16. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ
காலத்துக்கு மாற்றும் சக்தியிருக்குன்னா அது ஒவ்வொருவருடைய மனநிலையை பொறுத்தது... அன்னைக்கு கோபமா பேசிய யுக்தா தானா இது என்று மதிக்கும் செந்திலுக்கும் ஆச்சர்யமாக இருந்தது... அவள் நடந்துக் கொள்ளும் முறை எல்லோருடைய மனசையும் மாற்றிவிட்டது...
இதோ திருமணம் ஆகி ஒரு மாசம் ஆகிவிட்டது... பிருத்வியை தவிர மற்றவர்களோடு யுக்தா முன் மாதிரி பழக ஆரம்பித்துவிட்டாள்....
யுக்தா மீது கோபமாக இருந்தாலும் அதையும் மீறி ஏர்ப்போர்ட்டில் அவள் நின்றிருந்த நிலைமை பிருத்வியின் மனசுக்கு கஷ்டமாக இருந்தது... அதன் பிறகு அவள் அறை வாசத்தை அவன் நீட்டிக்க விரும்பவில்லை... அதை யுக்தாவிடமோ தன் குடும்பத்தாரிடமோ சொன்னால் யுக்தா மீது இவனுக்கு கோபம் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வார்கள்...
அதனாலேயே அவன் வேறொரு வழியை யோசித்தான்.... மதி ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்த போது அவளிடம் சென்றவன்...
"அம்மா ஏம்மா இப்படி எல்லா வேலையும் நீங்களே செஞ்சு கஷ்டப்பட்றீங்க... நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது மருமகளா இல்லை மகாராணியா...?? அவ ரூம்க்குள்ளையே இருக்கறதும் நீங்கல்லாம் அவளுக்கு சேவை செய்யறதும்... உங்களுக்கு வந்து அவளை ஹெல்ப் பண்ண சொல்லலாமில்ல.... நியூயார்க்ல இருந்து வந்த அப்போ நம்ம வீட்டுக்கு வந்த முதல் நாள் என்னமா சீன் போட்டா... நான் சொல்லல அதெல்லாம் ட்ராமான்னு... இப்பப் பாருங்க அவ நினைச்சது நடந்த உடனே இப்போ எப்படி இருக்காப் பாருங்க...
"இப்போ எதுக்குடா அவளை குறை சொல்லிக்கிட்டு இருக்க... நீ தானே அன்னைக்கு தய தக்கான்னு குதிச்ச... அவளை பார்த்தா கோபமா வருது... அவளை வீட்டை விட்டு அனுப்புங்கன்னு... அதான் உன்னோட கண்ணுல படாம இருக்கா..."
"எவ்வளவு நாள் என்னோட கண்ணுல படாம இருக்கப் போறா... அன்னைக்கு அவ அப்பா அம்மா வந்தப்பவும்... ஏர்போர்ட்டுக்கு போனப்பவும்.. பார்த்துக்கிட்டோமில்ல... அன்னைக்கு ஏதோ கோபத்துல பேசினேன்.. அதுக்காக அவளை அனுப்பியா விட்டுடீங்க... இதெல்லாம் அவளுக்கு ஒரு சாக்கு... பிரணதி தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டேங்குறான்னு பார்த்தா... இப்ப இவளும் அப்படித்தான் இருக்கா... பொண்ணும் மருமகளும் இருந்தும் நீங்க தனியா கஷ்டப்படனும்னு இருக்கு... நான் என்ன செய்ய..." கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டான்...
"இப்போ எதுக்கு இவன் இப்படி கத்திட்டு போறான்... முன்னல்லாம் வீட்ல ரொம்ப கோபப்படமாட்டான்... இப்போ ரொம்ப மாறிட்டான்..." வாய்க்குள்ளேயே முனகிவிட்டு போய்விட்டாள் வளர்மதி.
கதவு திறந்திருக்கவே பிருத்வி பேசியது எல்லாம் யுக்தாவுக்கு கேட்டது... அவளுக்கு கேட்கவேண்டும் என்று தானே அவன் அப்படி கத்திப் பேசியது... அது அவளுக்காக தான் பேசியது என்று அவளுக்கு தெரியவில்லை... இப்படி அறையிலேயே அடைஞ்சிக்கிட்டு இருக்கோமே... எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போறோம்னு யுக்தா ஏற்கனவே சிந்தித்தது தான்... தான் வீ்ட்டில் இருந்தும் அத்தை தனியா கஷ்டப்பட்றத பார்த்து இவளுக்கும் வருத்தமாக தான் இருக்கும்...
இப்போ தான் பிருத்வியே சொல்லிவிட்டானே இனி என்ன பிரச்சனை... எல்லாம் வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்துவிட்டாள்... அவளுக்கு வேலை செய்வது ஒன்றும் கஷ்டமானதாக இல்லை... நியூயார்க்கில் வேலைக்காரர்களுக்கு சம்பளமே அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இவளது அப்பா அம்மாவே வேலைகளை செய்துவிடுவார்கள்... சில சமயங்களில் அவர்கள் தாமதமாக வரும் வேளையில் இவளே எல்லாம் செய்துவிடுவாள்...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
அதுமட்டுமல்ல பிருத்வியோடு திருமணம் ஆக வேண்டும் என்ற கனவில் அவள் பிருத்வியோடு இருந்து வீட்டை கவனித்து கொள்ள வேண்டும்... அவனின் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து அவர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவள் நினைத்தது தான்... இவள் கனவுப்படி எதுவும் நடக்கவில்லையென்றாலும்... பிருத்வி இப்போது இவள் கணவன்... இவர்கள் இப்போது இவள் குடும்பம் தானே....
எல்லாம் வேலைகளையும் யுக்தாவே செய்வது மதிக்கு கஷ்டமாக இருந்தது... அதனால் எனக்கு உதவியாக இருந்தாலே போதும்னு மதி கூறினாள்.... ஆனால் யுக்தா அதற்கு மறுத்துவிட்டாள்... பிறகு மதி யுக்தாவுக்கு உதவியாக இருந்தாள்... இப்படியே அவர்களுக்குள் பழைய மாதிரி நெருக்கம் வந்துவிட்டது...
பிரணதிக்கும் யுக்தா அறைக்குள்ளே அடைந்துக் கிடந்தபோது போய் பேச தயக்கமாக இருந்தது... இப்போதோ யுக்தா வீட்டில் நடமாடிக் கொண்டிருப்பதால் அவளோடு பேசாமல் இருக்க முடியவில்லை... மதியும் பிரணதியிடம் சொல்லி வைத்திருந்தாள்... அவள் தோழி கவியும் இப்போது யுக்தாவிடம் பேசுவதில்லை... உங்க அண்ணனும் இப்படி இருக்கான்... நீதான் அவளோடு இருக்க வேண்டும் என்றதால் பிரணதியும் யுக்தாவை எங்கேயாவது வெளியில் அழைத்துச் செல்வது என்று யுக்தாவுடன் நேரத்தை செலவளித்தாள்...