அந்த நேரத்தில் ஒலித்தது அவரது கைப்பேசி.
'சௌக்கியமா சம்மந்தி?' மறுமுனையில் வாசுதேவன்.
'நமஸ்காரம். நன்னா இருக்கேன். நீங்க சௌக்கியமா இருக்கேளா?'
'நன்னா இருக்கேன். ஒரு முக்கியமான விஷயத்துக்காக போன் பண்ணேன். நிச்சியதார்த்ததிலேயே ரெண்டு கல்யாணத்தையும் ரெஜிஸ்டர் பண்ணிடலாம்னு பசங்க சொல்றா நீங்க என்ன சொல்றேள்?'
அப்பாவுக்கு முதல் கட்டத்திலேயே இந்த யோசனை பிடிக்கவில்லை. எதற்காம் அவசரம் என்று தோன்றியது.
'எல்லாம் சம்பிரதாய படியே நடக்கட்டுமே. எதுக்கு அவசரம்???' அவர் மெதுவாக சொல்ல
'எங்கேயோ வெளிநாட்டுக்கு ஹனிமூன் போலாம்னு பசங்க ரெண்டு பேரும் பிளான் பண்றா. அதுக்கு விசா ஃபார்மாலிடீஸ் இருக்காமே. அதுக்காகத்தான். மத்தபடி கல்யாணம் ரெண்டு மூணு மாசத்திலே ஜாம் ஜாம்னு நடத்திடலாம்' என்றார் வாசுதேவன்.
You might also like - Vasantha bairavi... A neat family story...
'சம்மந்தி... நேக்கு என்னவோ...'
'இதிலே இவ்வளவு யோசிக்க ஒண்ணுமே இல்லை. ஆத்துக்கே ரெஜிஸ்ட்ரார் வருவார். எல்லாம் நல்ல படியா நடக்கும். நான் தேவையான ஏற்பாடு எல்லாம் பண்ணிடறேன். நீங்க கவலை படாம இருங்கோ.' சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார் வாசுதேவன். விஷயத்தை அப்பா சொல்ல வேதாவினுள்ளே பேரதிர்ச்சி. கோதையினுள்ளே கொஞ்சம் படபடப்பும், பரவசமும்.
அப்பா ஊருக்கு கிளம்பி இருந்தார். அன்று இரவு ஒலித்தது கோதையின் கைப்பேசி.
'கோதை பொண்ணு....' காதலில் குழைந்து ஒலித்த குரல் யாருடையது என்று யோசிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
'கோதை பொண்ணு... நமக்கு இன்னும் மூணு நாளிலேயே கல்யாணம்டா. போச்சு... போச்சு... என்னடா பண்றது இப்போ.???' கோகுல் ரகசிய குரலில் சொல்ல வெட்கத்தில் படபடத்தது கோதையின் இதயம்.
'என்னடா பதிலே காணோம்... இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நீ எதிர்பார்த்தியா? குரலில் இன்னமும் அதே ரகசிய பாவம்.
'ம்? ம்ஹூம்....' மெல்ல சிரித்தாள் கோதை
'ஹேய்.... வெட்க படறியா? நேக்கு அதை பார்க்கணுமே. போட்டோ எடுக்கணுமே,,,' என்றான். கோகுல். அவள் பதில் சொல்லாத போதிலும் படபடப்பிலும் பரவசத்திலும் தடுமாறும் அவளது சுவாசத்தின் சத்தம் அவனை ரசிப்பின் உச்சியில் நிறுத்தியது.
'கோதை பொண்ணு நோக்கு ஒரு விஷயம் தெரியுமா?' மென் குரலில் தொடர்ந்தான் கோகுல். 'நம்மாத்திலே கோகுல்... கோகுல்ன்னு ஒரு பையன் இருக்கானோல்யோ அவனுக்கு நாளைக்கு பிறந்த நாளாம்...'
'உங்களுக்கா..... நாளைக்கா???..... ஹாப்பி.. ஹாப்பி பர்த்டே...' என்றாள் கோதை.
'அட... நோக்கு இதெல்லாம் சொல்ல தெரியுமா...இப்போ இல்லை.... நாளைக்கு கார்த்தாலே போன் பண்ணி சொல்லு...' என்றவன் நாளைக்கு கார்த்தாலே நீயும், உங்க அக்காவும் கிளம்பி நம்மாத்துக்கு வரேள். சாயங்காலம் பார்ட்டி இருக்கும். சாப்பிட்டுட்டு ராத்திரி ஆத்துக்கு போகலாம்'
'இல்லை அது... அப்பா... ஊரிலே இல்லை...'
'அப்பா ஊரிலே இல்லை.. தானே .. தனியா ரெண்டு பேரும் என்ன பண்றேள் ஆத்திலே? கிளம்பி இங்கே வாங்கோ... உங்க அப்பா கிட்டே எங்க அப்பாவை பேச சொல்றேன் ஒகேயா? நாளைக்கு கார்த்தாலே பத்து மணிக்கு கார் வரும் ரெடியா இருங்கோ ரெண்டு பேரும்... ' உறுதியாக சொல்லி விட்டிருந்தான் கோகுல்.
அதே நேரத்தில் வேதாவின் இதயத்தில் இடியை இறக்குவது போல் ஒலித்தது அவள் கைப்பேசி. முதல் முறை ஒலித்து ஓய அழைப்பை ஏற்க்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் இரண்டு முறை , மூன்று முறை என ஒலிக்க அழைப்பை ஏற்றாள் அவள். மறுமுனையில் சரவணன்.
'தனியா இருக்கியா? பக்கத்திலே யாரவது இருக்காளா?' இப்படித்தான் ஆரம்பித்தான் அவன்.
'இல்லை யாரும் இல்லை. அப்பா ஊரிலே இல்லை' தன்னையும் மீறி உளறிவிட்டிருந்தாள் வேதா.
'வெரி குட்... ' என்றான் அவன். நாளைக்கு மார்னிங் நீ ஆபீஸ் போறா மாதிரி கிளம்பி மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் வந்திடு' என்றான் அவன்.
'இல்லை ... கோகுல்... தங்கைக்கு நிச்சியதார்த்தம் மூணு நாளிலே... இப்போ நான் எப்படி?'
'உனக்கு கல்யாணம்ன்னு சொன்னே??? அவன் குரல் கொஞ்சம் மாற்றத்துடன் ஒலித்தது.
'ரெண்டு பேருக்கும் தான்..' அவள் குரலில் கொஞ்சம் நடுக்கம்.
'அதானே பார்த்தேன். நாலு நாளா உன் கிட்டே இருந்து போன் இல்லைனதுமே நினைச்சேன். நீ வேறொருத்தன் பக்கம் சாஞ்சிட்டேன்னு. என்னை லவ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்க போறயா? ரொம்ப சந்தோஷம்.... எனக்கும் துரோகம் பண்ணு.... அவனுக்கும் துரோகம் பண்ணு ... '
'அய்யோ... நான் அப்படி நினைக்கலை கோகுல்...'