதிரி இனி மனசு விட்டு பேசணும் .. நான் கோபப்படுவேனா ? இது சரியா வரும்மா இந்த மாதிரி எல்லாம் யோசிச்சு பேச கூடாது .. "
" ..... "
" என்னடா இவ திடீர்னு ஞானம் வந்து பேசுற மாதிரி பேசுறான்னு நினைக்கிறிங்களா ? "
" ம்ம்ம்ம் ஆமா "
" எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு .. ஒரே நாளில் எல்லாத்தையும் சொல்ல முடியாது .. அப்பபோ சொல்லுறேன் .. இப்போதைக்கு இந்த சந்தேகத்துக்கு மட்டும் பதில் சொல்லுறேன் .. எங்க வீட்டுக்கு நீங்க வந்த முதல் நாளில் இருந்தே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் .. ஆனா, அதை வெளிப்படுத்தினது இல்லை .. அண்ணா இறந்த பிறகுதான் நான் உங்கமேல ரொம்ப வெறுப்பா இருக்குற மாதிரி நடிச்சேன் "
வானதி பேச பேச அவளையே ஆச்சர்யமாய் பார்த்தாள் கவிமதுரா .. தான்தான் அவளை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையோ ?
" நடிச்சிங்களா ? நான் கூட அத்தை மாதிரி நீங்களும் உங்க அண்ணாவின் மரணத்திற்கு நான் காரணம்னு நினைச்சு கோபப்படுறதா நான் நினைச்சேன் வானதி "
" என் அண்ணன் ஒரு இராணுவ வீரன் .. கத்தி முனையில் நின்று, மரணத்தில் விளிம்பில் வேலை செய்றவன் .. அவனுக்கு கல்யாணம் ஆனாலும் ஆகலைனாலும் மரணம் என்பது அவன் வாழ்வில் ரொம்ப இயல்பான ஒன்னு .. ஏதோ படத்துல விவேக் சார் சொல்லுவாரே, இஞ்சின், ஸ்பேர் பார்ட்ஸ் இதுல எல்லாம் ஓடாத வண்டி ஒரு எலுமிச்சை பழம் மூலமாகத்தான் ஓட போகுதான்னு .. அந்த மாதிரி, நாட்டை காப்பதுற போராட்டத்தில் இருக்குறவனுக்கு உங்களை கல்யாணம் பண்ணதுனால தான் மரணம் வர போகுதா ?"