04. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா
அன்று ஆற்றங்கரையில்...
எப்போதும் அதிகாலையில் ஆற்றங்கரைக்கு வருபவள் அன்று மாலை வந்திருந்தாள். தோள் தொட தத்தி தாவி ஆடிய முடி கற்றைகளை ஒதுக்கி விட்டபடி அவன் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.
சிறு வயதில் இருந்தே இந்த ஆற்றங்கரை, மலை முகடுகள், மழை மேகங்கள் இதில் தனி பிரியம் அதற்காக மென்மையானவளும் அல்ல..!! மேன்மைக்கு நேரெதிரும் அல்ல!! எப்போதாவது தோன்றும் பெண்மை அதில் பிறக்கும் ரசனை அது அலாதி தான் அவளுக்கு..
காலையில் இருந்து தாத்தா வீட்டில் அடைந்தே கிடந்து போர் அடிக்க, கார் கூட வேண்டாம் என்று விட்டு இரண்டு கிலோமீட்டர் நடந்தே வந்திருந்தாள்!! நடப்பது அவளுக்கு புதிது அல்லவே..
ஆற்றின் சலசலப்பு ஏதோ கூறுவதை போல தோன்ற, அதனுடன் பேசியபடி இருந்தவள் கவனத்தை கலைத்தது அங்கு கேட்ட காலடி தடம் ஒன்று.. நிமிர்ந்து பார்த்தாள்.. முதன் முறை அவனை பார்க்கிறாள் அப்போது தான்..
கம்பீரமும் மென்மையும் சம அளவில் கலந்து செய்த ஒரு முகம்.. பார்த்த உடன் நெஞ்சில் பதியவில்லை தான்..!! அவளுக்குள் எதுவும் ஏற்படவில்லை தான்.. ஆனால் பார்க்காமலும் இருக்கும் அளவு இல்லை..
கையில் டிஜிட்டல் கேமரா, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். ஆற்றங்கரையில் இருந்த மரத்தை, செந்நிற வானத்தை, கூடு திரும்பும் பறவையை அவன் படம் பிடித்து கொண்டிருக்க, இவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆசை ஆர்வம் எதுவும் இல்லை இவளிடம்..
அவன் புகைப்பட ஆர்வம் பார்க்க வைத்தது அவ்வளவே..!!
புகைப்படங்கள் எடுத்த பின்பு அவன் இவள் புறம் பார்க்க அவன் விழிகளில் ஏதோ ஒன்று தோன்றி மறைவதை இவள் கவனிக்காமல் இல்லை.. அவன் தன்னையே பார்க்கவும் சட்டென்று வேறு புறம் திரும்பிக் கொண்டாள். அவள் பக்கவாட்டு தோற்றத்தையும் அவள் அறியாமல் புகைப்படம் எடுத்தவன் அவளிடம் பேச்சுக்கு கொடுக்க வந்தான்..
"ஹலோ" குறும்பும் ஆர்வமும் அவன் குரலில்.
"........"
"என்னங்க ஹலோ சொன்ன திரும்ப சொல்ல மாட்டிங்களா?"
"........." சொல்லத்தான் நினைக்கிறாள் ஆனால் எதுவோ ஒன்று.. நாணமா அவளுக்கு??!!
"சரி இங்கிலீஷ் ஹலோ பிடிக்கலையா அப்போ வணக்கம்"
அவன் இரு கைகள் கூப்பி நிற்க, அவசரமாய் மேல் எரிய கைகள் வணக்கம் வைத்தது. தாத்தா கற்று கொடுத்த தமிழர் பண்பாடு சிரித்துக் கொண்டாள்.
"வணக்கம்"
"அப்பாடா அப்போ தமிழ்ல பேசுனா மட்டும் தான் பேசுவீங்க போல? கிராமத்து கிளி போல"
"அப்படின்னு யாரு சொன்ன?"
"நீங்க தான் சொல்லணும் ஆனா சொல்ல மாட்டேங்கறீங்க? அப்போ நானே சொல்லிக்க வேண்டியது தான்"
"சொல்லிக்கோங்க" வெடுக்கென சொல்லிவிட்டு அவள் திரும்பி செல்ல, முணுக்கென்று கோபம் வந்தது அவனுக்கு.
இயல்பிலேயே கொஞ்சம் முன் கோபி தான். ஆனால் என்னவோ இன்று நல்ல மனநிலையில் இருந்தான்.முகம் கடினமுற்றது.
"உங்க பேரு?"
"....." அமைதியாக திரும்ப பார்த்து விட்டு அவள் மேலும் செல்ல,
"ஹலோ உங்களை தான்" சற்றே எரிச்சல் அவனிடம், அவளை பின் தொடர்ந்தான்.
அதே எரிச்சலுடன் அவளும் பார்த்து விட்டு, விறுவிறுவென நடக்க, சட்டென நின்றவன் தன் 'விசிடிங் கார்டை' எடுத்து அவள் கைகளில் திணித்து விட்டு எதிர்புறம் சென்று விட்டான்..!!
அதை கையில் வைத்து யோசித்துக் கொண்டே வீடு வந்தவள்.. அவர்களின் முதல் சந்திப்பை நினைத்து வியந்து கொண்டிருந்தாள்.
உயிர் தேடல் தொடரும்…
{kunena_discuss:1037}