15. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி
காலம் கடந்து போகும் உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும் சிறு காற்றில் பறக்க கூடும்
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காணவேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
தாங்கிக்கொள்ள என் கண்மணி சாய்ந்துகொள் என் தோளில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்
மருத்துவமனையில் இருந்து மங்களம் இன்று தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மது இந்த நான்கு நாட்களாக மருத்துவமனையிலேயே இருந்தாள். இந்த நாட்களில் மதி பெரும்பாலான நேரத்தை மருத்துவமனையிலேயே கழித்தான். என்னதான் மது இனி மதியின் முகத்தை பார்க்க கூடாது என்று எண்ணியிருந்தாலும் விதி சதி செய்து அவர்களை தினமும் சந்திக்க வைத்தது. மது இருந்த மனநிலையில் அவள் அருகில் மதி இருந்தது அவளுக்கு மிகப்பெரும் மனோபலத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். மதுவும் அவள் தந்தையும் மருத்துவரை கண்டு இனி வரும் நாட்களில் மங்கலத்திற்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை பற்றியும் அவரை எப்படி பராமரிப்பது என்பது பற்றியும் விசாரித்து விட்டு வெளியே வர அதற்குள் மதி மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விட்டு வந்திருந்தான்.
"ஏம்ப்பா நான் வந்து கட்டியிருப்பனே" - சிவசண்முகம்
"அவங்க எனக்கும் அம்மா மாதிரிதானே. நான் கட்டுனதுல என்ன இருக்கு. வாங்க அவங்க ரூம்ல தனியா இருப்பாங்க. உள்ளெ போலாம்." - என்று மதி கூற கவரில் இருந்த மருந்து மாத்திரைகளை சரி பார்த்து கொண்டிருந்த மது சட்டென்று தலையை உயர்த்தி மதியை பார்த்தாள் அவன் பதிலை கேட்டு.
மதியின் பதிலில் அவன் மேல் ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசிய மதுவின் தந்தை வேறெதுவும் கூறாமல் அவர்களை அழைத்து கொண்டு அந்த வார்டுக்குள் நுழைந்தார்.
சோர்வுடன் கண்களை மூடி படுத்திருந்த மங்களத்தின் அருகே சென்றவர் "மங்களம் " என்று மெதுவாக அழைக்க, கண்களை திறந்தவரிடம் "டாக்டர்கிட்ட பேசியாச்சு. எல்லாம் செட்டில் பண்ணியாச்சும்மா. கெளம்பலாமா ?" என்று கேட்க " ஹ்ம்ம் சரிங்க. வாங்க தம்பி ,உங்களையும் சேர்த்து சிரம படுத்திட்டேன் இல்லையா..." என்று கேட்க, அவர் அருகில் சென்று வர கைய பிடித்தவன் "என்னம்மா சரணும் ரகுவும் இல்லாதப்போ நான் செய்ய வேண்டியது என் கடமைம்மா. நீங்க தேவை இல்லாம அது இதுனு யோசிச்சு ஸ்ட்ரைன் பண்ணிக்காதிங்க. நீங்க நல்ல இருக்கனும்மா. எங்களுக்கு அதை விட வேற என்ன வேணும்" என்று அவரை சமாதானப்படுத்தினான்.
அதற்குள் வீட்டு டிரைவர் வந்து எல்லாம் வண்டியில் எடுத்து வைத்து விட்டதாக சொல்ல மங்களத்தை அழைத்து கொண்டு கிளம்பினர்.
காரில் செல்லும்போது ஒவ்வொருவரும் ஒரு மனநிலையில் இருந்தனர்.
மதுவிற்கு அன்று தொலைபேசியில் அழைத்த அவளுடைய சித்தப்பா அவளின் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியபோது ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்தவளால் இந்த செய்தியின் தாக்கத்தை தாங்க இயலாமல் மயங்கி சரிந்தாள். அதன் பின் பைரவியும் முரளியும் வந்து அவளை சமாதானப்படுத்தி அவளை கோவையில் கொண்டு வந்து சேர்த்தனர். நேரே வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையில் சென்று இறங்கியவள் அவள் தந்தையை கட்டிக்கொண்டு அழுதாள். "அப்பா என்னப்பா ஆச்சு அம்மாக்கு எப்படிப்பா ஹார்ட் அட்டாக் வந்துச்சு "என்று அழுதவளை பலவாறாக சமாதானம் செய்தவர் மருத்துவர் அழைக்கவும் அவர் அறைக்குள் நுழைய அதுவரை அங்கு இருந்த முரளி, மதுவின் தந்தை உள்ளே சென்றவுடன் மதுவை தனியே அழைத்து திட்ட தொடங்கினான்.
"ஏன் மது பாவம் அவர் வயதானவர் நீ அவருக்கு ஆறுதல் சொல்லி ஹாஸ்பிடல் வேலையை பாக்கணும், அதை விட்டுட்டு இப்படி அழுதுட்டு இருக்க. முதல்ல கண்ணை துடைச்சுக்கோ. அம்மாக்கு ஒன்னும் ஆகாது. மனசுல அந்த நம்பிக்கையை வளர்த்துட்டு அப்பாக்கு என்ன ஹெல்ப்பண்ணனும்னு பாரு. ரகுவும் டெல்லி போயிருக்கான். நீதான் சரனையும் திவ்யாவையும் வற்புறுத்தி சுவிட்சர்லாந்துக்கு டிக்கெட் போட்டு ஹனிமூன் அனுப்புன. அவங்க ரெண்டு பேருக்கும் கால் பண்ணி இன்போர்ம் பண்ணவா." -முரளி
"இல்ல முரளி வேண்டாம். அவங்க ரெண்டு பேரும் போக மாட்டேன்னு சொன்னாங்க நான் தான் அடம் பிடிச்சு அனுப்பி வெச்சேன். இப்போ அவங்களுக்கு சொல்ல வேண்டாம். நானே மெதுவா சொல்லிக்கிறேன். ரகு அண்ணா க்கு கால் பண்ணிட்டேன். ஆனா அங்க கிளைமேட் சரியில்லாம பிளைட் எல்லாம் கேன்சல் பன்னருக்காங்க. முடிஞ்ச அளவு சீக்கிரம் வரேன்னு சொல்லிருக்கான். " -மது
"சரிடா. அவர் வர வரைக்கும் நான் இருக்கேன். " -முரளி
"இல்ல முரளி நீ கெளம்பு,. அந்த ஆஸ்ரம குழந்தைகளை நம்ம இடத்துக்கு இந்த வீக்குள்ள மாத்தணும். பைரவியால தனியா ஹாண்டில் பண்னண முடியாது. நீ அங்க இருந்த தான் சரி ஆகும். நான் இங்க பார்த்துக்கறேன். " -மது
"அது நெஸ்ட் வீக் பார்த்துக்கலாம்டா.. ஒன்னும் ப்ரோப்லம் இல்லை. " –முரளி