“ஹேய் ஜூலிதானே நான் சொல்லிடறேன் ஸ்வேதா...... நீ கவலைப்படாத. அவ இன்னும் கிளம்பி இருக்க மாட்டா”
“செல்லக்குட்டி யார் வந்து காத்துண்டு இருந்தாலும் கவலை இல்லை. நீ இன்னைக்கு என்னோடதான் வர்ற சரியா. அதனால படுத்தாம கிளம்பி ரெடியா இரு. Bye”, என்று இருவருக்கும் பொதுவாக கை அசைத்து விட்டு கவனமாக கதவையும் பூட்டி விட்டு அவன் அறையை நோக்கி சென்றான் ஹரி.
“ஸ்வேதா உன்னோட சூப்பர் காஃபி வாசனைதான் என்னை எழுப்பி விட்டுது. எப்படியும் லேட்டா போறதுன்னு ஆயிடுச்சு. எனக்கு உன் கையால ஒரு சூப்பர் காஃபி போட்டுக் குடேன்”
“நானா.... உனக்கு ஏன் கலக்கணும். ஹரியோட சேர்ந்துண்டு உருண்டு புரண்டு என்னைப் பார்த்து சிரிச்சே இல்லை. நீயே போய்க் கலந்துக்கோ”
“ச்சே என்ன பேபிம்மா இப்படி கோச்சுக்கிட்ட... சரி போ..... நானே போய் கலந்துக்கறேன். அப்படியே கார்த்தால பிரேக்ஃபாஸ்ட்டும் பண்ணிடறேன். நான் போய் fresh ஆகிட்டு வரேன்”, என்று இன்னும் சிரிப்பு மாறாமல் தீபா செல்ல, ஸ்வேதாவின் மூளையில் சிவப்பு விளக்கு, அபாய சத்தத்துடன் எரிய ஆரம்பித்தது. நேத்து ஹரி அவ சமைச்சதை எப்படி ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டார். இன்னைக்கு அதுக்கு விடக்கூடாது. அவளைவிட நல்லா சமைக்கணும்... என்று யோசித்தபடியே தீபா வருவதற்குள் அறைக்குள் சென்று அவசர அவசரமாக உடை மாற்றி சமயலறைக்கு சென்று காலை உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
மாவு எதுவும் இல்லாததால் அவசரத்திற்கு பொங்கலும், தேங்காய் சட்னியும் செய்து, தான் ஹரிக்காக முதன் முதலாக சமைப்பதால் கொஞ்சம் கேசரியும் கிளறி வைத்தாள். அவள் சமைத்து முடித்து எல்லாவற்றையும் டேபிளில் வைக்கும் வரை தீபா ஹாலிற்கு வரவில்லை. என்ன ஆச்சு இவளுக்கு, நேத்து பொய்யா சொன்னது இன்னைக்கு நிஜமாவே வயறு சரியில்லாம போச்சா, என்று கவலையுடன் அவள் அறையை எட்டிப் பார்க்க.... அங்கே மறுபடி விட்ட இடத்திலிருந்து தூங்கிக் கொண்டிருந்தாள் தீபா. ஸ்வேதா அவள் முதுகில் ஒரு அடி கொடுத்து எழுப்ப, அடித்துப் பிடித்து எழுந்து கொண்டாள்.
“ஏண்டி பிசாசு... இப்போ எதுக்கு என்ன அடிச்ச.....”
“இதுதான் நீ டிபன் பண்ற லட்சணமா.... உன்னை நம்பினா நான் பட்டினியா கிடக்க வேன்டியதுதான்”
“ஆ.... ஆ...... இதுதானே வேண்டாங்கறது. இருக்கற லவ் சாங்க்ஸ் எல்லாத்தையும் பாடிட்டு, கூடவே டான்ஸ் வேற ஆடிட்டு நம்ம கிட்சன்ல ஒரு பொண்ணு வேல செஞ்சுட்டு இருந்துதே... அது யாரு ஸ்வேதா”, தீபா கேட்க, ஸ்வேதா சிரித்தபடியே அவள் அறைக்கு சென்று அலுவலகத்திற்கு once more கிளம்ப ஆரம்பித்தாள்.
ஹரி சரியாக எட்டு மணிக்கு நுழைய, தீபா கல்யாண சமையல் சாதம் பாடலைப் பாடியபடியே அவனை வரவேற்றாள்.
“நீ ரங்காராவ் மாதிரி பாத்தி கட்டி அடிப்பேன்னு எனக்குத் தெரியும் தீபா. எதுக்கு அதைப் பாடி வேற confirm பண்ற”
“இங்கப் பார்றா என்னைக் கலாய்ச்சுட்டாராமாம்..... லொள்ளு... உங்காளு உங்களுக்காக செமத்தியா breakfast பண்ணி வச்சிருக்கா. ஒரு கட்டு இல்லை, நாலைஞ்சு கட்டு கட்ட வாங்க”, என்று கூற ஹரி சிரித்தபடியே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தான். ஸ்வேதாவும், தீபாவும் அமர மூவரும் அவரவர்களுக்கு பரிமாறியபடியே சாப்பிட ஆரம்பித்தனர். ஹரி அவளின் சமையலைப் பற்றி ஏதேனும் சொல்வானா என்று அவன் மூஞ்சியையே ஸ்வேதா பார்க்க, அவனோ மிக முக்கியமாக பொங்கலில் இருந்த முந்திரிப் பருப்பை தேடிக்கொண்டிருந்தான்.(ஸ்வேதா நீ பொங்கறதுல தப்பே இல்லை)
முடிந்தவரை அவளை வெறுப்பேற்றி விட்டு தட்டை எடுத்துக் கொண்டு கை அலம்ப எழுந்து சென்றான் ஹரி. ஸ்வேதா ஹரி எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றதால் ‘நேத்து மட்டும் புலாவ் சூப்பர்... சென்னா சூப்பர்.... பனீர் அதைவிட சூப்பர்ன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிண்டு சாப்பிட்டதென்ன, இன்னைக்கு நன்னா இருக்குன்னு ஒரு வார்த்தைக் கூட சொல்ல முடியலை’, அவனைத் திட்டியபடியே அவளும் எழுந்து கொண்டாள். கை அலம்பி வந்த ஹரி நேராக ஸ்வேதாவின் அருகில் சென்று லேசாக அவளை அணைத்து விடுவித்தான். “சூப்பரா சமைச்சிருந்தேடி செல்லக்குட்டி. செம்மையா இருந்தது. Thanks so much”, என்று கூற அவனின் செய்கையைப் பார்த்து தீபாவும், ஸ்வேதாவும் வாயைப் பிளந்து நின்றார்கள்.
“Both of you, door close…. சீக்கிரம் கிளம்பு பேபிம்மா. டைம் ஆறது”,என்று சிரித்தபடியே ஹரிக் கூற வெட்கப்படலாமா, வேண்டாமா என்று யோசித்த ஸ்வேதா கடிகாரத்தைப் பார்த்து வெட்கத்தை டீலில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தாள்.
லிப்ட் வந்து நின்று அதில் ஏற...... இவர்களுக்கு முன்னரே ஒரு ஜோடி அங்கே நின்றிருந்தது. கதவு மூடுவதற்கென்றே காத்திருந்ததைப் போல அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவி முத்தமிட ஆரம்பித்தனர். ஸ்வேதாவின் நிலை படு பயங்கரமாக மாறியது. அவளால் ஹரி பக்கத்தில் நிற்க முடியவில்லை. அந்த லிப்ட்டின் நாலாப்புறமும் கண்ணாடிகள் வேறு. அதனால் எந்தப் புறமும் திரும்ப முடியாமல் கதவை மட்டுமே பார்த்தபடி கண்ணை மூடிக் கொண்டு நின்றாள். ஹரிக்கு அவள் நிலையைப் பார்த்து சிரிப்பு வந்தது. பேசாம படி இறங்கியே போய் இருக்கலாம். நேரமாச்சேன்னு லிப்ட்ல வந்தது தப்பாப் போச்சு. இப்படி ஃப்ரீ ஷோ பார்க்கும்படி ஆன தன் நிலையை நொந்தபடியே நின்றிருந்தாள் ஸ்வேதா.