28. கிருஷ்ண சகி - மீரா ராம்
“சகி… ப்ளீஸ்… போதும்…. இப்படி பார்த்துட்டே இருக்காதீங்க…” என வெட்கமும் கெஞ்சலுமாய் அவள் சொன்னாள்…
“ஏன் கிருஷ்ணா…. வருஷக்கணக்கா உன்னை நான் பார்க்கலை… இப்ப அதான் பார்த்துட்டே இருக்குறேன்… இதுல என்ன இருக்கு?...” என இலகுவாக அவன் கேட்டு முடித்ததும்,
“அது சரி… இதுல என்ன இருக்கா?... ஏன் கேட்கமாட்டீங்க நீங்க?... பார்வையை உள்வாங்குற எனக்கு தான தெரியும்… நான் படுற பாடு….” என அவள் மெதுவாக முணுமுணுக்க,
“என்னடா?... என்ன சொன்ன?...”
“ஒன்னுமில்லை…” என்றபடி முகத்தை வெட்டிக்கொண்டாள் அவள்…
“கிருஷ்ணா… என்னாச்சுன்னு சொன்னாதான தெரியும்?... நான் எதும் தப்பு பண்ணிட்டேனா?... சொல்லுடா?... எதுக்கு உனக்குள்ளயே பேசிக்கிற?...” என அவன் உண்மையாகவே அவள் மேல் உள்ள அக்கறையோடு கேட்க,
“அய்யோ… லூசு சகி… எனக்கு எதுவுமே இல்லை… அநியாயத்துக்கு ஏன் இப்படி நல்லவரா இருக்குறீங்க?... நான் உங்களை ரொம்பவே விரும்புறேன்… நீங்களும் தான்.. அப்படி இருக்கும்போது நீங்க இப்படி பார்த்தீங்கன்னா நான்… நான்…” என பேச முடியாமல் அவள் திணற,
“சாரிடா கிருஷ்ணா…. இனி நான் பார்க்கலை….” என்றான் அவன் உடனேயே…
அதுவரை விலகி இருந்தவள், அவனின் பதிலை கேட்டதும், அவனை நெருங்கினாள்…
“சகி… உங்களை…” என அவன் விழியோடு விழி பார்த்தவள், சற்று நேரத்திலேயே வெட்கம் கொண்டு நிலம் நோக்கினாள்…
“உங்க பார்வையை சந்திக்கிறது சந்தோஷம் தான்… ஆனா அந்த பார்வையோட அப்படியே கலந்திடணும்னு எனக்கு தோணுது… அந்த பார்வையில என்ன அறியாம நான் என்னை இழக்குறேன் சகி… உங்க தோளில் சாஞ்ச மாதிரி உங்க நெஞ்சிலேயும் சாஞ்சிடுவேனோன்னு தோணுது… கிட்ட வரவே ஆயிரம் தடை போடுறீங்க… இதுல அப்படி எதும் நான் செஞ்சிட்டா என்ன பண்ணுறது… அதான் வச்ச கண்ணு வாங்காம பார்க்காதீங்கன்னு சொல்லுறேன்… ப்ளீஸ்… இப்போவாச்சும் புரியுதா?...” என வார்த்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து ஒருவழியாக அவள் தனது தவிப்பினை சொல்லி முடித்ததும், அவன் சுவாசம் மேலும் அவளது காதலால் தடுமாறியது…
“கிரு….ஷ்….ணா……” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் எதுவும் வரவில்லை…
அவள் காதலை உணர்ந்தவனின் மனம் அவளது உணர்வுகளையும் புரிந்து கொண்ட நேரத்தில், அவன் அவளிடம்,
“நீ முதலில் நல்லபடியா படிச்சி முடிக்கணும் கிருஷ்ணா… அதுக்கு இடையில எந்த உணர்வுக்கும் நீ இடமளிக்க கூடாது… நீ டாக்டர் ஆகுற வரை நான் காத்திட்டிருப்பேன்… இப்போ நேரமாச்சு… வா போகலாம்….” என தன் மனதின் காதலை மறைத்து உறுதியான குரலில் அவன் சொல்லவும்,
அவள் தலை தானாகவே அசைந்தது சரி என…
“இந்த பஸ் ஸ்டாப் தான்… இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் வந்துடும்… அதுல போயிடுவேன்…” என சொன்னவள், வேகமாக அவனிடத்தில்
“நாளைக்கு வருவீங்கல்ல சகி?....” என்றாள் ஏக்கத்தோடு….
அவளின் ஏக்கம் அவனையும் வாட்ட, “கிருஷ்ணா நாளைக்கு உனக்கு கிளாஸ் இருக்கா இல்லையா?... அத சொல்லு முதலில்?...”
“கிளாஸ்… சீக்கிரம் முடிஞ்சிடும்…. சகி… நான் வந்துடுவேன்… வெயிட் பண்ணுங்க… ப்ளீஸ் போயிடாதீங்க….” என தவிப்புடன் அவள் சொல்ல, அவனுக்கு தன்னையே சமாளித்துக்கொள்ள முடியவில்லை…
ஒருவழியாக அவளிடம் பேசி நாளை வருவதாய் வாக்கு கொடுத்து அவளை பஸ் ஏற்றிவிட்டு விட்டு தனதறைக்கு வந்து மெத்தையில் கண்மூடி சாய்ந்தவனுக்குள் முற்றிலும் அவள் நினைவுகள் மட்டுமே…
சிரித்த அவள் முகம், கெஞ்சிய அவள் பேச்சு, தவித்த அவளது சொற்கள், தவமிருந்த அவளது விழிகள், என அனைத்தும் அவன் கண் முன்னே வர அவன் தவித்தே போனான்…
“கிருஷ்ணா…. ப்ளீஸ்…. எதுக்குடா என்னை இப்படி பண்ணுற?...” என ஆயிரத்தொன்றாவது முறையாக சொல்லியவன் கடிகாரத்தை பார்த்தபோது மணி 2 தாண்டியிருந்தது…
“வாட்……” என அதிர்ந்து எழுந்தவன் தன்னையே திட்டிக்கொண்டான்…
“இவ்வளவு நேரம் தூங்காம இருந்து இப்படி பைத்தியமாட்டம் முழிச்சிருக்கியே?...” என அவனையே கடிந்து கொண்ட போது
“காதலில் விழுந்தால் பைத்தியம் இல்லாமல் என்னவாம்?...” என அவன் மனம் அவனிடம் சண்டைக்கு தயாராக,
மெல்ல சிரித்தவன், “பைத்தியம் தான்….” என முனகிக்கொண்டே மெத்தையில் சரிந்தான்… ஆனால் பாவம் தூக்கம் தான் அவனுக்கு வரவில்லை கொஞ்சமும்…
கண் மூடி அவளை முதன் முதலில் பார்த்த நாள் முதல் இன்று நடந்த அனைத்தையும் நினைவிற்கு கொண்டு வந்து அந்த இன்பத்தை நுகர்ந்தவனுக்கு நிச்சயம் அவளது நினைவுகள் இன்று அவனை தூங்கவிடாது என புரிந்து போக, வெட்கத்துடன் தன்னையே திட்டிக்கொண்டான்…
“மகத்… நீ ஒரு டாக்டர்… இப்படி தூங்காம இருந்தா நாளைக்கு உங்கிட்ட வர்ற பேஷண்ட்ஸை எப்படி கவனிப்ப?...” என அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக்கொண்டதும்,
“அட அறிவு ராஜா… நாளைக்கு நீ எந்த பேஷண்ட்ஸைப்பா கவனிக்கப்போற?... நீ வந்ததோ கான்ஃபரென்ஸிற்கு, அத நியாபகம் வச்சிக்கோ….” என அவன் மனம் எடுத்துரைக்க,
“அட ஆமால்ல….” என்றான் அவன் அசடு வழிந்தவாறு…
“தெரியாமத்தான் கேட்குறேன்… காதலில் ஏதுடா டாக்டர், லாயர், போலீஸ்னு எல்லாம்?... இது கூட தெரியலை நீ எல்லாம் என்னத்த தான் டாக்டர் படிப்பு படிச்சு கிழிச்சியோ… தெரியலை…” என திட்டிய மனதினை சிரித்துக்கொண்டே வரவேற்றான் மகத்…