அவளின் மனநிலையை மாற்ற விரும்பியவன், காரிலிருந்த பாடலை ஒலிக்கவிட்டபோது தானாகவே சிரித்தனர் இருவரும்…
என்ன என்று இருவரும் கேட்டுக்கொண்ட போது, நேற்றிரவு நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்ள, இருவருக்குமே வெட்கமும், சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது…
அந்த நிறைவில் இருவரும் விழிகளில் காதலை பிரதிபலிக்க, அதற்கு பஞ்சபூதங்களும் சாட்சி ஆகி நின்றது…
“நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே…
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே…”
வெட்கம் கொண்டு அவள் அவன் தோளிலிருந்து விலக, அவனுக்கு இது எதுவோ ஜென்மம் ஜென்மமாய் தொடரும் பந்தம் போலவே இருந்தது… இந்த பந்தம் என்றும் தங்களுக்குள் நீடிக்கும்…. இனி எந்நாளும் இவள் என்னவள், நான் அவளின் சகி தான்… என உளமாற நம்பினான் அவன்..
“நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்…
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்…
நீ இனி நான்… நான் இனி நீ…
வாழ்வோம் வா கண்ணே…”
இப்போதே உன்னுடன் வாழ்ந்திட வேண்டுமடி… உன் கணவனாக… என ஏக்கம் கொண்டு துடித்த மனதை கட்டுப்படித்தி விழிகளில் மறைத்தான் அவன் தன் எண்ணத்தினை…
அவனது அந்த ஏக்கம், அவன் ஒதுங்கி தனக்காக நிற்கும் விதம், கண்ணியமாய் நடக்கும் தன்னவன் என நினைத்தவளுக்கு தன்னவனின் காதல் மிக அற்புதமானது என புரிந்தது… அந்த கிருஷ்ணருக்கு அந்த பகவத் கீதை… அதுபோல் இந்த கிருஷ்ணாவிற்கு என் சகி… ஆம் என் சகியின் காதல்… கீதை எவ்வளவு புனிதமானதோ அதுபோல் இந்த கிருஷ்ணா மேல் என் சகி கொண்டிருக்கும் காதல்… மதம், ஜாதி எதுவும் தேவையில்லை… எங்களின் இந்த காதலுக்கு… என் சகியின் காதலுக்கு ஈடு இணை எதுவுமில்லை… எனினும் இதோ என் நெஞ்சில் இருக்கும் இந்த சிலுவை ஒன்று மட்டும் போதும் நான் என் சகியின் மேல் கொண்ட காதலுக்கு ஆதாரமாக….
“கீதை போல காதல் மிக புனிதமானது…
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது…”
நான் அவருடன் இருந்த போதும், என்னை மறக்கவில்லை… அவரின் நேசமும் விலகவில்லை என்னைவிட்டு… வாழ்வின் எந்த நிலையிலும் மாறாத ஒன்று இருக்குமாயின் அது என் சகியின் நேசம் மட்டுமே…
“வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்…
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்…”
சிறு பிள்ளை என்று அன்றும் ஒதுங்கி இருந்தான்… இன்று காதலி ஆகியும் ஒதுங்கி இருக்கிறான்… எதற்கு தயக்கம் சகி?... உன் அணைப்பு என்னை வசமிழக்க செய்யும் என எண்ணுகிறாயா?... உன் காதலுக்காக ஏங்கி நிற்கும் என்னையும் பாரேண்டா கண்ணா?.. வா என்னிடம்…
“ஏன் மயக்கம்?... ஏன் தயக்கம்?... கண்ணா வா இங்கே…”
பாடல் ஒலித்து முடித்துவிட்டிருந்த போதிலும் இருவர் மனதிலும் உள்ள எண்ணங்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வந்து ஆட்கொள்ள, இருவரும் மௌனம் சாதித்தனர்… கடைசியில் அந்த மௌனத்தை கலைத்தது மகத் தான்…
“உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்டா… நான் இன்னைக்கே கிளம்பணும்… எப்படியும் நான் வர ஒரு ஆறுமாசம் ஆகும்… அதுவரை?...” என அவன் நிறுத்த,
“சரி போன் நம்பர் குடுங்க… நான் போன் பண்ணுறேன்…” என்றாள் அவள் வருத்தத்தை மறைத்து…
“வேண்டாம்டா… அது சரி வராது… படிக்குற உன் மனசை நான் கெடுக்குற மாதிரி ஆகிடும்… நீ முதலில் படிச்சு முடி… அதுக்குப் பிறகு பார்த்துக்கலாம் மத்ததை… எனக்கு என்னைவிட உன் படிப்பு தான் முக்கியம்…. ஆறுமாசம் கழிச்சு கண்டிப்பா வருவேன் உன்னைப் பார்க்க…” என தீர்மானமாக அவன் சொல்லி முடித்ததும், அவள் எவ்வளவோ கெஞ்சி பார்த்தாள்… அவன் கடைசியில் அவளின் அழுத முகத்தினை பார்த்துவிட்டு,
“என் நம்பர் மட்டும் தரேன்… ஆனா முக்கியமான விஷயம் மட்டும் தான் நீ அதுல சொல்லணும்… வேற எதுக்காகவும் நீ அந்த நம்பருக்கு பேச கூடாது… அதே நேரத்துல உனக்கு பிரச்சினைன்னா முதலில் நீ பேசுறது அந்த நம்பருக்காத்தான் இருக்கணும்… சரியாடா?...” என கேட்ட நொடியில் அவன் தோள் சாய்ந்து அழுதாள் அவள் நான் காத்திருப்பேன் என…
அவள் சொன்னபடியே அவளும் காத்திருந்தாள் தான், அவன் வரும் நாளை எதிர்நோக்கி… ஆனால் காத்திருக்கிறேன் என சொல்வதற்கு அல்ல… இனி நீங்களும் காத்திருக்க தேவையில்லை என…
“பாட்டி எனக்கு எங்க சொந்தத்துல வேற இடம் பார்த்துருக்குறா… படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டா… அதனால நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க… காதலிக்கிறவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா என்ன?... அதும் இல்லாம எனக்கு இது காதல் தானான்னே சந்தேகமா இருக்கு… உங்க மேல உள்ள இன்ஃபேக்சுவேஷனில் தான் லவ் அது இதுன்னு உளறிட்டேனோ என்னவோ… சரி விடுங்க… முடிஞ்சதை பத்தி பேசி என்ன பிரயோஜனம்?... விட்டுடுங்கோ… எனக்கு இந்த ஆறு மாசத்துல உங்க நியாபகமே வரலை கொஞ்சம் கூட… அப்படி வந்திருந்தா நான் உங்களுக்கு போன் பண்ணியிருப்பேனே… பண்ணாதப்பவே நீங்க புரிஞ்சிருக்க வேண்டாமா?...” என கேள்வி கேட்பது போல் பதிலை சொல்லியவளை ஊமையாய் பார்த்தான் அவன்…
“எனக்கு இன்னும் இரண்டு வருஷத்துல கல்யாணம் முடிஞ்சிடும்… யார் கண்டா அடுத்த முகூர்த்தத்துல கூட முடிய வாய்ப்பிருக்கு… அதனால தான் சொல்லுறேன்… நீங்களும் யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையில சந்தோஷமா இருங்க… நான் வரேன்… சாரி போறேன்…” என சொல்லியவள் அங்கிருந்து சென்று வெகு நேரம் கழித்தே அவன் சுயநினைவிற்கு வந்தான்….
அன்றிலிருந்து அவளை மறக்க அவன் போராடுகிறான் தான்… ஆனால் அவனால் அது ஏனோ முடியவில்லை…
நடந்த நிகழ்வுகளை அனைவரிடத்திலும் சொல்லி முடித்துவிட்டு கைகட்டியபடி நின்ற மகத்தினை பிரபு அணைத்துக்கொண்டான் சட்டென…
தொடரும்
{kunena_discuss:907}