22. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா
2012லே நான் முதன் முதலில் இந்த கதையை எழுதிய போது நான் இந்த கதைக்கு வைத்த க்ளைமாக்ஸ் இது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. நான் எழுதியதை அப்படியே அனுப்பி இருக்கிறேன் இதிலே சாந்தினி கதாபாத்திரம் கிடையாது. வசந்த் ஸ்ரீநகர் போவதும் கிடையாது.
இதை படிச்சிட்டு நிறைய பேர் என்னை திட்டுவீங்க அது எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் படிங்க. படிச்சிட்டு உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க.
அதிர்ந்து போய் நின்றிருந்தாள் அர்ச்சனா. வீட்டை விட்டு பெட்டியுடன் நடந்து வெளியேறினார் அப்பா.
இன்று காலையில் பேசிவிட்டாள் அவள். அப்பாவிடம் நேருக்கு நேராக பேசிவிட்டாள்.
டாக்டர் சிதம்பரத்தின் வார்த்தைகள் மனதை கூறு போட்டு விட்டிருந்தன. பேசவே கூடாது அப்பாவிடம் என்று மனதை எவ்வளவு கட்டுப்படுத்திகொள்ள முயன்றாலும் நிற்க மறுத்தது அது.
ஒரு முடிவுக்கு வந்தவளாக அவர் முன்னால் சென்று நின்றாள் அர்ச்சனா. அவர் மெல்ல நிமிர்ந்து பார்க்க கொஞ்சமாக அழுத்தம் கூடிப்போன குரலில் சொன்னாள் 'நீங்க வசந்துக்கு செஞ்சது மிகப்பெரிய துரோகம் பா. ஆனாலும் இந்த நிமிஷம் வரைக்கும் என்னாலே உங்களை வெறுக்க முடியலை. ஆனாலும் நடந்ததை நினைக்க நினைக்க உங்களை வெறுத்திடுவேனோன்னு தோணுது பா. போதும்பா எல்லாம் போதும் இனிமேலாவது எங்க ரெண்டு போரையும் சேர்த்து வெச்சிடுங்க பா.
தோற்றுப்போன பாவம் மட்டுமே இருந்தது அவர் கண்களில்
'எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது வசந்த் கூட தான் பா. இல்லைனா என் வாழ்கையிலே கல்யாணமே கிடையாது.' இத்தனை நாள் மனதிற்குள்ளே புதைத்து வைத்திருந்ததை தெள்ள தெளிவாக சொல்லி விட்டிருந்தாள் அவள்.
'போதும். வசந்த் அனுபவித்ததெல்லாம் போதும். எந்த தவறும் செய்யாத அவனை, அவன் மனதை மூன்று வருட காலமாக பழி வாங்கிக்கொண்டிருப்பது போதும்.' தனது அப்பாவினால் வசந்த் தனது அபப்வை இழந்து அனுபவித்துக்கொண்டிருக்கும் வலிக்கு மருந்திட்டே ஆக வேண்டும்' ஒரு முடிவுக்கு வந்தவளாகத்தான் நேற்று அப்பாவுடன் பேசி விட்டிருந்தாள் அவள்.
அவள் பேசிய வார்த்தைகளுக்கு அப்பா பதிலே சொல்லவில்லை. நடந்ததை நினைக்க நினைக்க உங்களை வெறுத்திடுவேனோன்னு தோணுது பா மகளின் அந்த ஒரு வார்த்தை மட்டுமே அவர் காதில் கேட்டுக்கொண்டிருந்தது.
மகளின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவரால். குற்ற உணர்ச்சி அவரை அழுத்திக்கொண்டிருந்தது
தனது அறைக்குள் சென்று கையில் பெட்டியுடன் வந்தவர். யார் கேட்ட கேள்விக்கும் எந்த பதிலும் சொல்லாமல், வீட்டை விட்டு நடந்தார். அவர் கால்கள் நடக்க முடியாமல் பின்னிக்கொண்டதை போலே ஒரு உணர்வு.
கண்களில் நீருடன் அவர் சென்ற திசையையே பார்த்தபடி நின்றிருந்தாள் அர்ச்சனா.
மெல்ல அவள் அருகில் வந்த மனோ அவள் தோளை அணைத்துக்கொண்டான்.
'இப்போ நான் எந்த தப்பும் செய்யலை மனோ. என் மனசாட்சிக்கு விரோதமா நான் எந்த தப்பும் செய்யலை மனோ. என்று கண்களை துடைத்துக்கொண்டவள், சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு அப்படியே நின்றாள்.
பின்னர் மெல்ல கண்களை திறந்து சொன்னாள் என்னை புரிஞ்சிப்பார் மனோ. எங்கப்பா என்னை புரிஞ்சிப்பார். எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பார் அவர் என்னை புரிஞ்சிக்குறவரைக்கும் நான் காத்திட்டு இருப்பேன்.
'சரிடா. சரிடா ஒண்ணுமில்லைடா நான் பேசறேன் எல்லாம் சரியாகும். என்றான் மனோ.
'நானும் வரேன் மனோ' என்றான் அப்போது அங்கே வந்த விவேக். நாம எல்லாரும் போய் பேசுவோம் சரியாகும் அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீட்டினுள் உள்ளே நுழைந்தார் அந்த மனிதர். 'என்னடா காலங்கார்த்தாலே எல்லாரும் வெளியே நிக்கறீங்க' என்றபடி.
சட்டென்று நிமிர்ந்த மனோ குளிர்ந்து, மலர்ந்து, மகிழ்ந்து போனான். 'அப்பா.....'
உலக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அப்போதுதான் திரும்பி இருந்தார் அவர். மனோவின் அப்பா.
மனதில் இருந்த இறுக்கமெல்லாம் கரைந்து போய் மனோவின் மனதிற்குள் புது நம்பிக்கை பிறந்தது இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்.
சோபாவில் சென்று அமர்ந்தார் மனோவின் அப்பா. அர்ச்சனாவின் பெரியப்பா.
'விடும்மா. நீ வருத்தப்படாதே. அவன் கோபம் என்ன புதுசா என்ன? எங்கே போயிருப்பான். சென்னைக்கு தான் போயிருப்பான். ராத்திரி சென்னைக்கு கிளம்புடா மனோ. நான் பேசறேன் அவன் கிட்டே. தாம் தூம்னு குதிப்பான் அவ்வளவுதானே. நானும் குதிப்பேன். அவனுக்கு மேலே குதிப்பேன்.' என்றார் அவர்.
நானும் வரேன் அங்கிள் என்றன் விவேக். பேசுவோம். எல்லாரும் பேசுவோம். அர்ச்சனா சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்,
அவள் குளித்து விட்டு ஆபீஸ் கிளம்பி நடந்த போது அவள் அருகில் வந்து நின்றது வசந்தின் கார். இப்போதுதான் டில்லியிலிருந்து திரும்பியிருந்தான் அவன்.
காரின் ஜன்னலருகே நின்றவளின் முகத்தை சற்றே குனிந்து சில நொடிகள் பார்த்தவனின் உதடுகளில் அழகான் புன்னகை ஓட 'குட் மார்னிங் ' என்றான்.
வேறெதுவுமே தேவையாக இருக்கவில்லை. அந்த புன்னகை மட்டுமே அவள் உடைந்து போக போதுமானதாக இருந்தது. கண்களை தாண்டி கண்ணீர் வழிய துவங்கியது.
கார் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தாள் அர்ச்சனா.
அவள் கண்ணீர் ஒரு அவனை கொஞ்சம் குலுக்கித்தான் போட்டது.
என்னாச்சுடா? என்றான் அவன் தவிப்புடன்.
முதல் நாள் ஐ,ஐ.டிலே என்னை பார்த்தப்போ என் கையை விட மாட்டேன்னு சொன்னே? இப்போ விட்டுட்டே இல்லே?
மெல்ல விரிந்தன வசந்தின் கண்கள். 'என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் இவள்?
கண்களில் நீர் வழிய உதடுகள் துடிக்க சொன்னாள் அவள். ' என் கையை பிடிச்சுக்கோ வசந்த்'
உதடுகள் தாண்டி வார்த்தைகள் வெளியேற வில்லை வசந்துக்கு. அவன் கண்களிலும் நீர் கோடுகள்.
'என்னமோ பெரிய தியாகி மாதிரி உனக்கு எது சந்தோஷமோ அதை செய்.. நீ சந்தோஷமா இரு நீ சந்தோஷமா இருங்கிற. நீ இல்லாம எனக்கு ஏது சந்தோஷம்.? நீ தான் என் சந்தோஷம்.' என்றாள் அவள்.
அப்படியே அவன் தோளில் சரிந்து விம்ம துவங்கினாள். ' என்னை கல்யாணம் பண்ணிக்கோ வசந்த் ப்ளீஸ்' குலுங்கி குலுங்கி அழ துவங்கினாள் சொல்லு வசந்த். என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு
மெல்ல அவன் முகத்தை நிமிர்த்தி கைகளில் ஏந்திக்கொண்டு கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்தபடி சொன்னான் ' பைத்தியம் உனக்கும் எனக்கும் எப்பவோ கல்யாணம் ஆகிப்போச்சு. இப்போ என்னவோ புதுசா பேசறே.?
சில நொடிகள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் பின்னர் புன்னகைத்தபடி சொன்னாள் 'அப்ப ஹனிமூனாவது கூட்டிட்டு போ'
மலர்ந்து சிரித்தான் 'அதை சொல்லு இப்பவே செய்வோம்'
சில நிமிடங்கள் கழித்து புன்னகை கலந்த ஒரு பெருமூச்சுடன் அவள் தோளை அணைத்தபடி கேட்டான் 'திடீர்ன்னு என்னச்சாம் என் அர்ச்சனாவுக்கு?'
நடந்ததை மொத்தமாக அவன் தோளில் கொட்டி விட்டிருந்தாள் அவள்.
சில நிமிட மௌனமான யோசனைக்கு பிறகு அவன் சொன்னான் 'நீ அவர்கிட்டே அப்படி சட்டுன்னு பேசியிருக்க வேண்டாம்னு தோணுதுடா. பாவம். அவராலே இதை தாங்க முடியாமான்னு தெரியலை என்றான் அவன்.