"எத்தையோ போடும்மா.. எதுக்கும்மா இத்தனை வகை டிபன்.. சாயங்காலம் கொழுக்கட்டை தான் ஆச்சே.. இரண்டு வாய் மோர் சாதம் கரைச்சு வைச்சா போறாதா என்ன?.. தொட்டுக் கொள்ள மோர் மிளகாயோ, ஒரு துவையலோ போறுமே?.. ஏம்மா இப்படி உன்னை கஷ்டப்படுத்திக்கறே?"
அந்த சமயத்தில் அங்கே வந்தாள் அவனது மூன்றாவது தமக்கை மஹதி.
"அப்படியெல்லாம் உன் அம்மா கேட்டுடுவாளா?.. ஆத்துக்கு பெரிய மாப்பிள்ளை வந்து தங்க போறார்.. மோர் சாதமெல்லாம் கௌரவக் குறைச்சலாம்.. அவாத்து ஸ்டேடஸ்க்கு எப்படிடா வெறும் வத்த மிளகாயும், மோர் சாதமும் போதும்.. நமக்கு வில்லி வெளியிலிருந்து வரவே வேண்டாம்.. நம்ம வீட்டை விட்டு போனது ஒன்றே போதுமே?" என மெல்ல சொன்னவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் வசந்த்.
"டி என்னடி மஹி.. கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல்.. மாப்பிள்ளை வர நேரமாச்சு.. காதுல விழுந்தா பொல்லாப்பா போயிடும்.. ரெண்டு பேரும் சித்த வாயை மூடுங்கோ!" என அவர்களை அதட்டினார் சாரதா.
You might also like - Kanaamoochi re re.. A family oriented romantic story
சாரதாவுக்கும் தெரிந்துதான் இருந்தது.. தன் பெரிய மகள் அடிக்கும் கூத்தெல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான் ..எதையாவது சொன்னால் முகத்தை முழம் நீளத்துக்கு தூக்கி வைத்து கொள்வாள்.. ஏற்கனவே, ரஞ்சனிக்கு அழகாய் பால் வெள்ளையாய் இருக்கும் மஹதியை கண்டால் பிடிக்காது .. அவர்கள் வீட்டிலேயே, மூத்தவள் ரஞ்சனி சற்று நிறம் கம்மி.. மாநிறத்துக்கும் சற்று கீழ்.. ராமமூர்த்தியின் தாயாரை கொண்டு, நிறம் குறைவாய், நீண்ட முகத்துடன், சற்று பூசினாற் போன்ற தேகத்துடன் இருப்பவள்.. அதில் ரஞ்சனிக்குமே குறைதான்.
சின்ன வயதிலிருந்தே, அழகாய் இருக்கும் தன் இரண்டு தங்கைகளையும் பார்த்து பார்த்து வயிரெறிவாள். அதிலும், கல்யாணியை ஓரளவுக்கு தன்னுடன் சேர்த்து கொள்பவள், இப்பொழுது நன்றாக படித்து கை நிறைய சம்பாதிக்கும் தன் கடைசி தங்கை மஹதியை சுத்தமாக பிடிக்காது. அவள் எது செய்தாலும் , அதில் குறை கண்டு பிடிப்பதிலேயே இருப்பாள். அந்த ஒரு காரணத்தினாலேயே மஹதியும் தன் பெரிய தமக்கையிடம் தேவையில்லாமல் வாய் கொடுக்க மாட்டாள். ஆனால் அவள் பெற்ற செல்லங்களுக்கு நல்ல சித்தியாய் எப்பொழுதுமே இருப்பதால், தற்போதைய பணம் காய்ச்சி மரமான மஹதியை , ரஞ்சனி பகைத்து கொள்வதில்லை.
ஹாலில் அரவம் கேட்க, " மாப்பிள்ளை வந்து விட்டார் போல.. நான் போய் விஜாரிக்கிறேன். டி மஹி வசந்துக்கு என்ன வேணுமோ கேட்டு போடு" என்றபடி பரபரப்பாக வெளியே சென்றார் சாரதா.
"வாங்கோ மாப்பிள்ளை.. சௌக்கியமா.. காப்பி கலந்து எடுத்துண்டு வரவா.. இல்லை மணி எட்டறை ஆயிடுத்தே.. ராத்திரி டிபன் ரெடியாக இருக்கு.. தட்டு போடலாமா?" என பவ்வியமாக கேட்ட தன் மாமியார் சாரதாவை ஒரு அலட்ச்சியத்துடன் பார்த்த சிவகுமார்,
"சௌக்கியத்துக்கென்ன குறைச்சல் மாமி.. ஏதோ வண்டி ஓடறது.. நான் என்ன உங்க இரண்டாவது மாப்பிள்ளையை மாதிரி சர்கார் உத்யோகத்திலா இருக்கேன்.. அவருக்கு என்ன ரயில்வே ஆபிஸர்.. வருஷத்துக்கு ரெண்டு டிரிப் ஃப்ரீ பாஸ்.. உங்க சின்ன பொண்ணும் ஸ்கூல் டீச்சர்.. எங்களை மாதிரி அன்றாடங்காய்ச்சிகளா என்ன.. " புலம்ப ஆரம்பித்த தன் மூத்த மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது என்று திரு திருவென விழித்தார் சாரதா.
அவரை காப்பாற்ற அந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக உள்ளே நுழைந்தார் கையில் பெரிய காய்கறி பையுடன் நுழைந்தார் ராமமூர்த்தி. ஹாலில் பெரிய மஹாராஜா தோரணையில் காலை ஆட்டிக் கொண்டு தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தவனை பார்த்தவருக்கு உள்ளுக்குள் கோபம் கொந்தளித்தது.
இருக்காதா பின்னே, .. மூத்த பெண் வருகிறாள் என்றாலே கிலி பிடிப்பவருக்கு, அதுவும் அடுத்த பத்து நாட்கள், குடும்பத்துடன் தங்க போகிறாள் என்றதுமே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும் போல இருந்தது. பாவம் அவரும் தான் என்ன செய்வார், ஏதோ தன்னால் முடிந்த அளவு சீர் செய்து பெண்ணை கரையேற்றி அனுப்பி வைத்தால், அதோடு போகாமால், கடந்த பத்து வருஷமாக எதையோ சொல்லி கொண்டு பிறந்து வீட்டுக்கு வந்து சீராடுகிறேன் என்று இருந்தால், எவ்வளவு நாள் தான் சமாளிக்க முடியும்.
என்னதான் சர்கார் உத்தியோகத்தில் இருந்து ரிடையர்ட் ஆகி பென்ஷன் வந்தாலும், வரும் பணம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது.. சாரதா பாடி பாடி உழைப்பது மேல் செலவுகளுக்கே சரியாகி விடுகிறது.. சொந்த வீடு ஒன்று இருப்பதால் கொஞ்சம் தப்பித்தார்.. இரண்டு பெண்களை கரையேற்றி, அடுத்தவளுக்கு வரன் பார்க்கலாம் என்று இருக்கும் பொழுது இப்படி தேவையில்லாமல் செலவுகள் வந்தால் அவரும் தான் என்ன செய்ய முடியும்?..
சாரதா சற்று முன்னால் தான் காய்கறி தீர்ந்து விட்டது.. மாப்பிள்ளை வரார்.. நல்லதா பார்த்து வாங்கிண்டு வாங்கோ என்று மார்க்கெட்டுக்கு அனுப்பி இருந்தாள்.
பெருமூச்சு விட்டு காய்கறி கூடையை கீழே வைத்து விட்டு, "வாங்கோ மாப்பிள்ளை.. வந்து நேரமாச்சா? .. சாரதா கொஞ்சம் தீர்த்தம் எடுத்துன்டு வாம்மா"
"என்ன மாமா ஏன் இப்படி பெருமூச்சு விடறீங்க.. ஓ.. காய்கறி வாங்க போனீங்களா? .. ஏன் இப்படி வயசான காலத்துலே அலயறீங்க?.. ஏன்டி ..ரஞ்சு .. நீ உங்க அப்பாவுக்கு எடுத்து சொல்ல மாட்டியா.. உன் தம்பி ஒருத்தன் படிச்சி முடிச்சி நாலு வருஷமா வெட்டியா ஊரை சுத்தறானே? .. அவன் கொஞ்சம் ஆத்து காரியமெல்லாம் பார்க்ககூடாதா என்ன?" என்ற சிவகுமாரை,
அப்பொழுது அங்கே வந்த வசந்த் அவரை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைக்க, நீயெல்லாம் ஒரு பொருட்டா என்ற தோரணையில் சிவகுமார் கெத்தாக அமர்ந்தபடி அவனை முறைத்தான்.
தண்ணீர் பாட்டிலை தன் கணவருக்கு கொடுத்து விட்டு, வசந்த் கோபத்தில் மூத்த மாப்பிள்ளையை எதாவது சொல்லிவிடுவானோ என்று பயந்த சாரதா, " வசந்த் , நீ படிக்கனும் என்றாயே.. நீ போப்பா, உன்னோட ரூமிற்கு" என்று சொல்ல,
எக்கேடு கெட்டு போங்கள் என்று நினைத்தபடி, வெறும் தலையசைத்து விட்டு தனது மாடி அறைக்கு சென்றான் வசந்த்.
"சாப்பிடலாமா" என்று கேட்ட தன் மாமனாரை ஒரு பார்வை பார்த்த சிவகுமார், "ரஞ்சீ.. வா எனக்கு துண்டு எடுத்து கொடு.. இன்னிக்கு ஒரே வெய்யில்..உடம்பெல்லாம் கசகசவென்று இருக்கு.. ஒரு குளியல் போட்டு விட்டு வருகிறேன்.. பிறகு சாப்பிடலாம்" என்றபடி எழுந்த சிவகுமார்,
"குழந்தைகள் சாப்பிட்டாச்சா.. அம்மாவாத்துக்கு வந்தாச்சுன்னு அவாளை கண்டுகாம நீ இது தான் சாக்குன்னு உட்கார்ந்திருக்காதே.. நல்ல சத்தான சாப்பாடா செய்ய சொல்லு உன் அம்மாவை..எப்பபாரு ஒரு கீரையை மசிச்சு வைப்பா.. நாளைக்கு உன் அப்பா கிட்ட சொல்லி, பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, எல்லாம் கிலோ கிலோ வாங்கிண்டு வரச் சொல்லு.குழந்தைகளுக்குதெல்லாம் தினமும் ஒரு பிடி கொடுக்கனும். மூளைக்கு நல்லதாம்.. போனவாட்டி உங்க அப்பா எந்த கடையிலே வாங்கின்டு வந்தாரோ தெரியலை.. ஒரே பூச்சி.. நம்ம மைலாப்பூர் பக்கமா இருக்கிற ரஹீம் பாய் சுப்பர் மார்க்கெட்டுல போய் வாங்க சொல்லு.. என்னடி அப்படி பார்க்கறே.. இதெல்லாம் இந்த சின்ன வயசிலிருந்து சாப்பிட்டா என்னை மாதிரி அறிவோட இருக்கலாம்.. இல்லைன்னா, உன்னை மாதிரி மக்காதான் இருக்கனும்.." என்றபடி அந்த வீட்டில் இருந்த மூன்று பெட் ரூம்களில் ஒன்றை நோக்கி நடந்தான் சிவகுமார். பின்னாலேயே அவனை தொடர்ந்தாள் ரஞ்சனி.
ஆ என வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தார் ராமமூர்த்தி.
"எல்லாம் நம்ம நேரம்" என்று முணுமுணுத்தவரை, "மெல்ல பேசுங்கோன்னா.. காதிலே விழந்து வைக்க போறது"
"நன்னா விழட்டும்.. அப்படியாவது இடத்தை காலி பண்ணா பரவாயில்லை.. சூடு, சொரணை கெட்டதுங்க!" என்றபடி எழுந்தார் ராமமூர்த்தி.
அடுத்த அரை மணி நேரம் கழித்து டையினிங் டேபிளில் சிவகுமாரும் , ரஞ்சனியும், ராமமூர்த்தியுடன் அமர, மஹதியும், சாரதாவும் சப்பாத்தியை எடுத்து வைக்க ஒரு பிடி பிடித்தனர்.
ராமமூர்த்தி தனக்கு வெறும் மோர் சாதம் போதும் என முடித்துவிட, குழந்தைகள் முன்பே உணவு முடிந்து உறங்க சென்று விட, சிவகுமார் மெல்ல ஆரம்பித்தான்.
"மாமா , எனக்கு ஒரு பத்து லட்சம் பணம் வேண்டியிருக்கிறது" என்றான் மொட்டையாக.
தொடரும்
{kunena_discuss:909}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.