செல்போனை எடுத்து, இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களில் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவன் சட்டென அந்த பாடலை பார்த்ததும் சிரித்தான்…
பின், மெல்ல பாடலை ஒலிக்கவிட்டான்…
“நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது…
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது….” என பாட்டுச்சத்தம் கேட்டதும் எழுந்த கோகிலவாணி,
“அடியே… இன்னும் நீ தூங்கலையா?... போதும் நீ பாடம் படிச்சதும், பாட்டு கேட்டதும்… ஒழுங்கா எல்லாம் ஆஃப் பண்ணிட்டு படு… பேசாம….” என ஒரு அதட்டல் போட,
“சரி பாட்டி…” என வெளியே சொன்னவள், “பழைய பாட்டுதான் வையேண்டின்னு என்னை தொந்தரவு செய்வல்ல, அப்ப உன்னை பார்த்துக்குறேன்…” என மனதிற்குள் திட்டிவிட்டு, ஹெட்போனை எடுத்து காதில் வைத்து படுத்தாள்….
ஏனோ அவனை பார்த்து காதலை சொல்லிவிட்டு வந்த நொடி முதல் அவள் அவளாகவே இல்லாதது புரிந்தது அவளுக்கு… இருந்தும் அந்த உணர்வை மனதார வரவேற்று ஏற்றுக்கொண்டாள் அவள்…
“இது ஒரு தொடர்கதை…
தினம் தினம் வளர்பிறை…”
என பாடல் ஒலிக்க, அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது இனி இது நாள்தோறும் வளரும் என….
மறுநாள் விடிந்ததும், அவனைப் பார்க்கும் ஆவலோடு குளித்து முடித்து விரைவிலேயே காலேஜ் கிளம்பியவளை ஒரு சிறு ஆச்சரியத்தோடு பார்த்தார் கோகிலவாணி…
எப்போதடா முடியும்?... என காத்திருந்தவளை அதற்கு மேலும் சோதிக்காது கிளாஸ் முடிய, துள்ளி ஓடும் மானாய் காலேஜிலிருந்து வெளியே வந்தாள் அவள்…
“இந்நேரம் வந்திருப்பாரே… ரொம்ப நேரம் காக்க வச்சிட்டோமோ?...” என எண்ணியபடி அவள் நகரப்போன போது, அவளருகில் ஒரு கார் வந்து நின்றது….
“கிருஷ்ணா….” என காரிலிருந்து இறங்கியவனைப் பார்த்த பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது…
“சகி….” என்ற துள்ளலோடு அவனருகில் அவள் வர, “காரில் ஏறு…” என்றான் அவன்…
பின் கதவை திறந்து விட்டவனை முறைத்தவள், கார் கதவினை வேகமாக அறைந்து மூடிய போது, அவனது புரியாத பாவனையை ரசித்தவள், அவன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, காரின் முன் பக்க கதவை திறந்து அமர்ந்து கொண்டு
“என்ன வர்றீங்களா இல்லையா?...” என செல்லமாக மிரட்ட, அவனும் வந்து காரை ஸ்டார்ட் செய்தான்….
“கிருஷ்ணா… இது நான் வாங்கிய கார்….. உனக்கு பிடிச்சிருக்கா?...” எனக் கேட்க
“ஹ்ம்ம்… பிடிச்சிருக்கு… ஆனா…”
“என்ன கிருஷ்ணா ஆனா?... சொல்லு….”
“இல்ல சகி… நீங்க ஆடம்பரத்தை ரொம்ப விரும்பமாட்டீங்க… தேவைக்கு அதிகமா… அப்படி இருக்கும்போது நீங்க எப்படி கார்னு தான் யோசிச்சிட்டிருக்கேன்?...”
“என்ன ரொம்ப நல்லா புரிஞ்சி வச்சிருக்குறடா…” என அவன் சொன்னதும் அவன் மீது பார்வையை செலுத்தியவளை கவனித்தவன்,
“நீ சொல்லுறது சரிதான்…. நான் முதலில் பைக் தான் வாங்கினேன்… அதுல தான் போயிட்டு வந்துட்டு இருந்தேன்… பட் அப்பதான் நான் போன வழியில அடிபட்டு கீழே விழுந்து கிடந்தார்… நான் யாரைஎல்லாமோ உதவிக்கு அழைச்சேன்… யாரும் முன்வரலை… அவரை தூக்கிகிட்டு போய் வர்ற காரை எல்லாம் மறிச்சேன்… அப்பவும் ப்ரயோஜனம் இல்லை… ஆம்புலன்ஸ் வர்ற வரை காத்திருக்குறது அவரோட ஹெல்த் கண்டிஷனுக்கு சரி இல்லைன்னு எனக்கு தோணினதுனால தான் நான் மத்தவங்க உதவியை நாடினேன்… ஆனா யாருக்கும் உதவி செய்ய மனசு இல்லை… கடைசியில ஒருத்தர் அவரோட காரில லிப்ட் கொடுத்து உதவினார்… அடிபட்டவரும் உயிர் பிழைத்தார்… அப்ப தான் யோசிச்சேன்… எங்கிட்ட கார் இருந்திருந்தா யாரோட உதவியையும் எதிர்பார்க்காம நானே அவரை காரில் அழைச்சிட்டு போய் வைத்தியம் பார்த்திருக்கலாம்… ஆனா அது இல்லையே அப்ப எங்கிட்ட… அதனால தான் இந்த காரை என் சக்திக்கும் மீறி வாங்கினேன்… ஆனா இல்லத்துக்கு நான் எந்தவிதத்திலேயும் உதவிகரமா இல்லாம இருக்க கூடாதுன்னும் தெளிவா இருக்குறேன் கிருஷ்ணா… உங்கிட்ட இப்ப சொல்லுறேன் கிருஷ்ணா, நான் ஸ்காலர்ஷிப்ல தான் படிச்சேன்… இப்பவும் படிக்குறேன்… என் சம்பளம் மொத்தமும் இல்லத்துக்கு தான் கொடுக்குறேன்...” என்று சொன்னவனை அதிசயம் போல் பார்த்தவள்,
அவனைப் பார்த்துக்கொண்டே, அவன் தோளில் சாய்ந்தாள்…
“ரொம்ப பெருமையா இருக்கு சகி… நீங்க சொன்னதை கேட்குறப்போ… உங்களை காதலிக்குறது நிஜமாவே வரம் தான் சகி….” என அவன் தோளில் சாய்ந்து விசும்பியவளை பொக்கிஷம் போல் பார்த்தான் அவன்….