“ஏண்டி ஜானகி, இதென்னடி இப்படி நிக்கற..... கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம.....”, என்று சொல்ல, மூன்று மணி அரைத்தூக்கத்தில் குளித்ததில் எதையேனும் போட மறந்து விட்டோமா என்று அவசரமாகத் தன்னை குனிந்து பார்த்துக்கொண்டாள்.
“என்ன குனிஞ்சு பாக்கற..... நான் சொன்னதே புரியலையா.... அம்பது வயசாறது... பாட்டி ஆயாச்சு...... இன்னும் ஏதோ சின்னக்குழந்தையாட்டம் ஆறு கஜத்தை கட்டிண்டு நிக்கற.... பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தக் கையோட மடிசாருக்கு மாறி இருக்க வேண்டாமோ....”, என்று கூற இந்த முறை ராமன் கண்களால் முழு நர்த்தனம் ஆடியும் ஹரி அதைக் கண்டு கொள்ளாமல் அம்புஜத்தை நோக்கி...
“ஏன் பாட்டி, அறுவது வயசானா நம்ம பெரியவாள்லாம் வனவாசம் வாங்கிண்டு தேசாந்தரம் போயிடுவாளே, உங்களுக்கு கிட்டத்தட்ட எழுவது வயசாறது.... இன்னும் Rayban கண்ணாடியோட சுத்திண்டு இருக்கேள்.....”, எனக்கேட்க அதைக் காதில் வாங்காதது போலவே வீட்டை சுத்தி பார்க்கும் சாக்கில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
“அம்மா இந்தப் பாட்டி சும்மா சும்மா ஏதானும் குத்தம் குறை சொல்லிண்டே இருந்தா நான் வாயை மூடிண்டு இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். அப்பாக்கிட்ட சொல்லிடு......”
“விடுடா ஹரி...... ஒரு வாரம், பத்து நாள்தானே..... அப்பாக்காக பொறுத்துக்கலாம். நம்மாத்துல பேசறது ஒண்ணும் இல்லடா.... நேக்கு என்ன பயம்ன்னா, ஸ்வேதா ஆத்துலயும் போய் இதே மாதிரி பேசக்கூடாதேன்னு இருக்கு.....”
“அதெல்லாம் கவலைப்படாதேம்மா.... அங்கயும் இதே மாதிரி ஒரு பாட்டி இன்னைக்கு வராளாம்.... ஸோ ரெண்டு பாட்டியையும் கோர்த்து விட்டுடலாம். அவாளுக்குள்ள அடிச்சுக்கட்டும்....”
“அச்சோ என்னடா ஹரி சொல்ற. கௌரி வேற வாய்த்துடுக்கா அவாக்கிட்ட ஏதானும் பேசாம இருக்கணும். பாவம் லக்ஷ்மி மாமி. எப்படிதான் ரெண்டு பேரையும் சமாளிக்கப் போறாளோ”
“அம்மா, மாமி அவாளை சமாளிக்க கௌரியைதான் மலை போல நம்பிண்டு இருக்கா.... கௌரி அவாளை பேசியே கவுத்துடுவான்னு ஏகப்பட்ட நம்பிக்கை....”
“ஹ்ம்ம் ஏதோ சமாளிச்சா சரி.... ஐயோ, மாடியெல்லாம் பார்த்துட்டு கீழ வர்றாடா, வந்த உடனே ஏதானும் என் வாயைக் கிளறுவா. நான் போய் அவாளுக்கு காப்பியைக் கலக்கறேன்”
“அம்மா காப்பிக்குப் பதில தீபாவளிக்கு நீ ஒரு அல்வா பண்ணுவியே அதைக் கொடும்மா. வாய்ல போட்டோன்ன மூடற வாய் அப்பறம் தொறக்கவே தொறக்காது”
“கொழுப்புடா உனக்கு. அவாளுக்கு இல்லை உனக்குத் தர்றேன் இரு....”, என்று கூறியபடியே சமையலறை நோக்கி சென்றாள் ஜானகி.
ஜானகி காப்பி கலந்து எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்க, இந்த முறை அம்மங்காள் தயவில் அனைவருக்கும் நல்ல காப்பி கிடைத்தது. அதை ஆயிரெத்தெட்டு நொட்டை சொல்லிக் குடித்து முடித்தாள்.
“ஏண்டி ஜானகி, இதென்னடி நம்மாத்துல இல்லாத வழக்கமா இருக்கு.... பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறது. ஏண்டா ஹரி லவ் அது இதுன்னு ஏதானும் பண்ணித் தொலைச்சுட்டியா.....”
“அப்படி எல்லாம் இல்லை அம்மங்கா... ஸ்வேதா மாதிரி ஒரு பொண்ணு மாட்டுப்பொண்ணா வர்றதுக்கு கொடுத்து வச்சிருக்கணும். கௌரிதான் இப்படி பண்ணினா நன்னா இருக்குமேன்னு சொன்னா.... நாங்க சம்மந்தி ஆத்துல கேட்டதுக்கு அவாளும் சந்தோஷமா சம்மதிச்சுட்டா”, ஹரி ஆமாம் என்று சொல்லிவிடுவானோ என்று பயந்து நடுவில் புகுந்து சமாளித்தாள் ஜானகி.
“என்னமோ போடி.... இவரோட ரெண்டு விட்ட சித்தப்பாவோட பொண்ணு வயத்துப் பேத்தி கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடிச்சுட்டு கலிஃபோர்னியால வேலையா இருக்கு. அவளுக்கு நம்ம ஹரியைக் கேக்கலாம்ன்னு இவரண்ட சொல்லிண்டு இருந்தேன்..... அதுக்குள்ள இப்படி முடிச்சுட்டேள் நீங்க. ஏண்டா ஹரி உன்னைக் கூட நான் அவாத்துக்குப் போயிட்டு வர சொன்னேனே.... நீ ஏன் போகவே இல்லை...”, என்று கேட்க, ஹரி நல்ல வேளை போகவில்லை என்று நினைத்துக் கொண்டான்.
“நான் இருக்கறது நியூயார்க் பாட்டி. வேற ஸ்டேட். அதான்.....”
“என்னவோ போ..... ராமா, கௌரி வந்தாச்சா....”
“அவ போன வாரமே வந்துட்டா அத்தங்கா. கல்யாண வேலை எல்லாம் நிறைய இருக்கறதால, கௌரி, கௌஷிக் ரெண்டு பேருமே மூணு வாரம் லீவ் போட்டுட்டு வந்திருக்கா....”
“ஓ, அப்போ சரி. சாயங்காலமா நாம அவாத்துக்குப் போய் எல்லாரையும் பார்த்துட்டு வந்துடலாம்”,என்று கூற... சாயங்கால நிகழ்வுகளை நினைத்து இப்பொழுதே வேர்க்க ஆரம்பித்தது ஜானகிக்கு.
ஓவர் டு வேளச்சேரி....
இங்கும் லக்ஷ்மி மாமி தீபாவளியைப் போல அனைவரையும் எழுப்பி விடிவதற்கு முன்பே குளித்து தயாராக இருக்க வைத்தாள். இந்த இம்சையிலிருந்து தப்பித்தது கௌரி, கௌஷிக்கின் புதல்வன் மட்டும்தான்.