“அப்புறமும் நான் ஏன் நடத்திட்டு இருக்கேன்..எல்லாம் சரனுக்காக தான்.அவன் தான் அந்த கடைக்கு முதலாளி.ரொம்ப பெருசா இல்லைன்னாலும்,டிவில விளம்பரம் கொடுக்கற அளவுக்கு பெரிய கடை தான் நம்மளுது.அப்படி இருக்கும் போது,சரணை குறை சொல்லாத! அவனோட உழைப்பு தான் இதில நிறைய இருக்கு.இவ்வளவுக்கும் ஒரு தடவை கூட,நான் இந்தக் கடை அவனுக்குன்னு சொன்னதில்ல..நம்ம பிள்ளைங்களே எதையும் பிரிச்சுப் பார்க்காத போது,நாம ஏன் பிரிச்சுப் பார்க்கணும்”என்று அன்பாக,ஆதரவாக பேசவும் ஓரளவு சமாதானமாகிவிட்டார் மல்லி.
பிரச்சனை ஓரளவுக்கு சுமூகமாகிவிட,கோவிலுக்கு கொடுக்க வேண்டிய பூவை கட்ட வேண்டியிருந்ததால்,சரணையும் இழுத்துக்கொண்டு போய் ஊஞ்சலில் அமர வைத்து,அவனையும் கட்ட வைத்தாள் அவந்திகா.
அப்போது பார்த்து யஸ்வந்த் போன் செய்யவும்,”டேய் மாமா..அவங்க போன் பண்றாங்க”எனவும்,
“அது என்ன அவன மட்டும் மரியாதையா ‘அவங்க’ன்னு சொல்ற..அப்போ நான் மட்டும் உனக்கு டேய் மாமாவா! மரியாதை கொடுத்தா ரெண்டு பேருக்கும் கொடுக்கணும்..இல்லைன்னா அவனையும் என்னை மாதிரியே டேமேஜ் பண்ணு”என்று அவன் கடுப்புடன் சொல்ல..
“உனக்கேண்டா மாமா இத்தனை கொலைவெறி! நீயும் நானும் ஒரே இரத்தம்.நான் உன்னை கல்லால அடிச்சு கதறடிச்சாலும்,எனக்கு ஒண்ணுன்னா நீ வருவ..அதனால உன்னை டேமேஜ் பண்றேன்! ஆனா அவங்க அப்படியா! ஆயிரந்தான் இருந்தாலும்,இன்னொரு வீட்டுப் பையன்.அதிகமா வாய் பேசறேன்னு என்னை கழட்டி விட்டுட்டுப் போயிட்டா நான் என்னடா மாமா பண்ண முடியும்.அதான் ஒரு முன்னெச்சரிக்கையா”என்றதும் சிரித்த சரண்,
“அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் அவனை கொடுமை பண்ணப் போறேன்னு சொல்லு”என்றவன் காற்றிலையே நண்பனை கட்டிப்பிடித்து..
“நண்பேண்டா”என்று அவன் படப்போகும் கஷ்டத்தை நினைத்து,இவன் அனுபவித்து சிரிக்க..அதற்குள் மீண்டும் போன் வந்து ரிங் ஆகி கட்டானது.
அவளது போனை எடுத்த சரண்,”சொல்லுங்க மாப்பிள்ளை சார்”என்று எடுத்த எடுப்பிலையே,யஸ்வந்த்திற்கு தேவையானதை உலறிவிட்டதால்,யஷ்வந்த் கல்யாணப் பத்திரிக்கையைப் பற்றி கேட்கவே இல்லை.
அப்படி கேட்டிருந்தால்,யஷ்வந்தின் திட்டத்தை அறிந்து,சரண் கொஞ்சம் சுதாரிப்பாய் இருந்திருப்பான்.அவனுக்கும் யஸ்வந்த் எப்படியெல்லாம் காரியத்தை சாதிப்பான் என்று ஓரளவுக்கு தெரியும்.
இப்போது விஷயம் தெளிவாகிவிட்டதால்,கொஞ்சம் ஜாலியான மூடிலையே,”அவந்தியை நான் பார்க்கணும்.அனுப்பி வை”என்று கட்டளையிட,
“அப்படியெல்லாம் அனுப்ப முடியாது.எப்பவும் போல காலேஜ் வரும் போது பார்த்துக்க!”ஸ்ட்ரிக்ட் ஆபிசராக சரண் சொல்ல,பல்லைக் கடித்த யஸ்வந்த்,
“கடைசி செமஸ்டர்னு சொல்லி,அவ காலேஜே ரெண்டு நாள் தான் வர்றா..அதுலயும் ப்ராஜெக்ட் வொர்க்னு லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு,வீட்டுல உன் கூட உட்கார்ந்து வெட்டியா கதை அடிச்சிட்டு இருக்கதா கேள்விப்பட்டேன்”என்று சொல்ல,
“நீ என்ன சொன்னாலும் என்னால அனுப்ப முடியாது.பொண்ணு வீட்டுக்காரவங்க கொஞ்சம் ஸ்டிரிக்ட்டா தான் இருப்போம்.கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சுட்டதினால,இனி நேரடியா தாலி கட்டற வரைக்கும்,நோ மீட்டிங்.வேணும்னா போன்ல கடலை போட்டுக்கலாம்”எனவும்,கடுப்பாகிப் போனவன்,
“அவளோட ரிங் என்கிட்ட இருக்கு.திருப்பிக் கொடுக்கணும்.நீ அவளை வர சொல்லலை,நான் வீட்டுக்கே வந்துடுவேன்.அப்படியே உன்னோட சாராயக் கடைக்காரர் மாமாவையும்..”என்று அவன் இழுக்க,
“நான் அனுப்பி வைக்கிறேண்டா நல்லவனே.எனக்கு இருக்கது ஒரே ஒரு மாமனார்.அவர் என் கல்யாண வரைக்குமாவது வேணும்.எதுவும் பண்ணிடாத”என்று அலறவும்,
“அந்த பயம் இருக்கணும்”என்று கெத்தாக சொல்லிவிட்டு போனை அணைத்தான் யஸ்வந்த்.
“எதுக்குடா மாமா,இவங்க ஹாசினி அப்பாவைப் பத்தி பேசறாங்க”புரியாமல் கேட்டவளிடம்,
“அதுவா..அவனுக்கு அவர் ரொம்ப நெருங்கின சொந்தம்.பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்னு,இவங்க வீட்டில சொல்லியிருப்பார் போல.அதான் நல்ல சம்பந்தமா பார்த்து,முடிச்சுக் கொடுத்துடுவேன்னு மிரட்டறான்”என்று உண்மையும்,பொய்யுமாக சமாதானம் செய்ய,எப்போதும் சரணின் பேச்சை தீவிரமாக அவள் ஆராயமாட்டாள் என்பதால் அப்படியேவிட்டுவிட்டாள்.
“உன்னோட ரிங் கொடுக்கணுமாம்.வர சொன்னான்”
“அப்போ வீட்டுப்பொருள் கண்காட்சி போட்ருக்காங்க இல்ல.அங்க வர சொல்லிடு.எனக்கும் ஷாப்பிங் செய்த மாதிரி இருக்கும்”என்றவளை ஒரு மாதிரியாக பார்த்தான்.