10. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
அனிக்காவைப் பொறுத்தவரை அன்றைய நாள் ஒரு மறக்க முடியாத நாளாக மாறிவிடும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. எத்தனை எத்தனை திருப்பங்கள் கொண்டதாக இன்றைய நாள் அமைந்து விட்டது. ஒவ்வொரு மணித்துளிகளையும் கழிப்பது மிகவும் சிரமமாகி விட்டதே.
மாலை நேர தீபன் திருமண விழா நிகழ்வுகளில் பெயரளவிற்கு பங்கேற்று விட்டு அவள் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். மகளுக்கு தலைவலி என்றதும் மனைவியை திருமண வீட்டில் இருந்து எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்று வரச் சொல்லி விட்டு அவளை கையோடு அழைத்து வந்து விட்டார் தாமஸ். அவருக்கு அவள் எப்போதும் எல்லோரையும் விட முக்கியமானவள், எப்படித்தான் பெண்குழந்தைகள் தந்தையர் மனதில் விசேஷமான இடத்தைப் பெற்று விடுகிறார்களோ என்று எவருக்கும் தெரியாத அந்த ரகசியம் அந்த வீட்டிலும் கோலோச்சிக் கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல.
பெண் குழந்தைகள் வாழும் வீடு இயல்பாகவே கலகலப்பும், மலர்ச்சியும் , மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைந்து விடுகின்றது. அதற்கு அந்த இல்லமும் விதிவிலக்கு அல்லவே .என்றாவது ஒரே ஒரு நாள் கூட மகள் அமைதியாக இருந்தாலே அவர்கள் இல்லம் வெறிச்சோடி போகும். அதன் காரணமாகவே அவளது குறும்புகளை யாரும் கண்டிப்பது கிடையாது.
"என்னம்மா செய்யுது?"
" டாக்டர் கிட்ட போகலாமா?"
" ஏதாவது மாத்திரை வேணுமா?"
என பல்வேறு கேள்வி கேட்டு மகளை துளைத்தெடுத்தவர், அவள் நெற்றியை, தலையை வெகு நேரம் வருடி விட்டு அவள் தூங்கி விடுவாள் என்று எண்ணிய பின்னரே அவ்விடம் விட்டு அகன்றார்.
தூக்கம் என்னவோ அவளுக்கு அன்றைக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. ஷைனி சொன்ன விஷயங்கள் எல்லாம் எப்போதோ மனதை விட்டு அகன்று விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது எதனால் என்று யோசித்துப் பார்த்தாள்.
ஒட்டுக் கெட்கிற பழக்கம் ரொம்ப தப்பு தெரியுமா? இது எப்போதோ ஏதோ ஒருவர் பற்றி பேசும் போது அவள் அம்மா அவளிடம் சொன்னது. சாராவின் அணுகுமுறை பொதுவாக அப்படியாகத்தான் இருக்கும். கசப்பு மருந்தை தேனில் கலப்பது போல பேச்சு பேச்சாக , கதைச் சொல்லுகிற பாவனையில் பிள்ளைகளுக்கு ஒரு சில கருத்துக்களையும் ஊட்டி விடுவார்.
ஆனால், அவள் இன்று கேட்க நேர்ந்த 2 உரையாடல்களுமே அவள் திட்டமிடாமலேயே அறிய நேர்ந்த ஒன்றல்லவா? அந்த உரையாடல்களின் போது அவள் அங்கிருக்க வேண்டிய சூழல் அமைந்து விட்டதே.
ஷைனி சொன்னவை அனைத்தும் அவளுக்கும் ஜீவனுக்கும் இடையேயான நட்பை களங்கப் படுத்தி இருந்தது. ஆனால், அதன் பின் அவள் கேட்டதும் , கண்டதும் என்ன?
பொதுவாக யாராவது இருவர் பேசிக் கொண்டிருப்பது அறிந்தால் அவர்களுக்கிடையே நுழைந்து, ஒரு அவசர மன்னிப்பைக் கேட்டு தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு பட படவென நகர்ந்து விடுவது அவள் வழக்கம். அன்றும் அவள் அப்படித்தான் ரூபனின் அறைப் பக்கம் சென்றது. ஆனால், எப்போதும் போல அவர்கள் பேச்சில் இடையே நுழைய விடாதபடிக்கு அவளைச் சோர்வு ஆட்கொண்டிருந்தது.
ஏற்கெனவே ஷைனியின் பேச்சால் மனம் உணர்ந்துக் கொண்டிருந்த சோர்வோடு கூட, முதன் முறை அணிந்த சேலை, அணிமணிகள், பொன்னகைகள் எல்லாமும் கூட அவற்றைக் களைந்து வழக்கமான உடையில் மாறிய பின்னும் என்னவோ மலையை தூக்கி சுமந்த மாதிரியான ஒரு வகைச் சோர்வு. இதை முதன் முறை சேலை அணியும் போது பெண்கள் அனைவருமே உனர்ந்திருப்பார்கள். அதனால் தான் அவள் அங்கு சென்ற பின்னர் அமைதியாக நின்றதன் காரணம்.
கூடவே அண்ணன் தம்பி உரையாடலில் முதலில் அவள் கவனம் ஈர்த்தது ஜீவனின் பேச்சுத் தொனி தான். அந்த அறையில் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் அவளால் வெளியில் இருந்தே அவனின் முகபாவம் முதலாக எல்லாவற்றையும் பார்க்க முடிந்திருந்ததே.
ஜீவனாவது அவன் அண்ணனிடம் கடுமையாக பேசுவதாவது ? என்ற வியப்பில் தான் முதலில் அவள் தாமதித்தது. அதன் பின் தெரிய வந்த விஷயங்கள். ஜீவன் தனக்காக பேசிய அனைத்தையும் அவள் கேட்டுக் கொண்டு தானே இருந்தாள்.அவன் தன்னுடைய அப்பாவைப் பற்றி பேசியதைத் தவிர அவளுக்கு எல்லாமே மிகவும் வியப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்திருந்தது. அவன் எப்படி என் அப்பாவைப் பற்றி அப்படிச் சொன்னான். என் அப்பா பணத்தை பெரிசுப் படுத்துபவரா இல்லவே இல்லை என்று மகளாக முகம் சுணங்கினாள்.
ஆனாலும் கூட பரவாயில்லை சொன்னால் சொல்லி விட்டு போகட்டும். என் அப்பா தான் அப்படி கிடையாதே. இருந்தாலும் தன் அண்ணனுக்கு எதிராக எனக்காக பேச வேண்டுமானால் இப்படி ஒரு நண்பன் கிடைக்க தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என ஒரு புறம் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக அன்றைய தினத்தில் அவள் அறிந்துக் கொண்ட செய்தியான,