(Reading time: 22 - 43 minutes)

ஜானகி “நான் உன்னிடம் பேசியதற்கு முதல் நாள் நம் ஜோசியர் பேசினார். அவரிடம் நம் வீட்டு நம்பர் உண்டு. அவர் என்னிடம் சொன்னது

“ஏன் ஜானகி அம்மா, நான் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே, மீறி செய்வதாக இருந்தால் ஏன் என்னிடம் வந்தீர்கள்? எனக்கு மனம் கேட்காமல் உங்களுக்கு போன் செய்தேன் ?

“இல்லை அய்யா, எனக்கு தெரியாது. என் நாத்தனார் ஒன்றும் சொல்லவில்லையே? இப்போ கல்யாணத்தை எப்படி நிறுத்துவது? என்று பரிதவிக்கவும்

உங்கள் இருவரின் குல தெய்வத்திற்கு வேண்டி ஏதாவது செய்துவிட்டு வாருங்கள். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”

என்று கூறினார்.

நான் இதை பற்றி பத்மா விடம் பேசியபோது, தோஷம் உனக்கு இருப்பதாகவும், சொந்த அண்ணன் பையனை நாமே நிராகரித்தால் வேறு யார் கட்டுவார்கள் என்று எண்ணியே இந்த திருமணத்தை நடத்துவதாகவும் கூறினாள்.

அதனால் தான் உன்னிடம் பேசினேன். நீ திருமணத்தை நிறுத்த  சம்மதிக்கவில்லை எனவும், அவர் சொன்ன பரிகாரமாவது பண்ணலாம் என்று தான் கோவிலுக்கு கிளம்பினோம். அதற்குள் உனக்கு வேலை வரவே, பத்மா குடும்பத்தோடு முதலிலும், நாம் பிறகும் கிளம்ப நேர்ந்தது.

அப்போது அவர்கள் விபத்தில் குடும்பத்தோடு இறந்து விடவும், எங்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. சில வருத்தங்கள் பத்மா மேல் இருந்தாலும், அவள் எனக்கு தங்கை போலே தான். அவர்களுடைய முடிவு எங்களை மிகுந்த வேதனைபடுத்தியது. சூர்யா தொழிலுக்கு வந்த பின் உன் அத்தை வீட்டோடு போக்குவரத்து கொஞ்சம் குறைந்திருந்தாலும், அதிதிக்கு வந்தனாதான் எல்லாமே. அவள் ரொம்பவும் மிஸ் செய்தாள். “

You might also like - Kadhalai unarnthathu unnidame... A romantic story...

இப்போது ஆதி தொடர்ந்தான் .. “ஆனால் அத்தை என்னிடம் சொல்லியதை வைத்து நீங்கள் ஜோசியம் பார்க்க சொன்னதால்தான் பரிகாரம் என்று கிளம்பி இந்த விபத்து ஏற்பட்டது என்று எண்ணி எனக்கு உங்கள் மேல் வருத்தமாக இருந்தது. உங்களிடம் பேசினால் எதாவது சொல்லிவிடுவேனோ என்று பயந்தேன். ஆனால் நீங்களும் இதை எதிர்பார்க்கவில்லை என்று புரிந்ததால் நான் உங்களிடம் இருந்து விலகி விட்டேன்.

அத்தை இறந்த வீட்டில் தான் நான் சுந்தரம் மாமா, அத்தையை பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தேன். மாமாவும், அத்தையும் உங்களை வெகுவாக ஆறுதல்படுதினார்கள்.

கொஞ்ச நாட்கள் கழித்து அப்பா என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டார். நான் மறுத்து விட்டேன். அதோடு இந்த விஷயத்தில் வீட்டில் உள்ள யாருக்குமே விருப்பமும் இல்லை. அப்பா மட்டுமே தொடர்ந்து வற்புறுத்தி கொண்டிருந்தார்.

அதற்கு பின் அப்பாவிற்கு பிசினஸ் ஸ்ட்ரெஸ், அதோடு தன் தங்கையின் இறப்பு, என்னுடைய போக்கு  இதெல்லாம் தாளமால் ஸ்ட்ரோக் வந்து விடவே அது வரை நம் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபாடு இல்லாமல் இருந்த நான் கம்பெனி பொறுப்பேற்றுக் கொண்டேன். 

அப்பா ஸ்ட்ரோக் வந்து ஹாஸ்பிடலில் இருந்த போது மீண்டும் வந்த சுந்தரம் மாமாவிடம் அப்பா மதியை எனக்கு கல்யாணம் செய்வதை பற்றி பேசவே, மாமா என்னிடம் வந்து பேசினார். “ என்றவன் அன்றைக்கு பேசியதை நினைவு கூர்ந்தான்.

ராகவன் ஹாஸ்பிடலில் இருந்த போது வந்த சுந்தரத்திடம் அவர் தனியாக பேச விரும்பவே, ஆதி வெளியில் நின்று கொண்டிருந்தான். வீட்டில் உள்ள மற்றவர்களை அப்போதுதான் சமாளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான்.

அப்போது வெளியில் வந்த சுந்தரம் “ஆதி .. உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டுமே “ என்றார்.

இருவருமாக கான்டீன் சென்று அமர, சுந்தரம் “ஆதி .. உன் அப்பா உன்னை திருமணம் செய்து கொள்ள சொல்கிறார், “ என்றார்.

ஆதியோ “இல்லை மாமா.. இப்போது உள்ள நிலைமையில் என்னால் திருமணத்தை எதிர் கொள்ள முடியாது”

“இல்லை பா. உன் அப்பா ஒரு மாதத்திற்கு முன்னாடியே என்னிடம் கேட்டார். நான் தான் உன்  மனநிலை அதற்கு தயாராக இருக்காது என்று அவரை கொஞ்சம் சமாளித்து வைத்தேன். ஆனால் அது எல்லாம் மனதில் வைத்து தான் அவர் தன் உடம்பை கெடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. மேலும் இப்போது உள்ள நிலைமையில் உன் அம்மாவும் மிகவும் சோர்ந்து போய் விட்டாள். உங்கள் எல்லோருக்குமே இந்த இழப்பிலிருந்து மீண்டு வர ஒரு மாற்றம் தேவை.

உன் அப்பா உனக்கு என் பெண் மதியை உனக்கு திருமணம் செய்ய கேட்கிறார். அவள் தான் என்ற கட்டாயமில்லை. உன் அபிப்ராயம் என்ன? வேறு பெண்ணை பார்ப்பது என்றாலும் செய்யலாம். ஆனால் உன் அப்பாவிற்கும், தற்போது வீட்டை கவனித்து கொள்ளவும் கண்டிப்பாக ஒரு பொறுப்பான நபர் தேவை. நீ சீக்கிரம் முடிவு செய். “

சற்று நேரம் யோசித்த ஆதி “அப்பாவிற்காகதான் திருமணம் செய்ய முடிவு செய்கிறேன். அது அப்பா சொல்லும் பெண்ணாகவே இருப்பதில் சந்தோஷம். நீங்கள் தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள். ஆனால் திருமணம் சிம்பிள் ஆக இருக்கட்டும். முக்கியமாக என் தற்போதைய மன நிலை பற்றி தெளிவாக சொல்லி உங்கள் மகள் சம்மதத்தையும் கேளுங்கள். அவளை எக்காரணம் கொண்டும் கட்டாயபடுத்த வேண்டாம்.” என்று கூறி முடித்தான்

வீட்டிற்கு வந்து இதை பற்றி சொல்லிய ஆதியிடம் சூர்யாவும், அதிதியும்  சண்டை போட்டனர். அவர்கள் இருவருக்கும் சுந்தரம் மாமா பற்றியோ, அவர்களோடான பழக்கத்தை பற்றியோ எதுவும் தெரியாது. கட்டயதிற்காக இந்த திருமணம் செய்ய வேண்டாம் என்றும், அப்பாவை நாம் சமாளித்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். ஆனால் நான் அப்பாவின் உடல் நிலையை கூறி அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தினேன்.

ப்போது தன் அம்மாவை நோக்கி திரும்பிய ஆதி “அம்மா, உங்களுக்குதான் மதியை பிடிக்குமே. நீங்கள் ஏன் முதலில் இந்த திருமணம் வேண்டாம் என்றீர்கள். மேலும் மதியிடமும் சரியாக நடந்து கொள்ளவில்லை.” என்று வினவினான்.

இதற்கு ஜானகி “உன் அத்தை சொல்லியபடி உனக்குத்தான் தோஷம் என்று எண்ணியிருந்ததால், வந்தனாவின் முடிவிற்கு நம் குடும்பம் தான் காரணமோ என்று வேதனை அடைந்தேன். அது வரை நன்றாக இருந்தவள், இந்த திருமண நிச்சயத்தின் பின் தான் இப்படி இறந்தாள்.

அதே போல் இப்போது மதிக்கும் ஏதேனும் ஆகி விடுமோ என்று பயந்தேன். மதி பிறக்கும் போது முதலில் கையில் வாங்கியவள் நான்தான். உறவு முறையில் அவள் எனக்கு மருமகளாக இருந்தாலும், அதிதியும், மதியும் எனக்கு ஒன்றுதான். அதனால்தான் உன்னிடம் அப்போது மறுத்தேன். ஆனால் நீ உனக்கு கல்யாணமே நடக்க கூடாது என்று நான் நினைப்பதாக எண்ணவும், வேறு வழியில்லாமல் சும்மா இருந்தேன்.

நான் உன்னிடம் மறுத்த விஷயத்தை மீனாட்சியிடம் சொல்லி விடவே, அவளுக்கு என் மேல் கோபம். அவளும் மதியிடம் இந்த திருமணம் வேண்டாம் என்றிருக்கிறாள். அதற்கு என்னுடைய மறுப்பை அவள் சொல்லியிருக்கவே, மதியும் என்னிடம் விலகி விட்டாள். நானும் மீனாட்சியும் தொடர்பில் இருந்தாலும், பிள்ளைகள் இருவரும் பத்து வருடமாக வருவதில்லை. அதனால் மதிக்கு என்னை பற்றி அதிகம் தெரியாது. இந்த நிலையில் நாம் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் இருக்கவே, உன் அப்பா மற்றும் வீட்டை கவனித்து கொள்வதோடு மதி நின்று விட்டாள்.

உன் விபத்தின் போது, எல்லோருமே மதியிடம் நடந்து கொள்ளும் முறை தவறு என்று தோன்றி மாற ஆரம்பித்திருந்தோம். நடுவில் கொஞ்ச நாட்கள் மீனாட்சியிடம் பேசுவது குறைந்திருந்தாலும், உன் விபத்திற்கு பின் அவளிடம் என் ஆதங்கத்தை சொல்லவும், அவள் என்னை சமாதானபடுத்தினாள். அதற்கு பின் தான் நம் வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாயிருந்தோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.