08. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்
தீயாக வந்தாள் இவள்..... திண்டாடவே செய்தாள் இவள்.....
காற்றாகவே வந்தாள் இவள்...... உன் சுவாசத்தில் சென்றாள் இவள்.....
மறுநாள் காலையில் சுறுசுறுப்பாக எழுந்த ஸ்வேதா, இன்று ஹரி வாங்கப்போகும் பல்பை நினைத்து பரம சந்தோஷத்துடன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். எத்தனை கொழுப்பு இருந்தால் தீபாவோட சேர்ந்து என்னை வெறுப்பேத்தி இருப்பான். நான் பேசறேனா, இல்லையான்னுக்கூட கவலையில்லாம அவக்கிட்ட என்ன கடலை போட வேண்டி இருக்கு. இதுல அவ சமையலை வேற புகழ்ந்தாறது. நடுநடுவில் சுப்ரபாதத்திற்கு இடையில் ஹரிக்கு விடாது அர்ச்சனைகளும் நடந்தேறியது. தீபா.... இத்தனை வருஷமா எனக்கு ஃபிரெண்ட்டா இருந்துட்டு இப்போ டமால்ன்னு ஹரி பக்கம் சாஞ்சுட்ட இல்லை. உன்னையும் கவனிச்சுக்கறேன். ஸ்வேதாவின் வாயிலிருந்து தீபாவும் தப்பவில்லை.
இங்கே ஸ்வேதா ஹரியையும், தீபாவையும் தாளித்துக் கொண்டே காபி போட ஆரம்பிக்க, கனவுலகில் இரண்டு கையிலும் துப்பாக்கியுடன் பறந்து பறந்து எதிரியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த தீபா, சண்டைக்கு நடுவுல இது என்ன வாசனை.... ரத்தக்களரியா இருக்கற எடத்துல காஃபி வாசனையா. ஒரு வேளை சண்ட போட்டுட்டே நாயர் கடை பக்கத்துல வந்துட்டோமோ..... லொகேஷன் சரியில்லையே. இப்போ உடனே நாம ஜம்மு காஷ்மீர் பார்டர்க்கு போயாகணும். என்னதான் அவள் மறுபடியும் கனவுலகில் சஞ்சரிக்க நினைத்தாலும், ஸ்வேதாவின் காஃபி வாசனை அவளை அரை விழிப்பு நிலைக்குத் தள்ளியது. என்னது நம்ம வீட்லையா இந்த வாசன வருது. இருக்காதே...... தூக்கத்துல யாராவது நம்மள கடத்திட்டு வந்து அக்ரஹாரத்துல போட்டுட்டாங்களா, என்று கப்பித்தனமாக நினைத்தாள். நூத்துல ஒரு சதவிகிதம் கூட அதற்கு வாய்ப்பிலையே என்று அவளின் நியாய மூளை எடுத்துக்கூறியது. சில பல சேஷ்டைகள் செய்து முழு விழிப்பு நிலைக்கு வந்த தீபா, ஆஹா இந்த வாசனை நம்ம வீட்டுலதானா என்று ஆச்சர்யத்துடன் படுக்கையை விட்டு எழுந்து ஹாலிற்கு வந்தாள். அங்கு முழு ஃபோர்மல் ட்ரெஸ்ஸில் தயாராகி இருந்த ஸ்வேதா ஹாலில் இருந்த சுவாமி மாடத்தில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள். ஆ..... மணி அதுக்குள்ள எட்டு ஆகிடுச்சா. இத்தனை நேரம் தூங்கிட்டோமே. ஒம்போது மணிக்கு கால் வேற இருக்கே. ச்சே என்றபடியே திரும்பி கடிகாரத்தைப் பார்க்க அது அப்பொழுதான் மணி ஆறரையைக் காட்டியது. கடுப்பான தீபா, ஸ்வேதா சுவாமி ஸ்லோகம் சொல்லி நமஸ்காரம் செய்யும் வரை அமைதியாக இருந்தாள்.
“ஹேய் ஸ்வேதா என்ன இத்தனை சீக்கிரம் கிளம்பற. ஹரி எட்டு மணிக்குத்தான் வருவார். அதுக்குள்ள ஃபுல் ட்ரெஸ்ல இருக்க. மெதுவா கிளம்ப வேண்டியதுதானே”
“எதுக்கு ஹரி வரணும் தீபா. நான் என்ன ஒண்ணாங்கிளாஸ் பொண்ணா. கூடத்தொணைக்கு ஆள் வந்து bye bye சொல்லி விட்டுட்டு வர்றதுக்கு. அதெல்லாம் யாரும் வர வேண்டாம் நானே போய்டுவேன்”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“என்னது நீயே போயிடுவியா...... விளையாடறியா..... மொதல்ல வழித் தெரியுமா உனக்கு. அமெரிக்கால நாலைஞ்சு வருஷம் குப்பைக் கொட்டினவங்களே சமயத்துல வழித் தெரியாம திண்டாடுவாங்க. நீ நேத்திக்கு வந்துட்டு இன்னைக்கு தனியாப் போறேன்னு சொல்ற”
“என்னப் பெரிய வழி, இங்க இருந்து New York-world trade centre ஸ்டேஷன் போய் அங்க ட்ரைன் பிடிச்சா நேரா Newjercy- Exchange Place ஸ்டேஷன்ல எறங்கணும். அங்க நம்ம ஜூலி வர்றேன்னு சொல்லி இருக்கா. அவளோட சேர்ந்து ஆஃபீஸ் போய்டுவேன்”
“ஓ..... பெரிய பிளான்தான். ஆனா இங்க இருந்து world trade centre ஸ்டேஷன் எப்படி போகப்போற. உனக்காக மேல் லோகத்துல இருந்து புஷ்பக விமானம் வருதா”
“அது எதுக்கு..... எனக்கு திவ்யமா ரெண்டு கால் இருக்கு. அதால நடந்து போறேன். உடனே வழித் தெரியுமான்னு திரும்ப ஆரம்பிக்காத. கூகுள் மேப்ல எல்லாம் போட்டு வச்சுட்டேன். கூகுள் ஆண்டவர் கரெக்டா கொண்டு போய் விட்டுடுவார்”
“பிரமாதம்..... இங்க இருந்து நீ உசேன் போல்ட் மாதிரி ஓடினாக்கூட ஸ்டேஷன் போய் சேர அரை மணிநேரம் ஆகும். இதுல பொடி நடையா நடந்தேன்னு வச்சுக்கோ காலைல ஆஃபீஸ்க்கு சாயங்காலமா போய் சேருவ”, என்று கூற தொலைவு தெரியாமல் அவசரப்பட்டு விட்டோமோ என்று யோசித்தாள் ஸ்வேதா. இருந்தாலும் அவள் கெத்தை விடாமல், எல்லாம் என்னால் முடியும் என்ற பார்வை பார்த்தாள்.
“என்ன.... என்ன பார்வை. சரி அதை எல்லாம் விடு. நேத்து ராத்திரி வரைக்கும் ஹரியோட இன்னைக்கு ஆஃபீஸ் போறதாதானே பிளான். திடீர்ன்னு எதுக்கு இப்படி நானே தனியா போறேன்னு ஆரம்பிக்கற”
“நீங்கள்லாம் மாறும்போது நான் மாறக்கூடாதா. நான் கூடத்தான் நீ என்னோட ஃபிரெண்ட் அப்படின்னு நினைச்சுண்டு இருந்தேன். ஆனா நீ ஹரியோட சேர்ந்துண்டு என்னை ஏமாத்தின இல்லை”
“ஹேய் ஸ்வேதா.... அதுக்கா கோச்சுட்டு இப்படி கிளம்பற. உங்கம்மா ரொம்ப சொன்னாங்கடா, அதான். அதுக்கூட ஹரி என்கிட்டே கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சினாங்க அதனாலதான். சரி விடு. இனி நான் ஹரி சைடு இல்லை, உன் சைடுதான்.... ஓகேயா. இப்போ ஹரி வர்றவரை வெயிட் பண்ணு”