திருமண வாழ்க்கையில் அப்பொழுதுதான் அடி எடுத்து வைத்தவனை தேவையில்லாமல் தொந்தரவு செய்யப் பிடிக்காமல், வெளியே ஒன்றும் இல்லாதது போல நடந்து கொண்டாள் பைரவி... தன் தாய்க்கு சீக்கிரம் ஏதாவது வழி கிடைக்க வேண்டும் என்று உள்ளுக்குள் மறுகியபடியே இருந்தாள்..
அன்று வெள்ளிக் கிழமை, வசந்த் உள்ளே ஓடி வந்தான்..
"அம்மா, அப்பா, நான் ஐ.ஏ.எஸ். இண்டர்வீயூவில் தேர்ச்சி பெற்று விட்டேன்.. ஆல் இந்தியாவில் இரண்டாவது ரேங்காம்.. டெல்லியிலிருந்து என் பிரண்ட் ஒருத்தன் இப்பொழுது தான் கால் செய்தான்.. ஆல்ரெடி எனக்கும் தகவல் அனுப்பிவிட்டார்களாம்" என உற்சாகம் பொங்க கத்தி கொண்டே வந்த வசந்தை அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.
"வசந்த் வாழ்த்துக்கள்.. கங்க்ராஜூலேஷன்ஸ்.. என்னோட ஆசிர்வாதங்கள்" என அந்த வீடே அமளி துமளி பட்டது..
சாரதாவும், ராமமூர்த்தியும் சந்தோஷ மிகுதியில் அப்படியே அவனை கட்டிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர்..
"கண்ணா.. நீ சாதிச்சுட்டப்பா.. ரொம்ப சந்தோஷம்" என வசந்தை அணைத்து உச்சி முகர்ந்தனர் அவனை பெற்றவர்கள்..வசந்துமே அவர்களை கட்டிக் கொண்டு ஆனந்தத்தில் கண்ணீர் விட்டான்.
பைரவி, "இரு வசந்த் நான் போய் முதலில் கேசரி செய்யறேன்.. உனக்கு முதல் ஸ்வீட் நான் தான் தருவேன்" என கிச்சனை நோக்கி ஓடினாள்..
வசந்துக்கு போன் காலுக்கு மேல் போன்கால் வர ஆரம்பித்தது.. அவன் ஒவ்வொருவரிடம் நன்றி தெரிவித்தபடி இருந்தான்..
அவனது போட்டோ அதற்குள் பேப்பரில் வெளியிட்டுவிட்டதாக கூடுதல் தகவல் சொன்னான் அவனது நண்பன்.. மொத்தத்தில் அந்த குடும்பமே ஆனந்தத்தில் திளைத்து கொண்டிருந்தது..
அடுத்த ஒரே மாசத்தில் டிரையினிங்காக மூசோரி போக வேண்டியிருக்கலாம் என தகவல் சொன்னான் வசந்த்.. எல்லாம் நல்லபடியாக நடக்க தனது பிரார்த்தனையை வைத்தார் சாரதா.
மாலையில் கோவிலுக்கு செல்லலாம் என தீர்மாணித்து அந்த குடும்பம் முழுவதும் தயாராகி கொண்டிருக்க, வாசலில் அரவம் கேட்க யார் என்று பார்க்க, சாரதா வெளியே வந்தார்.
கையில் பழங்கள், பூக்கள் நிறைந்த ஒரு பெரிய பையுடன் அந்த வெளி நாட்டு காரிலிருந்து இறங்கி ஒரு குடும்பமாக "உள்ளே வரலாமா" என கேட்டபடி வந்த குடும்பத்தை குழப்பத்துடன் பார்த்தார் சாரதா.
"வாங்கோ, வாங்கோ.. என் பையனை பார்க்க வந்திருக்கேளா?" என கேட்டபடி, "வசந்த், ஏன்னா , சித்த இங்கே வாங்கோ.. ஆனந்த் குடும்பத்தவா வந்திருக்கா" என்றவர், வந்தவர்களை அமரச் சொன்னார்.
"இந்தோங்கோ, முதல் முறையா உங்காத்துக்கு வந்திருக்கோம்.. வெறும் கையோடு வரக் கூடாது" என்றபடி பூக்கள், பழங்கள் நிறைந்த பையை சாரதாவிடம் தந்தவர்,
"நான் பத்மா.. இவர் என் ஆத்துக்காரர் ராமனாதன்.. இவன் என் பையன் ஆனந்த்.. இவ கவிதா.. எங்காத்துக்காரரும், என் பையனும் சேர்ந்து மெடிக்கல் எக்குயூப்மெண்ட்ஸ் செய்யற கம்பெனி ஒன்னு நடத்தரா.. அதோட சொந்தமா பார்மா கம்பனியும் இருக்கு.. கவிதா எம்.பி.ஏ. படிச்சிட்டு சொந்த கால்லே நிப்பேன்னு, ஒரு தனியார் வங்கியில பெரிய உத்யோகத்துல இருக்கா" என்றார்.
ஆனந்த், என்ற பெயரை கேட்டவுடன் சாரதா ஒரு நிமிடம் திகைத்து, ஒரு வேளை 'இவா பைரவியை பொண்ணு கேட்டு வந்திருக்காளோ?’,' என யோசித்தவர், "ரொம்ப சந்தோஷம்.. வாங்கோ.. உட்காருங்கோ' என உபசரிக்க,
அதற்குள் வெளியே வந்த ராமமூர்த்தியும், வசந்த்தும் வர, ராமமூர்த்தி யார் என சாரதாவை ஜாடையாக கேட்க, வசந்தோ அவர்களை குடும்பமாக கண்டு திகைத்தான்.
"வாங்கோ சார்.. வாங்கோ மாமி" என்றவன் தன் பெற்றோரிடம் திரும்பி, "மிஸ்டர் ஆனந்திடம் தான் வேலை பார்த்துண்டு இருந்தேன்.. மஹி அக்கா கல்யாணத்துல கூட வந்தாரே..அஜய் ப்ரெண்ட்" என சொன்னான்.
"ஆமாமாம்.. ரொம்ப சந்தோஷம் நீங்க வந்தது.. சமயத்துல நீங்க கை குடுத்தீங்கோ.. இதோ இவனும் கலெக்டருக்கு தேர்ச்சி ஆயிட்டான்.. ரிசல்ட் காலையிலதான் வந்தது.. ஆனந்து தம்பிக்கு சொல்லனும்னானே.. சொல்லியிருப்பான்.. அடுத்த மாசம் டிரையினிங் போகனுமாம்" என ராமமூர்த்தி ஏதோ சொல்ல,
சாரதா," காப்பி எடுத்துண்டு வரேன்" என உள்ளே சென்றார்.
அந்த சமயத்தில், மாடியிலிருந்து பைரவி, அஜய், மஹதி கிழே வர, பைரவி ஆனந்தை கவனியாமல், "வசந்த்.. ரெடியா.. மாமி எங்கே.. கோவிலுக்கு போனோம்னு சொன்னாரே?"... "ஓ..சாரி.. கெஸ்ட் வந்திருக்கா போல" என திரும்ப,
அதுவரை அவளையே பார்த்து ரசித்து கொண்டிருந்த ஆனந்தை பைரவி பார்த்துவிட்டு திடிக்கிட்டு, 'இவன் எங்கே இங்கே வந்தான்' என பார்க்க, அதற்காகவே காத்திருந்ததை போல அவளை பார்த்து கண் சிமிட்டினான் அந்த கள்ளன்.
சிவந்த முகத்தை திருப்பிய பைரவி, சட்டென்று உள்ளே சென்று விட, பைரவியுடன் வந்த அஜய் ஆனந்தை பார்த்து விட்டு ஆச்சர்யமாக அவனிடம் செல்ல, அங்கே ஆனந்த் பைரவியை பார்த்தபடி இருப்பதை கண்டவன் ஆனந்தின் கண் சிமிட்டலையும், அவள் முகம் சிவக்க உள்ளே செல்வதையும் வினோதமாக பார்த்தான்..