08. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி
“மல்லிம்மா”தயங்கியவாறு அழைத்த அண்ணனின் குரலிலையே,எதுவோ சரியில்லை என்று மல்லிகாவிற்கு புரிந்துவிட்டது.
‘என்ன’என்று ஏறிட்டுப் பார்த்த தங்கையை எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என்று அவரது மனம் பரபரத்தது.
“இன்னைக்கு நம்ம பாப்பாவை பொண்ணுக் கேட்டு வந்திருந்தாங்க! நல்ல குடும்பம் தான்.எங்க எல்லாரையும் விட,பாப்பாக்கு கொஞ்சம் அதிகமாவே பிடிச்சிருக்கு போல.அதனால சும்மா இந்த பத்திரிக்கை”என்று முழுதாக முடிக்கக் கூட இல்லை.
மல்லிகாவின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
“ஏதாவது பணக்கார சம்பந்தமாண்ணா..அதான் என் பையனை வேண்டாம்னு சொல்லிட்டியா”
“எவ்வளவு பெரிய பணக்காரவங்களா இருந்தாலும்,என் தங்கை மகனுக்கு பிடிச்சிருந்தா,என் பொண்ணை கட்டாயப்படுத்திக் கூட கல்யாணம் செய்ய நானும் துணை இருந்திருப்பேன்”என்ற அப்பாவை கலங்கிப் போய் பார்த்தாள் அவந்திகா.
“அதான் என் மகனுக்கு பிடிச்சிருக்கே”அழுகையின் ஊடே கேட்கவும்,
“அவனுக்கு நம்ம செவ்வந்தியை ஒரு தோழியா தான் பிடிச்சிருக்கு.அவன் மட்டும் தன்னோட சின்ன வயசுக் காதல்ல உறுதியா இருந்திருந்தா,நான் மறுத்திருக்க மாட்டேன் மல்லிம்மா.அவனுக்கும் வேற ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு.நமக்கு பிறகு அவங்க தான் வாழப் போறவங்க இல்லையா! யாராவது ஒருத்தருக்கு காதல் இருந்தாலும்,இன்னொருத்தரை அவங்கனால மாத்த முடியும்.இங்க அப்படி இல்லையே மல்லிம்மா.நாம நம்ம பிள்ளைங்க விருப்பப்படியே நடப்போம்”என்ற அண்ணனின் பேச்சிற்கு எதிர்ப்பேச்சு பேச மல்லியால் முடியவில்லை.
அவந்தியும் அத்தையின் காலடியில் அமர்ந்து,அவரது கால் விரல்களை நீவிவிட்டவாறே,”சரண் எனக்கு இன்னொரு அம்மா போல அத்தை.அம்மாகிட்ட என்ன எல்லாம் சொல்ல நினைப்பேனோ,அதையெல்லாம் நான் அவன்கிட்ட சொல்லிடுவேன்.அதுக்கு மேல ஒரு உறவை என்னால யோசிக்கக் கூட முடியலை மல்லிம்மா”என்று அவளும்,உணர்ச்சிவசத்தால் அம்மா என்று அழைக்கவும்,மல்லிக்கு மனம் இறங்கிவிட்டது.
சரனுக்கோ அவந்திகா தன் மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்து பூரித்துப் போனாலும்,’பத்து நிமிஷமா என்னை ஏமாத்தியிருக்கா கழுதை’என்று மனதில் ஏக வசனத்திலையே திட்டி அவளை முறைக்க,அதைப் பார்த்துவிட்ட மல்லிகா..
“என் மருமகளை ஏண்டா முறைக்கிற.உன்னால தான் என் மருமகளை,இப்போ நான் வேற வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை.உருப்படியா ஒரு பொண்ணை மட்டும் மனசில வைச்சுக்க தெரியாதா உனக்கு.கழுதை மாதிரி புத்தியை புல் மேய விட்டிருக்க”என்று திட்ட ஆரம்பிக்க,தலையை தொங்க போட்டவாறு நின்றவன் தான்..நிமிரவில்லை!
“நீ பயந்துட்டேன்னு அத்தை நம்பிட்டாங்க சரண்”என்று அவந்திகா மேலும் போட்டுக்கொடுக்க,வேகமாக வந்தவன் அவளது தலையில் நறுக்கென்று கொட்டு வைத்தான்.
பதிலுக்கு மல்லிகா மகனை கொட்ட,தலையை நீவிக்கொண்டே அவனும் அம்மாவின் பாதத்தை சரணடைந்துவிட்டான்.
“எனக்கு இன்னும் சமாதானம் ஆகல புள்ளைங்களா.பல வருஷக் கனவு.உன்ன வீட்டு விட்டு அனுப்பனும்னு நினைச்சாலே,மனசு கிடந்து தவிக்குது..வேணும்னா,அந்தப் புள்ளையாண்டான நம்ம வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிக்குவோமா.எனக்கு இன்னொரு மகனாட்டம் இங்கயே இருந்துட்டுப் போகட்டும்”என்றவரின் மனதில் உள்ள ஏக்கத்தை அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது தான்.
சரண் வாயை வைத்து அமைதியாக இருக்காமல்,”மாப்பிள்ளை நம்மள விட வசதியானவங்கம்மா.அப்படியெல்லாம் ஒத்துக்கிடமாட்டாங்க”என்று சொல்லவும்,
“நீயும் பிசினெஸ் பிசினெஸ்னு அலையற..கொஞ்சமாவது பணத்தை சேர்த்து வைச்சிருந்தா,நாமளும் பணக்கார இடமா தெரிஞ்சிருப்போம்”என்றதும் சாரதி அதட்டினார்.
“எப்போ இருந்து இப்படி பிரிச்சு பேச ஆரம்பிச்ச.நாம எல்லாம் எப்பவும் ஒண்ணா தானே இருக்கோம்..செவ்வந்தி நமக்கு மருமகளா ஆகலைன்னா,மகளா இருந்துட்டுப் போகட்டும்.நாம பிறந்த வீடா இருப்போம்..இதுக்காக எல்லாம் வசதி வாய்ப்புன்னு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதே”என்று அதட்டவும் அமைதியாகிவிட்டார்.
தங்கையின் தலையில் ஆதூரமாக தனது கையை வைத்து தடவிய பாண்டியன்,”நம்ம மொபைல் ஷோரூம் எனக்குப் பின்னாடி,சரணுக்கு தான் மல்லி.நம்ம எல்லாருக்குமே ஒரு விஷயம் நல்லா தெரியும்.செவ்வந்திக்கு இந்த மாதிரி தொழில்ல ஆர்வம் இல்லைன்னு!”,