“இல்லை பண்ண மாட்டேன். சரி இப்போ கிளம்பலாம். அம்மாவை ரொம்ப கவலைப்பட வேண்டாம்ன்னு சொல்லு. முடிஞ்சவரை விஷயம் வெளிய வராம பார்த்துக்கலாம்”, ஸ்ரீதர் சொல்ல அவனிடம் தலையாட்டி விடைபெற்றாள் ரூபா.
ரூபா... ஸ்ரீதர் கல்லூரிக்கு வந்து தன்னை சந்தித்ததையோ, ACP கூறியதைப் பற்றியோ தன் தாயிடம் கூறவில்லை. எங்கே பயந்தே தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயம். அன்றும், மறுநாளும் வேலை மிகுதியாக இருந்ததால் விமலா அலுவலகத்தில் இருந்து தாமதமாக வர அவர்களால் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. நாள்தோறும் ஸ்ரீதருக்கும், மதிக்கும் இரவு தகவல் மட்டும் அனுப்பிக் கொண்டிருந்தாள். தன் அப்பாவும், விமலாவும் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்கள் அறையை ரூபா சோதனை செய்ய அவளால் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. சாவித்ரியும் அவரால் முடிந்த வரை தேடுதலில் ரூபாவிற்கு உதவினார்.
இரண்டு நாட்களுக்குப் பின் அன்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே வந்த விமலா தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகவும் சீக்கிரம் சாப்பிட்டு படுக்கப் போவதாகவும் கூற, அவள் சீக்கிரம் தூங்கி தன் தந்தை தாமதமாகத் தூங்கினால் பிரச்சனை என்று எண்ணிய ரூபா விமலாவிடம் வந்து,
“அக்கா, எனக்கு இன்ஜினியரிங் சப்ஜெக்ட்ல கொஞ்சம் டவுட் இருக்கு. மேடம் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் சொல்லி இருக்காங்க. ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்றியா”, முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“நான் சொன்னது உனக்கு காதுலையே விழலையா ரூபா. ரெண்டு நாளா ஆபீஸ்ல செம்ம வொர்க். சாப்பாடு கூட வேணாம். அப்படியே போய் படுக்கலாம்ன்னு இருக்கு”
“ப்ளீஸ்க்கா ஒரு அரை மணிதான் ஆகும். ரெண்டு, மூணு டவுட்ஸ்தான் இருக்கு. நாளைக்கு முதல் பீரியடே டெஸ்ட். அதுதான் கேக்கறேன். இல்லைன்னாக்கூட காலேஜ் போய் ஃப்ரிண்ட்ஸ்கிட்ட கேட்டுப்பேன்”
“யாரு உன்னோட ஃப்ரிண்ட்ஸ்தானே, அவங்களே எல்லாத்தையும் உங்கிட்ட கேட்டுத்தான் எழுதுவாங்க. இதுல அவங்க உனக்கு சொல்லித் தரப்போறாங்களா. போனாப்போகுது, இந்த ஒரு முறை சொல்லித் தரேன். நான் போய் ஃபிரெஷ் ஆகிட்டு வர்றதுக்குள்ள எல்லாத்தையும் எடுத்து வை. அம்மா எனக்கு ஒரு காஃபி கொடுங்க”, என்றபடியே குளியலறை நோக்கி சென்றாள்.
அடுத்த அரை மணி நேரம் ரூபாவின் சந்தேகத்தை தீர்ப்பதில் கழிய, அவர்களின் தந்தையும் கடையை மூடிவிட்டு வீடு வந்து சேர்ந்தார். அனைவரும் உண்டு, விமலாவும் அவளின் தந்தையும் பேசிக்கொண்டு அமர்ந்திருக்க, ரூபா சென்று அவர்கள் மூவருக்கும் பால் கலந்து கொண்டு வந்தாள்.
“என்ன அதிசயம், எப்பவும் அம்மாதானே நமக்கு பால் கலந்து தருவாங்க”
“இல்லக்கா ஆபீஸ்ல இருந்து அவ்ளோ டயர்ட்டா வந்தும் கூட எனக்கு டவுட்ஸ் கிளியர் பண்ணின இல்லை. அதுக்கு ஒரு சின்ன தேங்க்ஸ்”, என்று கூற விமலாவும் வேறு எதுவும் கேட்காமல் பாலைப் பருகினாள். ஏற்கனவே சோர்வாக இருந்ததால், பாலை அருந்தியவுடன் அவள் படுக்க செல்ல, அவளின் தந்தையும் தானும் சென்று படுப்பதாக அடுத்த அறைக்கு சென்றார். அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன், கைப்பேசியில் மதிக்கும், ஸ்ரீதருக்கும் ரூபா தகவல் அளிக்க அவர்கள் அடுத்த அரை மணியில் அங்கு இருப்பதாக பதில் தகவல் அளித்தனர்.
ரூபா ஏதோ பரபரப்பாக ஃபோனில் செய்தி அனுப்புவதைப் பார்த்து சாவித்ரி என்னவென்று கேட்க, ரூபா அவரிடம் சிறிது நேரம் கழித்துக் கூறுவதாக சொன்னாள். அடுத்த பத்து நிமிடம் கழித்து சாவித்ரியை அவள் பக்கத்தில் வரச்சொல்லி மெது குரலில், ஸ்ரீதரிடம் பேசியதில் ஆரம்பித்து பாலில் தூக்க மாத்திரை கலந்தது வரை சொல்லி முடித்தாள். அதைக் கேட்டதிலிருந்து சாவித்ரி அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்தார்.
சிறிது நேரம் சென்று அவர்களைப் பார்க்க இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று விமலாவை தட்டி எழுப்பி ரூபா சோதனை செய்ய சிறிது கூட அசைந்து கொடுக்காமல் தூங்கினாள் விமலா. அவளின் தந்தையின் அறைக்கும் சென்று சோதனை செய்ய அவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
மேலும் பத்து நிமிடம் கழிந்தபிறகு மதியிடமிருந்து அவர்கள் வீட்டிற்கு வரலாமா என்று கேட்டு மெஸேஜ் வர, அவர்களை வரச்சொல்லி பதில் தகவல் அனுப்பினாள்.
இவர்கள் இருவரும் பெண்களாக இருப்பதால், அவர்கள் துணைக்கு இருக்கட்டும் என்று தேவியையும் உடன் அழைத்து வந்திருந்தான் மதி. மதி, தேவி, ஸ்ரீதர் மற்றும் அகில் நால்வரும் ரூபாவின் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“செக்யூரிட்டி ஏதானும் கேள்வி கேட்டானா. நீங்க வந்ததை ரொம்பப் பேர் பார்த்தாங்களா. நாளைக்கு அப்பாக்கிட்டயோ, இல்லை விமலாக்கிட்டயோ யார் வந்தது அப்படின்னு ஏதானும் கேட்டா மாட்டிப்போமே”