19. வாராயோ வெண்ணிலவே - சகி
மனதில் பல சிந்தனைகள் பலவாறு ஓடிக்கொண்டிருந்தது அவளுக்கு!!! சிறுவயது முதல் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தாள். எவ்வளவு அழகான நினைவுகள் அவை... இன்று மகேந்திரன் என்ற பெயர் மனதில் விருட்சமாக வளர விதைக்கப்பட்ட விதை அந்த குழந்தைப்பருவம்!!
"என் செல்லக்குட்டி கண்ணுல இருந்து ஒரு சொட்டுக்கண்ணீர் வந்தாலும்,மகேந்திரன் சுவாசிக்கிற காற்று விஷமா மாறிடாதா?"
என்று அவள் அழும்போது மகேந்திரன் சமாதானம் செய்த தருணங்கள்!!!
"ஒரு மனிதன் கண்ணை மூடினா எல்லாம் இருட்டா தான் ஆகும்!!அதற்காக சூரியனே அழிந்து போயிடுச்சுன்னா அது உண்மையாகிவிடுமா?"-ஊக்கப்படுத்திய நொடிகள் இனையனைத்தும் எழுதப்படா சரித்திரம் அவள் உலகத்தில்!!!
நுட்பமான உணர்வுகளால் சிக்கி தவித்தாள் வெண்ணிலா.கண்களில் கண்ணீர் குளமாய் தேங்கியது. இமைகளை மூடினாள் இரு சொட்டு கண்ணீர் கன்னத்தை ஈரமாக்கியது. எதிரில் பிரகாசமாய் நின்ற சூரியன் அவள் கண்களில் இருந்த வெப்பத்தினால் செயலிழந்து தான் போனான். இன்னும் எத்தனைக்கால நாடகம் இது??எதை சாதிப்பதற்காக நிகழ்த்தப்படுகிறது?? எனது கண்ணீர்த்துளிக்கு என்றுமே அங்கீகாரம் கிட்டாதா? மனகாயங்களுக்கு மருந்து ஒன்று உதிக்காதா??குழம்பி போனது பெண்மனம்.
"நிலா!"-அவளது சிந்தனைகளை கலைத்தது நர்ஸின் குரல்...
"ம்.."
"உன்னை பார்க்க..."
"இல்லைக்கா..எந்த பேஷண்டும் பார்க்கிறா மாதிரி இல்லை."
"பேஷண்ட் இல்லை வேற யாரோ!"
"யாரு?"
"பேர் ரஞ்சித்னு சொல்ல சொன்னார்!"
"ரஞ்சித்...ர சொல்லுங்க!"-நர்ஸ் சென்ற 5 நிமிடத்தில் ரஞ்சித் பிரவேசித்தான்.
வந்தவன்,பொறுமையாக கூட நிற்காமல் பதற்றத்தோடு வந்து அவள் முகத்தை கையில் ஏந்தினான்.
"அம்மூ!உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைல்ல?"-முதல் கேள்வியே குழம்பியது!!!
"எனக்கென்ன ரஞ்சு?"
"மேம் உனக்கு எதாவது பிரச்சனையா இருக்கும்னு நினைக்கிறாங்க!அதை என்கிட்ட சொன்னதும் ஒண்ணும் புரியலை வந்துட்டேன்!"
"அம்மா என்ன சொன்னாங்க?"
"அவங்களுக்கு ஏதோ மனசு கஷ்டப்படுறா மாதிரி இருக்காம்!ஒருவேளை நீ எதாவது நினைத்து வருத்தப்படுறீயான்னு பயப்படுறாங்கடி!"
"அதெல்லாம் எதுவும் இல்லை ரஞ்சு!"
"அப்பறம் ஏன் அழுதா மாதிரி இருக்க?"
"நான்.....நானா?"
"சமாளிக்காதே அம்மூ!உன் ஒவ்வொரு அசைவையும் நான் கண்டுப்பிடிப்பேன்!உண்மையை சொல்லு!"-அவளால் அதற்கு மேல் முடியவில்லை.அவள் அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்.இச்செய்கையால் அவன் இன்னும் குழம்பினான்.ரஞ்சித் ஆறுதலாக அவள் தலையை வருடினான்.
"என்னம்மா ஆச்சு?"
"எனக்கு பிடிக்கலை ரஞ்சு!"
"என்னாச்சு?"-அவள் யுகேந்திரன் கூறியதை கூறினாள்.அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
"எல்லா தப்புக்கும் நானா காரணம்?"-அவள் நொடிந்து போய் கேட்கவும் அவன் மனம் வலித்தது.
"அழாதேடி!நான் இருக்கேன் உனக்காக!நீ பயப்படாதே!!போதும் நீ அங்கே தங்கினது கிளம்பி வா!மற்றவங்க என்ன உன்னை பங்கு போடுறது நீ மொத்தமா என் ஒருத்தனுக்கு மட்டும் தான் சொந்தம்!!"
அவள் விசும்பினாள்.
"அழாதே அம்மூ! ப்ளீஸ்டி!"-நீண்ட நேரம் மௌனம்!!
"என்கூட வா!"-ரஞ்சித் திடீரென அவள் கையை பற்றி இழுத்து சென்றான்.
அவள் கேட்கவில்லை அவன் எங்கு அழைத்து செல்கிறான் என்று!! அவள் மனம் அவனது அந்த பாதுகாப்பை நாட தான் செய்தது. அவன் காரை யாரும் இல்லா அழகிய நந்தவனம் நோக்கி திருப்பினான். காரை நிறுத்திவிட்டு நீண்ட பெருமூச்சை விட்டான்.
"வெளியே வா!இந்த நாள் முழுசும் என் கூட தான் இருக்க போற!இன்னிக்கு உன் கவலையையும் மறந்து சந்தோஷமா இரு!"-அவள் மௌனமாக அவனை பார்த்தாள்.
"நாம வாழ்ந்த நாட்களை நினைத்துப்பார் நிலா!தினமும் அந்த நாட்கள் திரும்ப வராதான்னு ஏங்குறேன் தெரியுமா? உன்கூட பேசாம,சண்டை போடாம,கொஞ்சாம,வாழ்க்கையே வெறுப்படிக்குது!"-அவன் கண்களில் ஒருவித ஏக்கம் தெரிந்தது.
"நீ சொல்லுவியே!ரொம்ப பெரிய வீரத்தால சாதிக்க முடியாத விஷயத்தையும் இனிமையான தென்றல் சாதித்து காட்டிவிடும்னு!அதோட அர்த்தம் இப்போதான் புரிய தொடங்குதுடி!"
-நிலா திரும்பி இயற்கையை பார்த்தாள்.மனம் லேசானது!!! அவள் மனம் அடியோடு தன் கவலைகளை துறந்தது. இப்போது அவள் மனம் முழுதிலும் அவனே நிறைந்திருந்தான். அவள் காதலோடு அவனது தோள் மீது சாய்ந்துக்கொண்டாள்.தேடிவந்த ஒரு நம்பிக்கை அவள் கண்களில் புலப்பட்டது போன்ற ஒரு உணர்வு!!ரஞ்சித் அவள் கரத்தை தன் கரத்தோடு பிணைத்துக்கொண்டான்.அங்கே காதல் ஒரு அழகிய காவியத்தை புனைந்தது.
ஒரு மனிதனின் வெற்றி மற்றும் தோல்வி இரண்டிற்கும் சிறு வித்தியாசமே உண்டு!!! அது நீருக்கும்,நெருப்பிற்கு உண்டான பந்தம் போன்றது!!தோல்வியால் வெற்றியை தணிக்க இயலும்.ஆனால் வெற்றியால் என்றுமே தோல்வியை சகிக்க இயலாது.நிலையில்லாத இந்த வாழ்வினில் நாம் எதை வெற்றி மற்றும் தோல்வி என்று உரைக்கின்றோம்??அதை சிந்தித்ததுண்டா??
யுத்தத்தில் வெற்றிக்கொண்ட மன்னனின் சிரசில் மகுடம் அலங்கரிக்கப்படுகிறது!!தோல்வியை சந்தித்தவனோ ராஜ்ஜியத்தை இழக்கிறான்!!எனில் ஆஸ்தியால் வெற்றியையும் தோல்வியையும் பிரிக்க இயலுமா??அவ்விரண்டையும் உழைப்பால் தான் பகுக்க முடியுமா??இல்லை..ஒரு வாளின் இரு கூர்முனையை பிரிப்பது எப்படி இடைப்பட்ட பகுதியோ!அதுபோல,வெற்றி தோல்வி இரண்டிற்கும் ஒரே தாய் அவளது நாமம் நம்பிக்கை!! அவள் இரு துருவமாய் ஆன தனது இரு பிள்ளைகளை பிறருக்கு ஈனும் சக்தி கொண்டவள் ஆவாள்!!!அதனால் தான் இறைவன் என்றோ கீதையின் மூலம் நம் புத்திக்கு உரைத்தான் "நானே வெற்றியும் ஆவேன்!நானே தோல்வியும் ஆவேன்!தர்மம் அதர்மம் இரண்டையும் கடந்தவன் நான்!!இரண்டையும் வென்றவன் நான்! யுத்தத்தில் சுதர்சன சக்கரம் சுழல்வதால் நான் வெற்றியும் அடைய போவதில்லை!அது மண்ணில் வீழ்ந்தால் நான் தோல்வியும் எய்த போவதில்லை!"-என்று!!!
கண்மூடித்தனமாக கையில் இருந்த மதுவை வாயில் ஊற்றிக்கொண்டான் சங்கர்.கண்கள் முழுதும் பழிவாங்கும் வெறி!!
"சங்கர்!என்னடா பண்ற?"-பதற்றத்தோடு கேட்டார் பிரபாகரன்.
"பழிவாங்கிட்டா!உன் பொண்ணு என்னை பழி வாங்கிட்டா!உனக்கு ஒண்ணும் தெரியுமா!!அவ உன்னோட பொண்ணே இல்லையாம்!"-இதைக்கேட்டவருக்கு உலகமே சுழன்றது!!
"அவளை தத்தெடுத்து இருக்காங்க!"-அவரிடம் பேச்சில்லை.
"நீ என்ன சொல்ற?"
"என்ன சொல்றது?அவ உன்னை சேர்ந்தவள் இல்லை! அவளை விடமாட்டேன்!நான் எது ஒண்ணு வேணும்னு நினைத்தாலும் அதை அடந்தே தீருவேன்!எனக்கு அவ வேணும்!"
"போதும் நிறுத்துடா!இத்தோட நிறுத்திக்கோ!நான் இனி உன்னை அவளோட நிழலைக்கூட நெருங்க விடமாட்டேன்!"-கோபமாக கத்தினார் பிரபாகரன்.