16. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி
அன்று காலையில் தான் வசந்த்தின் மூலமாக அவன் மூத்த சகோதரிகள் இருவரும் பைரவியின் பரிசோதனைக்கு ஒத்துழைப்பார்களா என்று கேட்கச் சொல்லியிருந்தாள் பைரவி..
அவர்கள் இருவரும் ஏற்கனவே இருந்த காழ்ப்புணர்ச்சியால், "இவள் ரத்தத்தை உரிஞ்சும் காட்டேறியா? என்று அவனை திட்டி அனுப்பிவிட்டுருந்தனர்.. அதற்கு பின் பைரவியை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு கீழ் இறக்கம் செய்யும் வகையில் இருந்தது அவர்கள் நடவடிக்கையும் பேச்சும்.
வெறுத்துப் போனான் வசந்த். 'எவ்வளவு நல்ல பெற்றோர்களுக்கு இப்படி தரம் தாழ்த்தி பேசக் கூடிய குழந்தைகள்..'
'நிச்சயம் அப்பாவும் அம்மாவும் பாவம் தான்.. இல்லாவிட்டால் இப்படி இந்த மாப்பிள்ளையின் கையில் மாட்டி குரங்குக் கை பூ மாலையாக ஆவார்களா?'..
'நல்ல வேளையாக இரண்டு தினங்கள் முன்பே அப்பா அம்மா மஹதி மற்றும் தன்னுடைய ரத்த சாம்பிள்களை கொடுத்து விட்டோம்.. இல்லாவிட்டால் இவர்கள் இருவரும் சேர்ந்து அதையும் ஏதாவது சொல்லி தடுத்திருப்பார்கள்'.
ஒருவழியாய் வந்த கூட்டம் திரும்பிப் போனதும் வீட்டிலுள்ளவர்கள் ஒரு பெருமூச்சுடன் அப்பாடா என்று புயல் அடித்து ஓய்ந்தாற்போல் அமர்ந்துவிட்டனர் சிறிது நேரம்.
"அம்மா என்னம்மா இது.. ஒவ்வொரு முறையும் இவர்களுக்கு இதே பிழைப்பாய் போய்விட்டது..எப்படில்லாம் பேசறா?.. நீங்க ஒன்னும் சொல்லாம சும்மா உக்காந்துட்டேளே?, இவாள்ளாம் என் அக்கான்னு சொல்லவே வெக்கமாயிருக்கு..பணத்தாசை பிடித்த கூட்டம்,.", என்று படபடத்தான்.
"ஆமாம்டா.. இவ்வளவு ரோஷம் இருக்கறவன் ஒரு உத்யோகத்தை தேடிண்டு அப்புறம் பேசணும்.. எல்லாம் தலை எழுத்து ..எனக்கு பகவான் சரியா எழுதலை.. ஏதோ கிளாக் உத்யோகம் பார்த்துட்டு ரிடைராகி.. என் பிள்ளை தலை எடுத்தாச்சுன்னு அக்கடான்னு உக்கார வேண்டிய நேரத்துலே.. இப்படி மாப்பிள்ளைன்னு முகமூடி போடா கொள்ளைகாரன் ஒருத்தன் சொத்தை பிரின்னு பயமுறுத்திட்டு போறான்.. நான் கையாலாகாம உக்காந்துண்டு இருக்கேன்.. எல்லாம் என் பிராரப்தம்....", என்று ஆத்திரமாய் அவனை முறைத்தார் ராமமூர்த்தி.
"ஏன்னா அவனை சொல்லாட்டா தூக்கமே வராதா உங்களுக்கு?.. அவனை எதுக்கு இப்படி கரிச்சி கொட்டிக்கறேள்?.. நாம வாங்கிண்டு வந்த வரம் அப்பிடி.. பொண்கள்னு ரெண்டு பேர் இப்படி லங்கா ராட்ஷசிகளா வந்து வாச்சிருக்கா.. நானும் ஊட்டி ஊட்டி தான் வளர்த்தேன் இதுகளை.. எப்பவும் தன்னை பத்தியே யோசிக்க மட்டும் தான் தெரியும் அவாளுக்கு.. பாவம் மஹதியும் வசந்தும்.. இவாளுக்காக எப்பவும் விட்டு கொடுத்து விட்டு கொடுத்தே தங்களுக்குன்னு ஒன்னும் கேக்கணும்னே தோனறது இல்லை இதுக ரெண்டுக்கும்."
என்றாள் ஆதங்கத்துடன் தலையை இரண்டு கையால் பிடித்தபடி.
குளித்து முடித்துவிட்டு பவழமல்லி மாலையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் மஹதி.. கூடவே பைரவி.
You might also like - Ainthu... A horror genre story to scare you...
"வாங்கோம்மா.. மஹதி போ பைரவிக்கு காபியை கொடு.. அஜய் எங்கேம்மா? பின்னாடி வராறா?", என்று கேட்டவளின் பக்கத்தில் தரையில் அமர்ந்த பைரவி..
"மாமி.. ஒன்னும் அவசரமில்லை.. அஜய் இன்னிக்கு காலங்கார்த்தலே சடெனாக எதுக்கோ கிளம்பி மாயவரம் போயிருக்கிறார் .. அதான் அவன் சொந்த ஊராம்.. யாரோ அங்கே அவா ரிலேடிவ்சைப் பார்க்கனும்னு போயிருக்கார்.. வரதுக்கு ரெண்டு நாள் ஆகுமாம்".
"மாயவரம் என்ற பேரை கேட்டதும் நிமிர்ந்து அமர்ந்த சாரதா, "அஜய்க்கு சொந்த ஊர் மாயவரமா?..அட.. இத்தனை நாள் தெரியாம போச்சே.. எனக்குக் கூட மாயவரம் தான் சொந்த ஊர்.. கல்யாணத்துக்கு அப்புறம் தான் இங்கே வந்தோம்.. எங்க அம்மா அப்பா கூட எனக்காகவே அங்கே யிருந்து கிளம்பி இங்கே வந்து செட்டில் ஆனா.. அதெல்லாம் ஒரு காலம்.. இன்னமும் எங்க ஊர் மயூரநாதரை நினைச்சாலே சிலிர்க்கும்.. அவ்வளவு அழகு எங்க ஊர்.. பச்சை பசேல்னு வயலும் தோட்டமுமா..", என்று தன் இளம் வயது நினைவுகளில் மூழ்கினாள் சாரதா.
"யாராமாம்? உனக்கு ஏதாவது தெரியுமா?", என்று கேட்ட வசந்தை பார்த்து முறைத்த ராமமூர்த்தி,
"அதை தெரிஞ்சுண்டு நீ என்ன பண்ணப் போறே?.. மொதல்ல ஏதாவது உத்யோகத்தை தேடிக்கற வழியைப் பாரு சொல்லிட்டேன்.. அடுத்த மாசத்துலேந்து நிச்சயம் உனக்கு பாக்கெட் மணி கட்.. இருபத்தி ஆறு வயசாறது இன்னமும் கூட பொறுபில்லாம படிக்கறேன் கிளாசுக்கு போறேன்னு தண்டமா சுத்திண்டு இருக்க.. மாப்பிள்ளை கேட்டதுலே என்ன தப்பு.. பேச வந்துட்டே .."
"அப்பா" என வசந்த் தழுதழுக்க,
"ஆமாம்டா அப்பா தான்.. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்.. என்ன தான் பண்ணுவேன்.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுவேனா இல்லை பிள்ளைக்கு வேலையில்லேன்னு கஷ்டப் படுவேனா.. எதுக்குடா நமக்கு இந்த பெரிய கனவு.. நம்மாலே முடியுமா?.. யோசிக்க மாட்டியா?.. சப்போர்ட் எதுவும் இல்லாத நமக்கு ஏன் இந்த வீண் வேலை.. இஞ்சினியரிங் படிடான்னா.. நல்ல மார்க் எடுத்தும் ஹிஸ்டிரியும், பொலிடிகல் சயன்ஸும் தான் படிப்பேன்னு சண்டை போட்டு படிச்சே.. அப்போ நான் கூட ஏதோ பிள்ளையாண்டான் ஒரு வெறியா நிச்சயம் ஐ.ஏ.எஸ். கிளியர் பண்ணிடுவான்னு நினைச்சேன்.. ஆனா இப்போ எனக்கு கொஞ்சமும் நம்பிக்கையும் இல்லை.. பணமும் இல்லை. வயசும் இல்லை எங்கிட்ட.", என்றவருக்கு கண்களில் நீர் ததும்பியது.