கனவு!!! நம் ஆழ் மனதின் ஓரத்தில் ஒளிந்து கிடக்கும் எண்ணங்கள் தான் கனவாக வெளிப்படும் என்பது அறிவியலின் கூற்று. ஆனால் சந்திரிகாவை பொறுத்தவரை கனவு என்பது எதிர்க்காலத்தை காட்டும் கண்ணாடியாகவே இருந்திருக்கிறது.!!!!
பொதுவாக அவருக்கு கனவுகள் அதிகம் வருவதில்லை. ஆனால் வந்த ஒன்றிரண்டு கனவுகள் எதுவும் இதுவரை பலிக்காமல் இருந்ததில்லை. மறுபடியும் நேற்றிரவின் தூக்கத்திலும் அந்த கனவு!!!! இதுவரை இரண்டு முறை வந்துவிட்ட அதே கனவு.!!!
'அது ஒரு ரோஜாத்தோட்டம்!!! பல வண்ணங்களில் பூத்து குலுங்கிக்கொண்டிருக்கும் ரோஜாக்களுக்கு மத்தியில் நின்றிருக்கின்றனர் ரிஷியும், அருந்ததியும். எங்கே இருக்கிறது அந்த ரோஜா தோட்டம்??? ஏதோ ஒரு மலை சாரலிலா??? ஆம் மலை போலதான் தெரிகிறது.
சுற்றி நிற்கிறார்கள் சிலர். யார் முகமும் தெளிவாக தெரியவில்லை, ஒரு முகத்தை தவிர.. காமெராக்கள் இருக்கின்றன. தூரத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்தபடி நிற்கிறார் சந்திரிகா. என்ன நடக்கிறது அங்கே. ஏதாவது படப்பிடிப்பா? தெரியவில்லை.
அருந்ததியை பாதுகாப்பாக பிடித்திருக்கிறான் ரிஷி. அவள் இடையை சுற்றி வளைத்திருக்கிறது அவனது கரம். நகர்கிறார்கள் இருவரும். பின்னோக்கி மெல்ல நகர்கிறார்கள்.
திடீரென 'ஐயோ! பார்த்து பின்னாடி பள்ளம்...... ' கத்துவது யார் ரிஷியா? ஆம் ரிஷி என்று தான் தோன்றுகிறது.
அடுத்த நொடி அந்த விபரீதம் நடக்கிறது 'ரிஷி.... ' என்ற அலறலுடன் யாரோ விழுகிறார்கள் . விழுவது யார்? சட்டென தெரிகிறது சந்திரிகாவுக்கு. பதறிக்கொண்டு முன்னே ஓடிவருகிறார் அவர். முடிந்த போகிறது அவர் கனவு. இரண்டு முறை வந்தாகி விட்டது அதே கனவு.
இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. யோசித்து பார்த்தாகி விட்டது. எதாவது படப்பிடிப்பு நடக்கப்போகிறதா? நான் தேவை இல்லாமல் பதறுகிறேனா? இல்லை நிச்சியமாக இல்லை. ஒரு விபரீதம் நடக்கபோவதை அடி மனது உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
எதற்கும் கலங்கியதில்லை அந்த மனம். ஆனால் இந்த கனவு அவரை ரொம்பவுமே அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது!!! கூடாது!!! இந்த கனவு பலித்துவிடக்கூடாது.!!!!
இதை பற்றி சொன்னால் எல்லாருமே சிரிப்பார்கள். 'நம்ம கையிலே எதுவும் இல்லை. இதுதான் விதின்னா நாம என்ன பண்ண முடியும் மிக எளிதாக சொல்வார்கள். 'நீ எப்போ இப்படி மாறினே? கனவுக்கெல்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டே சிரிப்பான் ரிஷி.
புரியாது!!! இதன் விபரீதம் யாருக்கும் புரியாது !!!! அதனால் சொல்லிக்கொள்ள வில்லை அவர் யாரிடமும் அந்த கனவை பற்றி சொல்லிக்கொள்ளவில்லை அவர். வருங்காலம் முன்னமே தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகி விடுமோ? இதனால் தான் இறைவன் வருங்காலத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறானோ??? இந்த விபரீதம் நடக்காமல் இருக்க ஏதாவது செய்து விட முடியாதா? அவர் மனம் அலைப்பாய்ந்து கொண்டிருக்க கார் வேகமாக நகர்ந்துக்கொண்டிருந்தது.
அதே நேரத்தில் தனது வீட்டில், தனது அக்காவின் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் சஞ்சீவ். வீடும் முழுவதும் உறவினர்கள் கூட்டம். நாளை மறுநாள் தங்கையின் திருமணம்.
மாடியில் தனது அறையில் அவன் கட்டிலில் படுத்திருக்க அவனது மார்பில் அமர்ந்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது அந்த இரண்டு வயது குழந்தை சுவாதி.
அவனது மீசையே குழந்தைக்கு ஒரு விளையாட்டு பொருளாகி இருக்க, ஒரு கட்டத்தில் 'ஹேய்.... அல்வா சும்மா இருக்க மாட்டே.... ' வாய் விட்டு சொல்லிவிட்டிருந்தான் சஞ்சா. அகல்யாவின் ஞாபகம். அவளுக்கு எப்போதும் இவன் மீசையுடன் விளையாடுவதே வேலையாக இருந்திருக்கிறது.
அதே நேரத்தில் அங்கே அகல்யாவின் வீட்டில் ஒலித்தது அகல்யாவின் கைப்பேசி. திரையில் ஒளிர்ந்தது சஞ்சீவின் எண். அள்ளி எடுத்தாள் கைப்பேசியை.
'அல்வா துண்டு...' எதிர்முனையில் அவன் குரல்.
'சஞ்சா... சொல்லு சஞ்சா... '
'ம்? என்ன சொல்லணும். உன்னை பார்க்கணும் போலிருக்குன்னு சொல்லவா?'
நம்பவே முடியவில்லை அவளால் இந்த வார்த்தைகளை. 'நிஜமாவா சஞ்சா???? என்ன சஞ்சா திடீர்னு?.
'அதுவா ப்ரிமியர்லே உன்னை பார்த்ததிலேர்ந்து உன் ஞாபகமாவே இருக்குடி'
'சஞ்சா.... மெது மெதுவாய் எழுந்தது அவள் குரல் 'என்னை மன்னிசிட்டியா சஞ்சா? நான் செஞ்சதெல்லாம் மறந்துட்டியா சஞ்சா'
'ஹேய்... பழசையெல்லாம் எதுக்கு இப்போ ஞாபக படுத்தறே? யாரும் பண்ணாத தப்பையா நீ பண்ணிட்டே'
சரியாய் அந்த நொடியில் தனது அறையில் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த சஞ்சாவின் தனது கை தனிச்சையாய் தனது சட்டைப்பையில் கைப்பேசியை தேடின. அது அங்கே இல்லை 'எங்கே வைத்தேன் அதை.???' யோசித்தபடியே குழந்தையை தூக்கி தோளில் சாய்த்துக்கொண்டு எழுந்தான் சஞ்சீவ்.
தனது அறை முழுவதும் அலசி விட்டு, படியிறங்கி ஹாலுக்கு வந்தவன் கொஞ்சம் திடுக்கிட்டான். அந்த கூடத்தின் ஓரத்தில் அவனது கைப்பேசியை கையில் வைத்துக்கொண்டு அதில் ஏதோ செய்துக்கொண்டிருந்தார் பரந்தாமன். அப்படியே நின்று விட்டிருந்தான் அவன். அவனை கவனிக்கவில்லை அவர்.
சில நொடிகள் கழித்து, ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கைப்பேசியை அங்கிருந்த சோபாவின் மீது போட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் அவர்,
அவசராமாக வந்து அதை கையில் எடுத்தான் சஞ்சீவ். அதிலிருந்து யாருக்கும் அழைப்பு சென்றதற்கான அடையாளங்கள் இல்லை. அதை வைத்துக்கொண்டு என்ன செய்துக்கொண்டிருந்தார் அவர்??? கைப்பேசியை திறக்கும் கடவு சொல் எப்படி தெரிந்தது அவருக்கு? முதல் வேலையாக பாஸ் வோர்டை மாற்றியபடியே யோசிக்கலானான் சஞ்சீவ்.
'அம்மா நில்லு ப்ளீஸ்...' தன்னை வளர்த்தவள் வீட்டை விட்டு போவதை ஏற்றக்கொள்ள முடியாமல் கரைந்து வெளி வந்தன வார்த்தைகள். நின்றார்கள் அவர்கள். 'இவள் எதற்கு கெஞ்சிக்கொண்டு இருக்கிறாள்.??? ஏனோ வலித்தது அவனுக்கு.
அவன் புறமாக திரும்பியவள் 'வ..சி..' அசைந்த உதடுகளை தடுத்து நிறுத்தி 'ரிஷி ... என்றாள் அவள் 'என்னதான் வேணும் உங்களுக்கு'
மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு அவளை சில நொடிகள் ஊன்றிப்பார்த்தான் ரிஷி.. 'ரிஷி.. ப்ளீ..'
அவள் முடிப்பதற்குள் 'அங்கிள்...' என்றான் இயக்குனரை பார்த்து. அவளை இதற்கு மேல் கெஞ்ச வைக்கும் தைரியம் சத்தியமாக இல்லை அவனுக்கு.
'வரவேண்டியவங்க என்கூட வர சம்மதிச்சிட்டா இந்த வீட்டை உங்களுக்கே கொடுத்திட்டு நான் இங்கிருந்து போயிட்டே இருப்பேன். நீங்க எங்கே கையெழுத்து போட சொன்னாலும் நான் போடத்தயார்' இதற்கும் நிமிரவில்லை இயக்குனர்.
விருட்டென விழி நிமிர்த்தினாள் அருந்ததி. 'எல்லாம் இதற்காகத்தானா?' சில நொடி தீவிரமான பார்வை, ஒரு பெருமூச்சு அடுத்த நொடி பளிச்சென்ற பதில் 'நான் உங்க கூட வரணும் அவ்வளவுதானே? சரி வரேன்.' திடுக்கிட்டு திரும்பினார் மேகலா.
அந்த வார்த்தைகளில் மகிழ்ந்து போய், எப்போது எழுந்தான் என்று அவனுக்கே தெரியாமல் எழுந்தே விட்டான் ரிஷி. எல்லா உணர்வுகளையும் தாண்டி அவனது மனதில் நிம்மதி மட்டுமே பரவியது இப்போது..
இயக்குனரின் அருகில் சென்று நின்றான் அவன். இப்போது விழி நிமிர்த்தினார் அவர். தனது கையில் இருந்த பத்திரங்களை அவர் கையை பிடித்து அதில் வைத்தான் ரிஷி. . இது உங்க வீடு அங்கிள். நீங்க கஷ்டப்பட்டு கட்டின வீடு. இது எப்பவுமே உங்களோடது தான். கொஞ்ச நேரம் எனக்கு தேவை பட்டது. யூஸ் பண்ணிக்கிட்டேன். அவ்வளவுதான்.'
துவண்டு போயிருந்த அவரது பார்வை அவனுக்கு பல செய்திகள் சொல்ல அவர் கையை ஆதரவாக அழுத்திய படியே சொன்னான் 'இப்போ நான் கிளம்பறேன். மத்ததை அப்புறம் பேசிக்கலாம். எதுக்கும் கவலை படாதீங்க. தைரியமா. இருங்க. நான் பார்த்துக்கறேன்.'
சில நிமிடங்களில் அருந்ததி தயாராகி வந்தாள் அருந்ததி. 'வரேன் பா. வரேன் மா என்றவள் அஸ்வதை பார்த்து தலை அசைத்து விட்டு நடக்க, செய்வதறியாது சிலையாக நின்றார் மேகலா.
முகத்தில் வெற்றியின் பாவம் படர, மேகலாவை ஒரு தீவிரமான பார்வை பார்த்து விட்டு அருந்ததியுடன் வாசல் கதவை ரிஷி அடைந்த அந்த நொடியில் எதிரில் வந்து நின்றார் அவர்.
திடுக்கிட்டு நிமிர்ந்தான் ரிஷி. அங்கே நின்றிருந்தார் சந்திரிகா.!!!!!!! கொஞ்சம் திகைத்து நின்றவனின் உதடுகள் உச்சரித்தன '..............'
மழைச்சாரல் தொடரும்......
{kunena_discuss:886}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.