03. நீங்களும் துப்பறியலாம் - தேன்மொழி
ஹாய் மக்களே! இது ஒரு திடீர் மினி-துப்பறியும் தொடர்!
வெளியாகும் ஒவ்வொரு சின்னஞ்சிறு கதையிலும் இன்ஸ்பெக்டர் குற்றவாளி என ஒருவரை கண்டுபிடிப்பார். அது சரியா, சரியென்றால் எப்படி கண்டுபிடித்தார் என்று நீங்கள் தான் துப்பறிந்து சொல்ல வேண்டும். தவறாக இருந்தால் உங்கள் கண்ணுக்கு குற்றவாளியாக யார் தெரிகிறார் என்றும் சொல்லலாம்.
சரியாக சொல்பவர்களுக்கு கை தட்டல் உண்டு.
கதை வெளியான ஒன்றிரண்டு நாளில் பதிலை நான் பதிவு செய்வேன்.
என்ன துப்பறிய நீங்க தயாரா??? வாங்க வாங்க...
யார் குற்றவாளி???
உறவினர் திருமணத்திற்கு மனைவி சத்யா, மகள் ஷாலினி என குடும்பத்துடன் வந்திருந்தான் தேன்.
அது ஒரு பணக்காரக் குடும்பம். அந்த குடும்பத்தின் தலைவர் கிட்டத்தட்ட 90 வயதான சேதுபதி. அவருக்கு மூன்று மகன்கள். மூவருக்கும் திருமணமாகி பேரன் பேதியும் பார்த்தாகி விட்டது. ஆனால் இன்னமும் சேதுபதியின் பிடியிலேயே இருந்தனர்
சொத்து எனும் கொக்கியைக் கொண்டு மகன்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கிடுக்கி பிடியில் வைத்திருந்தார் சேதுபதி.
திருமணத்தில் ஆங்காங்கே கேட்ட பேச்சுசுக்களை வைத்து,
“எப்படி தான் இன்னும் அந்த தாத்தாவை உயிரோட விட்ருக்காங்கன்னு தெரியலை... ஒவ்வொருத்தரும் அப்படி கண்ணாபின்னான்னு திட்டுறாங்க...” என கணவனின் காதைக் கடித்தாள் சத்யா.
தேன் அந்த மூன்று மகன்களையும் கவனித்தான். மூவரும் கிட்டத்தட்ட அச்சு அசல் ஒரே போல் இருந்தார்கள். மெலிதாக நரைக்க தொடங்கி இருந்த முடி, கண்ணாடி, சராசரி உயரம்... திருமணத்திற்கு என மூவருமே வேஷ்டி சட்டையும் துண்டும் அணிந்து வந்திருப்பவர்களை வரவேற்று கொண்டிருந்தனர்.
You might also like - Rose and Thorn... Free English romantic story
தேன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மூத்தவர் விஜயன் தேனிடம் வந்து நலம் விசாரித்தார்.
ஆனால் அவரிடம் ஒரு மாதிரியான வழக்கத்திற்கு மாறான பரபரப்பு....
“வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் தேன். இரண்டு நாள் முன்னாடி வருவேன்னு நினைச்சேன்... சரி பரவாயில்லை சாப்பிட்டு பொறுமையா கிளம்பு, சரியா??? மறக்காமல் அத்தையை பார்த்து பேசிட்டு போ....’
“சரி மாமா! அத்தை எங்கே இருக்காங்க?” என யோசனையுடனே கேட்டான் தேன்.
கூட்டத்தில் கண்களை ஓட விட்ட விஜயன்,
“அதோ மேடை பக்கத்துல இருக்கா பாரு...” என்று தேனிற்கு தன் மனைவி நிற்கும் இடத்தை சுட்டி காட்டினார் விஜயன்.
“சரி மாமா நான் பேசுறேன்...” என்றான் தேன்.
சில நிமிடங்கள் செல்ல, இரண்டாமவர் மோகன் அவனை பார்த்து பேசினார்.
அவர் முகமெல்லாம் ஒரே வேர்வை மழை... எதையோ பார்த்து பயந்து விட்டவர் போல இருந்தார். ஆனால் முகத்தை துடைத்துக் கொண்டு,
“தேன் அடையாளமே தெரியாம மாறிட்ட! நிஜமாவே போலீஸ் போலவே இருக்கடா...” என்று அவனிடம் சகஜமாக பேச தொடங்கினார்.
“கிண்டல் செய்யாதீங்க மாமா”
“நான் ஏன் கிண்டல் செய்றேன், அதோ அங்கே கவிதா நிக்குறா பாரு, அவ தான் உன்னை காமிச்சு பேச சொன்னாள்... உன்னை மிஸ் செய்துட்டோம்னு பீல் செயறாளோ என்னவோ...!”
மாமா மகளின் பாசத்தில் பூரித்து போன தேன், அவர் காட்டிய திசையில் நின்றிருந்த கவிதாவை பார்த்தான். திடீரென அருகே உஷ்ணம் அதிகமாக திரும்பி பார்த்தான். அங்கே சத்யா அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹி ஹி ஹி! கவிதா சத்யா...”
“ஹையோ பார்த்து...”
“தேன்... உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படிடா இருக்க?” என்றபடி வந்தார் மூன்றாமவர் குமரன்.
“நீ மட்டுமா வந்த? சத்யா எங்கேடா?”
“இதோ இருக்காளே மாமா...”
கண்ணாடியை விழிகளுக்கு கீழிறக்கி சத்யாவை பார்த்தவர்,
“அட சத்யாவே தான்! இவனுக்கு வயசாகிட்டே போகுது, நீ என்னம்மா அப்படியே சின்ன பொண்ணு மாதிரி இருக்க?” என்றார்.
வாயெல்லாம் பல்லாக சத்யா பேச தொடங்கும் முன்,
“மாமா உங்களை அங்கே கூப்பிடுறாங்க பாருங்க...” என்று அவரை அனுப்பி வைத்தான் தேன்.
சத்யா முறைப்பதை பார்த்து விட்டு,
“அவர் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி சத்யா...” என்றான்.
“ஆமாம் நீங்க உங்க மாமா பொண்ணை சைட் அடிச்சா பாசம், பெரியவர் எனக்கு ஒரு காம்ப்ளிமென்ட் கொடுத்தா தப்பா?”
“ஹையையோ, இங்கே பாருங்க.... கொலை கொலை...!”
அந்த அலறும் குரலை தொடர்ந்து மண்டமே ஒரே பரபரப்பானது.
மணடபத்தில் இருந்த ஒரு அறையில் சேதுபதியை யாரோ கழுதை நெரித்து கொலை செய்திருந்தனர்.
அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் முகிலன் வந்து தடயங்களை சேர்த்து, முதல் கட்ட விசாரிப்புகளை முடிக்கும் வரை காத்திருந்த தேன், பின் அவனிடம் சென்று விபரங்களை கேட்டான்.
“சேதுபதியோட மகன்க மூணு பேரு மேல தான் சந்தேகம் தேன். மூணு பேருக்கும் கொலை செய்ய வாய்ப்பு இருந்திருக்கு... அவங்க ஒவ்வொருத்தரையும் சேதுபதி ரூமில பார்த்திருக்காங்க.... ஆனால் டைம் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது... ரூமில இருக்க பிங்கர் ப்ரிண்ட்ஸ், உடைஞ்ச கண்ணாடி, கொலை செய்ய பயன்படுத்தின துண்டு எல்லாத்தையும் ஃபோரன்சிக்கு அனுப்பி இருக்கேன்... போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட்டும் வரட்டும்... பார்ப்போம்...”
ஒரு சில வினாடிகள் யோசித்த தேன்,
“நீ அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டாம் முகில், குமரனை கூப்பிட்டு விசாரிச்சு பாரு...” என்றான்.
இன்ஸ்பெக்டர் தேன் குமரன் தான் குற்றவாளி என்று நினைக்கிறார். உங்களின் கருத்து என்ன? இன்ஸ்பெக்டரின் எண்ணம் சரியா? தவறா?
தெரிஞ்சா சொல்லுங்க...
[பதில் தெரிஞ்சுக்க இந்த லின்க்கை க்ளிக் செய்ங்க http://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5424-neengalum-thupariyalam-03#comment-41553 ]