09. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி
அன்று இரவு ஆதியோடு பேசி வைத்த ப்ரயுவின் மனம் சமாதனம் அடைய மறுத்தது.. அவளுக்கு நன்றாக தெரியும் ஆதியிடம் கடையில் நடந்த விஷயத்தை சொன்னால், அவன் வித்யா மாமியார் மேல் மட்டுமில்லாமல், தன் அம்மா, தங்கையிடம் கூட கோபப்படுவான்..
ஆதியை பொறுத்தவரை அவன் ப்ரயுவை மிகவும் நேசிப்பவன். அருகில் இருந்தால் அவளை நன்றாக பார்த்துக் கொள்வான். இதை ப்ரயு நன்றாக புரிந்து கொண்டிருந்தாள்.
ஆனால் ப்ரயுவிற்குதான் மனம் கேட்கவில்லை. என்னதான் இருந்தாலும் ஆதி ஒரே பிள்ளை.. அவன் தாயை பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டும் இல்லாமல், அவன் தங்கைக்கும் அவன்தான் ஆதரவு. இன்றைக்கு தனக்காக பேசி, அவர்களோடு சண்டை இட்டால், நாளைக்கு அவர்கள் முகம் பார்க்க வேண்டும். அதனால் ஆதி தன்னால் வருத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
தான் ஆதியோடு வாழப் போகும் காலம் நிறைய இருக்கிறது. மிஞ்சி போனால் மூன்று வருடங்கள் இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆதி வந்து விட்டால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதை எண்ணியே ப்ரயு தன்னை சமாதனப்டுதிக் கொண்டாள்.
அங்கே ஆதியோ ப்ரயுவின் நினைவாக இருந்தான். அன்று காலை அவளை போட்டோவில் பார்த்தவுடன் தோன்றிய உணர்வுகள், அவள் தனக்காக அனுப்பிய பரிசுகள் .. அவனுக்கு அவள் எவ்வளவு தன்னை தேடுகிறாள் என்று உணர்ந்தான்.
அவனுக்கு தெரியும். தன் அன்னை சொன்னது வித்யா மாமியார் பேசியதை மட்டுமே.. அதற்கு தன் அம்மா, தங்கை எப்படி react செய்திருப்பார்கள் என்று.
ஆதியின் தங்கையும், தாயும் அடிப்படையில் நல்லவர்கள்தான். அவன் அம்மா சிறு வயதிலேயே தன் கணவனை இழந்து, தனியாக பிள்ளைகளை வளர்த்ததால், கொஞ்சம் இந்த சமுதாயத்திற்கு பயப்படுவார்கள்.
மேலும் ஆதியின் கல்யாணம் வரை, தங்கள் வீட்டில் ஏதாவதொரு பெரிய முடிவு எடுக்க வேண்டுமென்றால், ஆதியின் அப்பா வகை உறவுகளோடு கலந்து பேசிவிட்டுதான் செய்வார். அவர் செய்வதில் சிறு தவறு இருந்தாலும் அவர்கள் அதிகமாக குத்திகாட்டுவதோடு, அப்பா இல்லாமல் வளர்ந்தவர்கள் ..இப்படிதான் இருப்பார்கள் என்று வேறு சொல்வார்கள்.
அதனால்தான் வித்யா மாமியார் வேண்டும் என்றே செய்கிறார்கள் என்று தெரிந்தும் , தன் அன்னை பிரத்யாவை வருத்தப்பட வைக்கிறார் என்று அவனுக்கு தெரியும். ஆதி நினைத்தது இது எல்லாம் ப்ரத்யா புரிந்து கொள்வாள் என்று எண்ணினான்.
மறுநாள் வேலைக்கு சென்ற ப்ரத்யாவை பிரியா கேலி செய்தபடி இருந்தாள்.
“என்ன மேடம்.. photo பார்த்துட்டு அண்ணாவோட reaction என்ன ? அநேகமா சீக்கிரமே உன்னை பார்க்க கிளம்பி வருவார்னு நினைக்கிறேன் ..”
“ஏய்.. உன்னை .. என்ன செய்யறது? சும்மா ஒட்டாதே. .. எப்படியும் அங்கே போய் ஒரு வருடமாவது ஆனால் தான் அவர் லீவ் போட்டு வர முடியும்.”
“சரி.. சரி.. நடந்தது என்ன.. ? அதை சொல்லு? “
“எதை பத்தி கேட்குற?”
“ஹ்ம்ம்.. அசோகர் மரம் நட்டார்ன்னு நாம 5 ம் கிளாஸ் லே படிச்சோமே அதை பத்தி கேட்குறேன்.. நல்ல வந்துடும்டி.. வாயிலே... அண்ணா என்ன சொன்னார்னு கேட்குறேன்? அப்புறம் நேத்திக்கு கடைக்கு போயிட்டு வந்தியே? purchase எல்லாம் முடிச்சிட்டயா?”
“purchase முடிஞ்சுது .. என்ன கொஞ்சம் வித்யா மாமியார் செலவ ஏத்தி விட்டுடாங்க.. அப்புறம் நான் அத சமாளிச்சிட்டேன்..”
“ஒஹ்.. குட். “
“உங்க அண்ணா நான் அனுப்பின gift பிடிச்சுதுன்னு சொன்னார்..”
“ஏண்டி சென்சார் மேட்டர் எதுவும் பேசலையா?”
“அதுதான் சென்சார்ன்னு சொல்லிட்டியே.. அப்புறம் அத எதுக்கு கேட்டுட்டு இருக்க?”
“ஹி.. ஹி.. எல்லாம் கொஞ்சம் பொது அறிவ வளர்த்துக்கதான்..”
“அம்மா தாயே.. உனக்கு இருக்கற அறிவே போதும்.. இதுக்கு மேலே வளர்ந்தா உலகம் தாங்காது... பாவம்.. பிழைச்சு போகட்டும் . .விட்டுடு..”
“சரி.. சரி.. ஏதோ நீ கெஞ்சி கேட்குற.. அதுனால விடறேன்...போ..”
“அடிங்க... நான் கெஞ்சறேனா..” என்று அவளை விளையாட்டாக அடித்தாள் ப்ரத்யா...
நேற்றைய மனநிலை சற்று மாறியது அவளுக்கு..
பிரத்யாவின் தினசரி நடவடிக்கைகள் எந்த மாறுதலும் இல்லாமல் சென்றது. அந்த வார விடுமுறையில் பிரத்யாவின் அம்மா, அப்பா இருவரும் அவள் வீட்டிற்கு வந்தனர். மாதம் ஒரு முறை நேரில் சென்று நலம் விசாரிப்பார்கள். வாரம் ஒரு முறை ப்ரத்யா மாமியார்க்கு பேசி விடுவார்கள்.
ப்ரத்யா மாமியாரும் அவர்களிடம் இயல்பாக பேசுவார். அவரின் குணங்கள் மாறுவது வித்யா விஷயத்தில் மட்டும் தான். அவளுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதே.. மற்றபடி அவர் தான் உண்டு .. தன் வேலையுண்டு என்று இருப்பவரே.
ப்ரத்யா அம்மா அவரிடம்,
“சம்பந்தி அம்மா , பிரத்யாவின் தங்கை பவித்ராவிற்கு ஒரு வரன் வந்திருக்கு. “