28. காதல் பின்னது உலகு - மனோஹரி
நிலவினி அருகில் அத்தனை துள்ளலாய் நின்றிருந்த பவிஷ்யா மயங்கி சரிகையில் அங்குதானே இருந்தாள் அனு, அந்த நிகழ்வில் அவள் அரண்டுதான் போனாள். அந்த மிரட்சியும் அயர்சியும் பவியின் மயக்கத்தைக் கண்டு இல்லை…. அது அப்பொழுதே தெளிந்துவிடும் என அவளுக்குத் தெரியும்…. அவளது பயம் வேறு….
அவளுக்கு அபயனுக்கும் பவிக்கும் இடையில் செல்லும் காதல் உறவெல்லாம் அன்றுவரை தெரியாது எனினும்…..இன்று நாள் தொடங்கி இத்தனை நேரம் வரை மூன்று ஜோடிகளும் மொத்தமாக குழுவாக சுற்றிக் கொண்டிருப்பதில் இன்று இவளுக்கு இது தெரிந்த விஷயம்….. அதுவும் இன்றுதான் தெரிந்த விஷயம்……
இதில் நேற்று வரை எந்த தடையுமின்றி திருமணத்தைப் பார்த்து நகர்ந்த ஒரு உறவு….இன்று ஒரு டாக்டரான பவிஷ்யா மயங்கி விழும் அளவிற்கு…..அதாவது நிச்சயமாய் நின்று போய்விடும் எனும் அளவுக்கு திரும்புகிறது என்றால்….?
அனுவுக்கு முன்பு கனி ஆன்டியின் திருமணத்தை ஊர் ஏற்காமல் போனதால் தான் அவர்கள் நாடு தாண்டும் நிலை ஏற்பட்டது என தெரியும்…. அடுத்து இப்போது சற்று சமூக கட்டுபாடுகள் தளர்ந்து இருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறாள்…..
ஆனால் பவி விழுந்த விதத்தில்….. அந்த சூழலில் அபை வாய் மூடி நின்ற கோலத்தில்….அவனை கை நீட்டி பிடித்து தடுத்த அதியின் செயலில்….. இன்றும் கூட பெற்றோர் தான் பிள்ளைகள் திருமணத்தை முடிவு செய்ய முடியும் அதை மீறவோ மாற்றவோ சாத்தியமில்லை போலும் என அழுந்த புரிகிறது இவளுக்கு…..
கூடவே அபை பவியின் இந்த துன்பத்திற்கு தான் தான் காரணம் என ஒரு சிலீர் சுருள் வாள் சொருகல் பாவை நெஞ்சத்தில்…..பயம்….தண்டுவடம் தனை தாங்காமல் மெழுகாய் ஒரு உருகல் போல் உள்ளே ஒரு மறுகல்….
இவளுக்கு அவர்கள் காதல் தெரிந்தவுடன்…. அவர்கள் திருமண பேச்சை சற்றாய் தொடங்க அதி குடும்பம் காத்திருந்த நேரத்தில்…அந்த இடத்தில் இவள் இருந்ததால் தான் இப்படியாய் போய்விட்டதோ நிலமை….. வெந்து போனாள் உள்ளத்துள்….
அதன் பின் அவளால் அங்கு நிற்கவே முடியவில்லை….. ஒருவாறு சமாளித்து வீடைவிட்டு வெளியே வந்துவிட்டாள்….
அதிக்கு அனுவின் மனம் நன்றாகவே தெரியும்….. இந்த சூழலில் அவள் இப்படித்தான் யோசிப்பாள் என அவனும் உணர்ந்துதான் இருந்தான்….ஆனாலும் அவள் மீது தன் கவனத்தை வைக்க முடிந்த அவனுக்கு, அவளிடம் சென்று எதையும் பேசி சரி செய்யவோ வழி இல்லை…..
ஆக அவள் வீட்டைவிட்டு வெளியேறுவதை ஒருவித அழுத்த சலனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை அவனுக்கு……
எல்லோரும் வரவேற்பறையில் நின்று நிலமையை கையாண்டு கொண்டிருக்க….. அதை தாண்டிய வெராந்தாவை கடந்து அனு வீட்டின் படிகளில் இறங்கும் போது, இவன் வெராந்தா வாசலுக்கு வந்தவன் அவளைப் பார்த்த வண்ணம் நின்றாக வேண்டி இருந்தது…… அதைத் தாண்டி அவள் பின் இறங்கினால் அடுத்தவர் கவனம் தேவையின்றி இவர்கள் மீது திரும்பக் கூடும்…..
வெளியே வந்துவிட்ட அனுவுக்கோ அந்த நொடி வரை இருந்தது பயமும் பரிதவிப்பும் தான்….. ‘ஐயோ நான் ஏன் இப்டி பிறந்தேன்….எல்லாம் என்னாலதான்….கடவுளே தயவு செய்து இந்த கல்யாணத்தை நடத்தி வச்சுடுங்க…. என்னால அழிஞ்சதுல இவங்க வாழ்க்கையும் சேர வேண்டாம்..’ இதுதான் அப்போதைய அவளது அடி மன ஓலம்….
ஆனால் வெளியே வரவும் என்னவென்று புரியாத ஏதோ ஒரு வகை இழப்பு உணர்வும் கூடவே வந்து குடியேறுகிறது…..
காலையிலிருந்து அதி, வினி, யவி, அபை, பவி என வயதொத்தவர்களோடு கல கல வென கழிந்திருந்ததே நாள் முழுவதும்…. இப்பொழு பல நாளாய் பாலைவனத்தில் பயணம் போன்றிருந்த வாழ்க்கைக்கு அது பருவ காற்றோடு படர்ந்து வரும் சாரல் கால சிலு சிலுப்பை சேர்த்திருந்து……..
அதோடு அதியோடு முகமுகமாய் பேசுவதாகட்டும் அவனோடு வெளியில் செல்ல நேரிடும் பயணங்களாகட்டும்……அது அவளுக்குள் இயல் நிலை மீட்சி செய்யும்…..தொலைந்து விட்ட அவளை மீண்டுமாய் தேடி கொண்டு வந்து சிறிதாவது திருப்பிக் கொடுக்கும்……. கனிமொழிக்கு மகளாய் மாத்திரம் தன்னை நிறுத்தி மற்ற அத்தனைக்கும் அவளை கொன்று கொண்ட அவள் மனதிற்குள் மறுபடியும் அனுவை அணுவளவாவது உற்பத்திவிக்கும்….
அதில் இன்றுதான் முதன் முறை முழு நாளும் அவனோடு கழிந்திருக்க…. ஊற்றாய் ஊறி….. உயிர் கொண்டிருந்த அவள் நிலையில்…. இவை அனைத்தும் வேண்டாம் என விட்டு… இனி எல்லோரையும் விலகி இருக்க வேண்டும் என நினைத்து இப்படி கிளம்புவது ஒரு இழப்பு உணர்வை அதாக கொண்டு வந்து நிறுத்துகிறது……
வீட்டைவிட்டு வெளியே வந்தவள்… சில எட்டுகள் நடந்திருக்க….இப்போது மீண்டுமாய் ஒருவித வேதனை உந்தலில் திரும்பிப் பார்த்தாள்….. உள் வாசலில் நின்ற அதி அவளை நேருக்கு நேராய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்….